ஞாயிறு

2030ல் தமிழக முஸ்லிம்கள்​…! “ஆண்களுக்கு – தொழில்துறை​”

உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மூலப் பொருள் உற்பத்தியும் சரக்குப் போக்குவரத்தும் விரைவுபடுத்தப்பட்டதின் விளைவாக உலகளாவிய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இவை இன்னும் வீரியம் பெற இருக்கிறது. இத்தகைய உலகளாவிய நிகழ்வுகளுக்கேற்ப இந்தியாவிலும் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. பலவிதமான குளறுபடிகள் இருந்தாலும், நாட்டில் தொழில் மற்றும் வணிக ரீதியான வாய்ப்புகள் பலதுறைகளிலும் பெருகி வருகின்றன என்பது உண்மை.
பெருகி வரும் தொழில், வணிக வாய்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய பொருளாதார நிலை, வரலாற்றில் அவர்களின் வியாபார வடிவங்கள், இனி உலகளாவிய வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறித்து ஆழமாக, நுணுக்கமாக வரலாற்றின் அடிப்படையில் அலச வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இது நமது எதிர்கால தலைமுறையின் வாழ்வை வளப்படுத்திட உதவி செய்யும்.
அதே போல மற்றொரு வலிமையான மூலாதாரத் துறையான கல்வித்துறையை ஆளுமை செய்திடும் திறன் பெற்ற கல்வியாளர்களாக நமது பெண்களை உருவாக்கிட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
இன்று நம் நாட்டின் கல்வித்துறை உலகளாவிய அளவில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிகப்படியான அந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் நம்நாட்டில் கால்பதித்து வருகின்றன.
இந்தச் சூழலில் நமது பெண் சமூகத்தை கல்வித்துறையில் கோலோச்சும் அளவிற்கு கைதேர்ந்த கல்வியாளர்களாக மாற்ற வேண்டும். ஆரம்பப் பள்ளி முதல் உயர் தொழில் நுட்ப நிறுவனம் வரை கல்வியாளர்களாவும் கல்வி நிறுவனங்களை வழி நடத்தக்கூடியவர்களாகவும் அவர்களை உருவாக்க வேண்டும். நமது பெண்களை அவ்வகையில் உருவாக்குவது குறித்து விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம். இந்த இதழில் ஆண்களுக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் அவை தொடர்பான விவரங்களை வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அலசுவோம்!
தொழில்துறை :
உலகில் ஏற்படும் எந்த முன்னேற்றத்திலும் முஸ்லிம் சமுதாயம் ஒருநாளும் பின்தங்கிடக் கூடாது என்பதுதான் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இஸ்லாம் வலியுறுத்தும் தலையாய கருத்து இதனடிப்படையில் உலக மாற்றங்களை உள்வாங்கி எல்லா துறைகளிலும் மிகைத்து நிற்கும் வண்ணம் துறை வாரியாக முஸ்லிம் சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் அறிவு ஜீவிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கிறது.
வரலாற்றில் முஸ்லிம்களின் வணிகம்
தமிழக முஸ்லிம்கள் பலரின் குடும்பப் பெயர்களையும் பட்டப் பெயர்களையும் வைத்தே வரலாற்றில் அவர்களது குடும்பம் எந்த தொழிலைச் சார்ந்து இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லி விடலாம்.
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நில உடமை விவசாயிகளாகவும் ஒருசிலர் நெசவு சார்ந்த உற்பத்தி மற்றும் தொழிலாளர்களாகவும் இன்னும் சிலர் மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் விற்பனை மற்றும் போக்குவரத்து (ஜிக்ஷீணீஸீsஜீஷீக்ஷீt) தொழில் செய்பவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.
இதில் மிகப் பெரும்பான்மையாக தமிழக கடலோரம் வாழ்ந்த முஸ்லிம்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் சர்வதேச தொழில் செய்பவர்களாக வாழ்ந்துள்ளனர்.
நாட்டின் உட்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்து உலகின் பல பகுதிகளுக்கும் பாய்மரப் படகுகள் மூலம் பரம்பரை பரம்பரையாக ஏற்றுமதி தொழில் செய்து வந்துள்ளனர். இவை அல்லாமல் விவசாயம், தோல் பதனிடும் தொழில் என்று உழைத்து உண்ணும் உன்னதமான சமூகமாக வரலாறு முழுவதும் வாழ்ந்துள்ளனர்.
பழவேற்காடு, மைலாப்பூர், புதுச்சேரி, கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார், காரைக்கால், நாகை, அதிராம் பட்டிணம், மல்லிப் பட்டிணம், தொண்டி, வேதாளை, கீழக்கரை, உத்திர கோச மங்கை, பெரியபட்டிணம், காயல்பட்டிணம், குளச்சல், இவை அனைத்தும் சிறிய, பெரிய துறைமுகங்களாக உலகின் பல மார்க்கத்திற்கும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகப் பட்டிணங்களாக உலகின் பலநாட்டு வணிகர்களும் வந்துபோகும் சர்வதேச நகரங்களாகவும் இருந்துள்ளன.
உலகைச் சுற்றிய கடற்பயணி இப்னு பதூதா அவர்கள் இதுகுறித்து தனது பயணக் குறிப்பில் விவரித்துள்ளார்.
18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகள் முழுவதிற்கும் தங்களது வணிகப் படகுகளை அனுப்பும் சர்வதேச வணிகர்களாக முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வந்தது. அதனால்தான் 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் கடலோரப் பகுதிகளிலேயே வாழ்ந்துள்ளனர். மீதமுள்ள மக்கள் கடலோரப் பகுதிகளுக்கு சரக்குகள் அனுப்புவதற்கு தமிழகத்தின் உட்புறத்தில் வாழ்ந்தனர்.
16 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதையும் கொள்ளையடிக்கக் கிளம்பிய ஐரோப்பியர்களால்தான் முஸ்லிம்களின் கடல் வாணிபம் சிதைவுற்றது. ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சியை வீழ்த்திய இரத்தக் கையோடு இந்தியாவை நோக்கி வெறிபிடித்து வந்த போர்ச்சுகீசியர்களின் அட்டூழியமும் அவர்களுக்குப் பின்னால் வந்த டச்சு, பிரான்சு மற்றும் பிரிட்டிஷாரின் வஞ்சம் நிறைந்த வக்கிர புத்தியும் சேர்ந்து முஸ்லிம்களின் வணிகத்தைப் பாழாக்கி வாழ்வதாரங்களைப் படுகுழியில் தள்ளியது.
சிலுவை யுத்தக்காரர்களின் வாரிசுகளான இந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை அழிப்பதையே முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள். இன்றுவரை அது தொடர்கிறது என்பதே அதற்கு சான்று.
இந்த வரலாற்றுப் பின்னணியை தமிழக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க வேண்டும்.
இலங்கை உள்ளிட்ட  இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளுக்கும் தமிழக கடலோரப் பட்டிணங்களுக்கும் இடையே செழித்து வளர்ந்திருந்த தொழில், வியாபார, கலாச்சார, திருமண உறவுகளினால் மேம்பட்டிருந்த தமிழக முஸ்லிம்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் 19 ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த இந்த  ஐரோப்பிய படுபாவிகள் அழித்து நாசம் செய்தனர்.
இந்த நயவஞ்சக நாசகார கூட்டத்தின் சதித் திட்டங்களில் சிக்கி முஸ்லிம்களின் வியாபாரங்கள் நசிந்து போயின. இதனால் வணிகத்தை இழந்து பொருளாதாரத்தை இழந்து நின்ற முஸ்லிம் சமுதாயம் வேறுவழியின்றி 1900க்குப் பிறகு தொழிலாளர்களாகவும் தோட்டங்களில் கூலி வேலை செய்திடவும் அயல் நாடுகளுக்கு பிழைப்பு தேடி ஓடினர்.
1950க்குப் பிறகு அரபு மண்ணில் பீறிட்டுக் கிளம்பிய எண்ணெய் செல்வமும் அதனால் உருவான வேலை வாய்ப்புகளும் தமிழக முஸ்லிம்களை “வா, வா” என்று அழைத்தது.
1965லிருந்து அரபு நாடுகளை நோக்கி கூட்டம் கூட்டமாக மாதச் சம்பளத்திற்கு பணியாற்றும் அடிமைகளாக ஓடத் துவங்கிய ஓட்டம் தற்போது உச்சநிலையை அடைந்து, வேறு வழியே கிடையாது, அரபு நாடுகள் சென்றால் தான் வாழ்வு என்ற சிந்தனையில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது பெரும்பான்மையான முஸ்லிம் சமுதாயம்.
19 ஆம் நூற்றாண்டு வரை வரலாறு முழுவதும் வணிகர்களாக வாழ்வாங்கு வாழ்ந்தனர். அந்த வணிகத்தில் நேர்மையும் நீதியும் செலுத்தினர். இதனால் அவரவர் திறனுக்கேற்ப இறைவனுடைய அருளால் பலர் தொழில் அதிபர்களாக, மிகப் பெரும் செல்வந்தர்களாக மாறினர். மார்க்கப் பிடிப்பும் ஈகை குணமும் அவர்களை வாரி வாரி வழங்கும் வள்ளல்களாக மாற்றியது. மார்க்கத்திற்காக, மக்களுக்காக, அறப்பணிகள் தடையின்றி தொடர்ந்திட அள்ளி அள்ளிக் கொடுத்தனர். பரம்பரை சொத்துக்களை எல்லாம் வஃக்பு செய்து இறைவனின் அருளைப் பெற்றனர்.
வணிகர்கள் என்ற அடையாளம் மாறி மாத ஊதியத்திற்கு அரபு நாடுகளுக்குச் செல்லத் துவங்கியவுடன் வருமானம் சுருங்கியது. இப்போது அடிப்படைத் தேவைக்கே அதிக நேரம் உழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் முஸ்லிம் சமுதாயம் சிக்கித் தவிக்கிறது. இந்த மாத ஊதிய மனப்பான்மை முஸ்லிம்களின் வருமானத்தையும் ஈகை குணத்தையும் ஒரு வட்டத்திற்குள் சுருக்கி விட்டது.
இன்றைக்கு இந்தியாவில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் சில சமுதாயத்தினரிடம் காணப்படும் செல்வச் செழிப்பு வியாபாரத்தை விட்டு மாத ஊதியத்திற்கு மாறிய முஸ்லிம்களிடம் இல்லை.
இதனால் சமுதாயத்தில் தடையின்றி நடைபெற வேண்டிய சமூக நலப் பணிகள், வழிபாட்டுத் தளங்களின் விரிவாக்கங்கள் மற்றும் கல்விப் பணிகள் அனைத்தும் தேக்க நிலையிலேயே உள்ளன. இதனை இன்றைய இளைஞர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு தொலைநோக்கு செயல் திட்டத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை நோக்கி முஸ்லிம் சமுதாயத்தை திருப்ப வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. தொழில், வணிக ரீதியாக நாம் இழந்த இடத்தை மீண்டும் எட்டிப் பிடிக்க வேண்டும். நாம் நமது பாரம்பரியமான பொருளீட்டும் வழிமுறையை எந்தக் காரணத்திற்காகவும் விடக் கூடாது. மாத ஊதியத்திற்கு வேலைசெய்வது நமது பாரம்பரியத்தில் நடைபெறாத ஒன்று. நமக்கு உகந்த பாதையும் அல்ல. இதில் மாற்றம் ஏற்படுவதற்கு மீண்டும் தொழில் துறையை கைப்பற்றுவதற்கு அடிப்படையாக முதலில் நமது குழந்தைகளின் உயர்கல்வியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
உயர்கல்வியில் மாற்றம் தேவை :
கடந்த 20 ஆண்டுகளாக நமது இளைய தலைமுறையின் உயர்கல்வியில் நமது பாரம்பர்யமான பொருளீட்டும் முறையான தொழில், வியாபாரம் குறித்த படிப்புகளுக்கு முதன்மை தந்து அவற்றில் இன்றைய நவீன வியாபார யுக்திகளை கற்றுத் தேறியவர்களாக உருவாக்காமல் பொறியியல் படித்து விட்டு ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதச் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதியுடையவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் தொடர்ச்சியாக இன்றும் பாரம்பரியமாக தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகள் கூட இப்படித் தான் அடிமைகளாக உருவாக்கப்படுகின்றனர். நமது முந்தைய தலைமுறையினர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தனர். ஏராளமான சமூகப் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் இப்போதைய தலைமுறையினர் அந்த பாரம்பரிய பாதையை விட்டு அகன்று குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதற்கு பெற்றோரின் அலட்சியமும் நமது பாரம்பரிய வரலாறு குறித்த புரிதல் இன்மையுமே காரணம். தாங்கள் முதலாளிகள் என்ற அந்தஸ்தோடு வீற்றிருப்பது போல தங்களது குழந்தைகளையும் முதலாளிகளாக உருவாக்கிட இன்றைய முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.
சில்லரை வணிகமாக இருந்தாலும் மொத்த வணிகமாக இருந்தாலும் அவைகளை திறனோடு நிர்வகித்து தேர்ச்சி பெறும் ஆற்றல் முஸ்லிம் சமுதாயத்தின் இயல்பிலேயே ஊறிய குணங்கள். நாம் நம்முடைய வேர்களை விட்டு விடக் கூடாது. வியாபாரம் என்பது இறைவனுடைய அருள் நிறைந்த துறை. நேர்மையான வியாபாரம் என்பது இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடு. அதில் இறைவன் தன்னுடைய பரக்கத்தை எல்லையின்றி வாரி வழங்குகின்றான்.
இன்று உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டது. பொருள் வாங்கிப் பொருள் விற்பதற்கான சந்தைக்களம் உலகளவில் பறந்து விரிந்த சந்தைக் களமாக மாறி விட்டது. எந்நாட்டவரும் உலகில் எந்த நாட்டிற்கும் பொருட்களை விற்கலாம் வாங்கலாம் தடையேதும் கிடையாது. அரசின் சட்ட திட்டங்களும் துறைசார்ந்த வழிகாட்டும் நெறிமுறைகளும் சர்வதேச வர்த்தகம் செய்ய ஆர்வமுடையவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உதவிகளையும் செய்து வருகின்றன.
வியாபாரத்தில் முஸ்லிம்களின் இன்றைய நிலை :
இன்றைய முஸ்லிம்கள் அதிகம் ஈடுபட்டுள்ள தொழில்களான மளிகை, ஜவுளி, ரெடிமேட், தோல், ஃபேன்ஸி ஸ்டோர், காலனி கடைகள் போன்ற சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை நிதிப் பற்றாக்குறைதான். இதனால் சரக்கு கொள்முதல் செய்வதிலும் விற்பனை செய்வதிலும் இலாபம் குறைவதோடு பலவிதமான சங்கடங்களும் ஏற்படுகிறன்றன. ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி அவர்களால் சிந்திக்க இயலாத நிலை உருவாகிறது. இந்த முதலீடு பற்றாக்குறை நெருக்கடியால் பெட்டிக்கடை மனப்பான்மை நம் மனதில் குத்தகை எடுத்து குடியிருக்கிறது.
வியாபாரத்தில் நிதிப் பற்றாக்குறையைப் போக்க வேறு வழியில்லாமல் சிலர் வங்கிகளின் உதவியை நாடுகின்றனர். வங்கிகளில் தங்களது பரம்பரை வீடு, சொத்துக்கள், நகைகள் முதலானவற்றை அடகு வைத்துவிட்டு தற்காலிக கடன் என்ற ளிஞி வாங்குகின்றனர்.
ஒரு வளரும் அல்லது வளர்ந்த தொழிலை அழிப்பதற்கு வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை. வங்கிகளில் (வட்டிக் கடைகளில்) OD வாங்கினாலே போதும். வெகு விரைவில் தொழில் அழிந்துவிடும். ளிஞி என்ற தற்காலிக கடனுக்கு 18 விழுக்காடு வட்டி போட்டு தீட்டுகின்றனர். இரவு பகல் பாராமல் இரத்தம் சிந்தி உழைத்து உண்டாக்கிய இலாபம் எல்லாவற்றையும் வங்கிகள் வாயில் போட்டுக் கொண்டால் தொழில் எப்படி செழிக்கும்? வங்கியில் ஓ.டி. வாங்கிய பிறகு அதை அடைத்து முடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
வட்டி புழக்கத்தில் உள்ள இடத்தில் வறுமையும், வெறுமையும் நிறைந்திருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதை நினைவு கூற வேண்டும்.
இதற்கு இஸ்லாமிய அடிப்படையில் நாம் தீர்வு கண்டாக வேண்டும்.
வரலாற்றில் ஐரோப்பியர்களிடம் முஸ்லிம்களின் வியாபார யுக்திகள் தோற்றுப் போனதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அந்த நேரத்தில் வந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம்களின் இந்த குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் வியாபார முறைகளையும் ஒற்றுமை இல்லாத் தன்மையையும் பார்த்துவிட்டு குறிப்பாக பிரிட்டிஷார் லண்டனில் வைத்து ஒரு மிகப்பெரிய முதலீட்டு வணிக நிறுவனத்தை உருவாக்கினர். அதுதான் ணிகிஷிஜி மிழிஞிமிகி சிளிவிறிகிழிசீ உலகின் முதல் கார்ப்பரேட் நிறுவனம்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பார்த்த தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிபம் தொடர்பாக அவர்களின் வழிமுறைகள் மற்றும் அன்றைய முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருந்தது என்றால் ஒருவரிடம் 1 இலட்ச ரூபாய் முதலீடு இருந்தது என்றால் அந்த 1 இலட்ச ரூபாயை வைத்து வியாபாரம் செய்து சம்பாதித்து வந்தார். தன்னிடம் உள்ள முதலீடு, தான் செய்யும் வியாபாரம், அதன்மூலம் பெறுகின்ற இலாபம் வேறு யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த குறுகிய சுயநல மனநிலைதான் பெருவாரியான முஸ்லிம் வணிகர்களிடம் இருந்தது. வியாபார ரீதியான வாய்ப்புகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ளும் பரந்த மனப்பான்மை அறவே இல்லாமல் போனது.

(இன்றும் இதுதான் மிகப்பெரிய குறையாக உள்ளது).சிறுமுதலீட்டாளர்கள் ஒன்று கூடி சிறிய சிறிய தொகைகளை ஒரே தொகையாக மாற்றி பெரும் தொகையுடன் கூடிய முதலீட்டு நிறுவனத்தை உருவாக்கினர். அந்த பெரும் தொகையை இந்தியாவிற்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு யாரெல்லாம் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கினார்களோ அவர்களிடம் அந்த பெரும் தொகையை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்தனர். இதனால் முஸ்லிம்களுக்கு சரக்கு கிடைக்காமல் போய்விட்டது. பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான பணத்திற்கு முன்னால் முஸ்லிம்களின் தனிநபர் சிறிய தொகை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகிப் போனது.

அந்த நேரத்தில் கூட பிரிட்டிஷாரைப் போல தாங்களும் ஒத்த கருத்துடைய வணிகர்கள் ஒன்று கூடி தனித்தனி முதலீடுகளை ஒரே முதலீடாக மாற்றி பெரிய அளவிற்கு கொள்முதல் செய்ய வேண்டும். மாறி வருகின்ற வணிகமுறைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வரவில்லை. உலக வியாபார முறைகளின் மாற்றம் குறித்து விளங்கிக் கொள்ளாத தமிழக, இலங்கை முஸ்லிம்கள் குறுகிய காலத்திலேயே வியாபாரம் செய்வதற்கு சரக்கு கிடைக்காமல் சிக்கிக் கொண்டனர்.

17 ஆம் நூற்றாண்டில் EAST INDIA COMPANY இன் உருவாக்கத்தில் துவங்கிய கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் இன்று உலகத்தை ஆட்டிப் படைக்கிறது.

இன்றைய முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு அதிகப்படியான நிதியைத் திரட்ட வேண்டும். தற்போதுள்ள வியாபார நிறுவனங்களில் நிதிப் பற்றாக்குறையைக் களைய வேண்டும் என்றால் வட்டிக் கடைகளான வங்கிகளை நாடுவதை நிறுத்தி விட்டு கூட்டு முதலீடு என்கிற இஸ்லாம் வலியுறுத்தும் ஹலாலான வழிமுறைக்கு மாற வேண்டும்.

ஒரே அளவுள்ள ஓராயிரம் முதலீடுகளை ஒருங்கிணைத்து தொழில் தொடங்க வேண்டும். அதாவது இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் போல உருவாக்கப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்குகள் விற்பதிலும் வங்கிகளிடம் கடன் பெற்றும் முதலீடுகளை திரட்டுகின்றன. இதற்காக இந்திய அரசின் கார்ப்பரேட் சட்டமும் கம்பெனி சட்டமும் அவர்களை நெறிப்படுத்துகிறது. இதில் பல மறைமுகமான திட்டங்கள் உள்ளன. முஸ்லிம்கள் இதே வழிமுறையை கையாளுவதற்கு மார்க்கம் தடை செய்கிறது. பிறகு என்ன செய்வது?

வர்த்தகக் கூட்டமைப்பு :

இன்றைய உலகிலும் இனிவரும் காலத்திலும் வியாபாரம், தொழில் ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும் என்றால் கூட்டு முதலீடு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்தால் தான் முடியும். அடிப்படையில் தனித்தனி சிறுமுதலீடு என்ற மனப்பான்மையை விட்டு முஸ்லிம் சமூகம் வெளியே வரவேண்டும். சேர்ந்து முதலீடு செய்வது சேர்ந்து சம்பாதிப்பது இலாபத்தையும் நஷ்டத்தையும் சேர்ந்து பகிர்ந்து கொள்வது என்ற கொள்கை தான் இனி வெற்றி பெறும்.

இதற்கு மாநில அளவில் ஒரு தொழில் கூட்டமைப்பு மற்றும் வழிகாட்டி நிறுவனம் CHAMBER OF COMMERCE உண்டாக்கப்பட வேண்டும். அந்நிறுவனத்தின் மூலம் திறனான வல்லுனர்களை பணியமர்த்தி தொழில் மற்றும் முதலீட்டிற்கு வாய்ப்புள்ள துறைகள் எதுவென்று ஆராய வேண்டும். முதலீடு செய்வதற்கான திட்ட அறிக்கை, முதலீட்டாளர்கள், வரி விதிப்புகள், சந்தை வாய்ப்புகள் போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்து முதலீடு செய்வதற்கு இந்த கூட்டமைப்பு நிறுவனம் வழிகாட்ட வேண்டும்.

மேலும் அப்படிப்பட்ட நிறுவனம் செயல்படுவதற்கு ISLAMIC COMPANY LAW இஸ்லாமிய நிறுவனச் சட்டம் குறித்து தெளிவுடைய அறிஞர்களின் வழிகாட்டுதல் தேவை.

சமுதாயப் பற்றுடைய பெரும் செல்வந்தர்கள் இப்படிப்பட்ட நிறுவனத்தை உருவாக்கிட முன்வந்தால் மாநில அளவில் அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புள்ளது! இல்லையென்றால் ஒவ்வொரு பகுதிகளிலும் கூட இந்த தொழில் கூட்டமைப்பு மற்றும் வழிகாட்டி மையத்தை உருவாக்கலாம்.

வாய்ப்புகளைக் கண்டறிதல்:

தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அனுதினமும் உலக வர்த்தகம், அதன் போக்கு, இந்திய வர்த்தக வளர்ச்சி, விவசாயம், உணவு உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி, பிற நாடுகளின் தேவைகள், அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், பட்ஜெட் விவரங்கள், வரி விதிப்புகள் போன்ற அனைத்தையும் அங்குலம் அங்குலமாக கண்காணிக்க வேண்டும்.

அடுத்த 20 ஆண்டுகளில் வியாபார ரீதியாக வாய்ப்புகள் எந்தெந்த துறைகளில் பெருக உள்ளதோ அவற்றில் நாமும் பங்கு பெறுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அத்திட்டத்தில் முதன்மையானது அந்த துறைகளில் அறிவும் நுணுக்கமும் பெறுவதற்கான உயர்கல்வியை நமது குழந்தைகளுக்கு தொடர்ந்து புகட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இடைவெளி இல்லாத, தொடர்ச்சியாக நுண்ணறிவு பெற்ற வல்லுனர்களை, துறை வாரியாக ஒவ்வொரு காலத்திற்கும் உருவாக்கிடும் கல்வி அமைப்பு எந்தச் சமூகத்திடமோ நாட்டிடமோ இருக்கிறதோ அந்தச் சமூகமும் நாடும் உலகிற்கு வழிகாட்டிடும் முதன்மை இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்றைக்கு அமெரிக்கா, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளிடம் உள்ளது போன்ற அறிவு ஜீவிகள் பட்டாளம் துறை வாரியாக தொய்வில்லாமல் நமது தமிழக முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

இதில் தொய்வு ஏற்பட்டால், அலட்சியம் காட்டினால் உலக முன்னேற்றத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கிப் போய்விடுவோம். இன்று அதுதான் நடந்துள்ளது. இனி அவ்வாறு நடைபெறுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

நன்றி: 'சமூக நீதி முரசு' மாத இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக