ஞாயிறு

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு

இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே உலகள வில் இத்தொழிலில் இருக்கும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகள் நமக்கு போட்டியாக வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதும் இன்னொரு பிளஸ் பாயின்ட்.

தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ளவர்கள் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம்.

 தேங்காய் நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்தத் தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது.

யூனிட் அமைப்பு!

இந்தத் தொழிலை தொடங்க நான்கு மாதங்கள் ஆகும். ஆண்டுக்கு சுமார் 140 டன் தேங்காய் நார் கயிறு யூனிட் தொடங்க 20 சென்ட் நிலம் தேவை. சொந்தமாக இடமிருந்தால் நல்லது. அது இல்லாதவர்கள் குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். தொழிற்சாலை, அலுவலகம், ஸ்டோர் ரூம் போன்றவைகளுக்காக 1,200 சதுர அடி ஷெட் தேவைப்படும்.

தயாரிக்கும் முறை!
காட்டன் நூல் தயாரிப்பு போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப் படுகிறது. முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீர்விட்டு ஊறவைத்து. இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து 'வில்லோயிங்’ எனப்படும் மரத்தினாலான இயந்திரத்தில் இட்டால் கழிவுகள் அகன்று நார் கிடைக்கும். அதன் பிறகு அந்த நாரை 'சில்வரிங்’ மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து கயிறாகத் திரித்தால், விற்பனைக்கு ரெடி!
இயந்திரங்கள்!
வில்லோயிங், சில்வரிங், ஸ்பின்னிங் மற்றும் உலர வைக்கும் இயந்திரம் போன்றவை தேவைப்படும். இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும் தமிழகத்திலேயே, குறிப்பாக பட்டுக்கோட்டையிலேயே கிடைக்கிறது.

மூலப்பொருள்!
தேங்காய் நார்தான் இதன் முக்கிய மூலப்பொருள். மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோவை மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால் அங்கிருந்து தேங்காய் மட்டையை வாங்கிக் கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 1.30 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை ஓர் ஆண்டுக்கு கிடைக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் 1.90 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மூலப்பொருள் கிடைப் பதில் தட்டுப்பாடு இருக்காது.
புதிதாக யூனிட் வைக்க நினைப்பவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் 130 டன் தேங்காய் மட்டை வரை தேவைப்படும்.

மின்சாரம்!
இந்த தொழிலுக்கு 6.50 ஹெச்.பி(hp) மின்சாரம் தேவைப்படும். தேங்காய் நார் கயிறு தயாரிப்பு குடிசைத் தொழிலின் கீழ் வருவதால் மின்சாரத்தை அரசு சலுகைக் கட்டணத்தில் வழங்குகிறது.

வேலையாட்கள்!
ஒரு ஷிப்ட் வேலை பார்க்க ஒன்பது திறமையான தொழிலாளர்கள் தேவை. இரண்டு ஷிப்ட் என்று வரும்போது 18 வேலையாட்கள் தேவை. மேலும் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கு ஒரு சூப்பர்வைசர் தேவை. இதில் 90 சதவிகித வேலைகள் பெண் தொழிலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயக் கூலித் தொழிலா ளர்களை இந்தத் தொழிலில் பயன்படுத்திக் கொள்ளலாம். இயந்திரங்களை எப்படி இயக்குவது என்பதை இயந்திரங் களை சப்ளை செய்யும் நிறுவனமே தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்தில் கற்றுத் தந்துவிடும்.

தண்ணீர்!
தினமும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதற்கான தண்ணீரை ஆழ்குழாய் கிணற்றின் மூலம் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே, நல்ல தண்ணீர் வசதி இருக்கும் இடமாகப் பார்த்து யூனிட்டை தொடங்குவது அவசியம். இந்தத் தொழில் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் தயாரித்த பொருளை எவ்வித பிரச்னையும் இல்லாமல் சப்ளை செய்யலாம்.
மூலதனம்
முதல் வருட செயல்பாட்டு மூலதனமாக 1.71 லட்ச ரூபாய் தேவைப்படும். இது 15 நாட்களுக்கான மூலப் பொருட்கள், ஏழு நாட்களுக்கான முடிக்கப்பட்ட ஸ்டாக்குகள் மற்றும் 15 நாட்கள் விற்ற சரக்குக் கான வரவேண்டிய தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய தொகையாகும்.
எதிர்பாராத செலவுகள்!
எவ்வளவுதான் பட்ஜெட் போட்டு செலவு செய்தாலும் துண்டு விழவே செய்யும். அதுபோல இந்த பிஸினஸில் திடீர் செலவுகளும் வரும். கட்டட வேலைகள், இயந்திரங்கள், மின்சாரம், அலுவலக உபகரணங்கள் மற்றும் ஃபர்னிச்சர் போன்ற விதங்களில் 5 சதவிகிதம் அதாவது சுமார் 39 ஆயிரம் ரூபாய் வரை ஏற்படக்கூடும்.

ஆரம்ப கட்ட செலவுகள்!
மின் இணைப்பிற்கான டெபாசிட் தொகை, போக்கு வரத்து, கடன் வாங்குவதற்கு என ஆகும் செலவுகள் போன்ற வகையில் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும்.

பிரேக் ஈவன்!
மொத்த உற்பத்தி திறனில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடங்களில் முறையே 36%, 34% 31% என இருந்தால் இத்தொழிலில் பிரேக் ஈவன் ஏற்படும். அதற்கான உற்பத்தித்திறன் 35 டன், 34 டன் மற்றும் 33 டன் என்று இருக்க வேண்டும்.

ரிஸ்க்!
இத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருளான தேங்காய் மட்டை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம். அப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வரும். அதனால் நம் லாபம் குறையலாம். போட்டி அதிகரித்து வருவதால், பொருட்களின் விலை குறையவும் வாய்ப்புண்டு.

மார்க்கெட்டிங்!
நாம் தயார் செய்யும் தேங்காய் நார் கயிறை கேரளாவில் இருக்கும் தேங்காய் நார் பொருட்கள் தயாரிப்பு யூனிட்களுக்கு விற்பனை செய்யலாம். தவிர, தமிழ்நாட்டில் சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தேங்காய் நார் கயிறுகளை வாங்க நிறைய வியாபாரிகள் இருக்கின்றனர்.

ஏற்றுமதியிலும் கலக்கலாம்!
மண் அரிப்பைத் தடுக்கும் வலைகள் மற்றும் பழத் தோட்டங்களில் கொடிகள் படர்வதற்கும் பயன்படுகிறது. இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. உலகளவில் 3,50,000 டன்கள் ஜியோ- டெக்ஸ்டைலுக்கான சந்தை இருக்கிறது. ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிப்பில் 98% சிந்தெடிக் மெட்டீரியல் மூலம் தயாரித்த பொருட்களுக்கு பதில் தேங்காய் நார் மூலம் தயாரிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் இந்த பொருளுக்கான தேவை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்தத் தொழில் கிடையாது என்பதோடு அங்கு ஆரம்பித்தால் அதிக செலவு ஏற்படும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பலம். எதிர்காலத்தில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளில் இந்தத் தொழில் தொடங்கப்பட்டாலும் நமக்கு அதிகம் பாதிப்பிருக்காது.

ஃபைனான்ஸ்!
மொத்த மூலதனத்தில் 5 சதவிகிதத்தை கையிலிருந்து போட வேண்டும். அந்த வகையில் இந்தத் தொழில் தொடங்குபவர் சுமார் 58,000 ரூபாய்வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். மூன்று லட்ச ரூபாய், அதாவது 30% வரை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (ரிக்ஷிமிசி) மூலம் மானியம் கிடைக்கும். 10 லட்சத்துக்கு மேல் 25 லட்சத்துக்குள் எனில் 10% மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது வங்கியில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த மானியத் தொகை வங்கியில் வாங்கிய கடனுக்கு வரவாக டெபாசிட் செய்யப்படும். மானியத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் காலகட்டத்தில் அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி பிடிக்கப்பட மாட்டாது. 65% வரை அதாவது 6.50 லட்சத்துக்கு மட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்க வேண்டியதிருக்கும்.

நிகர லாபம்
மொத்த விற்பனையில் 15-20% வரை லாபம் கிடைக்கும்.

பிஸ்கட் செய்வது எப்படி

நொறுக்குத் தீனி வகைகளில் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது.


தவிர, சில மாதங்கள்வரை வைத்திருந்து விற்றாலும் பொருள் கெடாது என்பது இதிலுள்ள இன்னொரு பெரிய பிளஸ் பாயின்ட். விதவிதமான சுவையோடு, தரமாகவும் பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு நம்மூர் பேக்கரிகள் நல்ல உதாரணம். அதுவே புதிய தொழில்நுட்பங்களோடு இறங்கும்போது பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு இத்தொழிலில் சாதிக்க வும் நிறையவே வாய்ப்புள்ளன.

சந்தை வாய்ப்பு!

பெருநகரம், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்கள் என சந்தை வாய்ப்புகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் சந்தையை பிராண்டட் தயாரிப்புகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், கிராமப்புற மற்றும் மிகச்சிறிய நகரங்களின் சந்தையை லோக்கல் தயாரிப்புகள்தான் கைகளில் வைத்திருக்கின்றன. புதிதாக தொழிலில் இறங்கும்போது இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது சுலபம். முக்கியமாக பேருந்து நிலையம், ரெயில் நிலையம், டீக்கடைகள், நெடுஞ்சாலை உணவகங்கள் போன்ற இடங்களில் அதிகளவிலான விற்பனை வாய்ப்புகள் உள்ளது. 50-60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் இதுபோன்ற இடங்களை மையப்படுத்தி டெலிவரி வேன் மூலம் விற்பனையைப் பெருக்கலாம்.

தயாரிப்பு முறை!

சுலபமான தயாரிப்பு முறைதான். கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சர்க்கரை, பால், வனஸ்பதி, போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து, சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு 'டவ் மெஷின்’ மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து, பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும். பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு, பாக்கெட்களில் அடைத்தால் பிஸ்கெட்டுகள் விற்பனைக்குத் தயார்.

தரக்கட்டுபாடு

உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெறவேண்டும்.

நிலம் மற்றும் கட்டடம்!

இந்தத் தொழிலுக்கு குறைந்த பட்சம் 800 சதுரஅடி இடம் தேவைப்படும். நிலமாக வாங்கி கட்டடம் கட்டுவதற்குப் பதிலாக, கட்டடமாக வாங்குவது நல்லது. தேர்ந்தெடுக்கும் இடத்துக்கேற்ப விலை நிலவரம் இருக்கும். பிஸ்கெட் தயாரிக்க 400 சதுர அடி இடமும் மீதமுள்ள இடத்தில் பேக்கிங் மற்றும் சில்லறை விற்பனை செய்வதற்கும் பயன் படுத்தலாம். இதற்கு ரூபாய் 1.25 லட்சம் வரை செலவாகும்.

இயந்திரம்!

ஐம்பது டன் உற்பத்தி என்ற இலக்கு வைக்கலாம். ஆண்டுக்கு 330 வேலை நாட்கள், தினமும் 12-14 மணி நேரம் வேலை செய்தால் இந்த இலக்கை எட்டலாம். இயந்திரங்கள் புதுடெல்லி, செகந்தராபாத் போன்ற இடங்களில் கிடைக்கும். சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் மாவு பிசைவதற்கு வேலை ஆட்கள் வைத்துக் கொள்ளலாம். இது செலவை சற்று குறைக்கும்.

கூடுதல் செலவுகள்!

தயாரிப்பு செலவு மட்டுமல்லாமல் ஃபர்னிச்சர், அளவை சரி பார்க்கும் இயந்திரம், பேக்கிங் செய்ய, ஸ்டோர் செய்து வைக்க என்ற வகையில் 90,000 ரூபாய்வரை செலவாகும். தினமும் 20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் தேவை.

மூலப் பொருள்கள்!

கோதுமை மாவு, மைதா மாவு, ஈஸ்ட், நெய் அல்லது வனஸ்பதி, சர்க்கரை, பால் அல்லது பால் பவுடர், உப்பு மற்றும் உணவு கலர் இவைதான் மூலப்பொருள். எல்லாமே தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய பொருள்தான்; அதனால் உற்பத்தியில் தொய்வு இருக்காது.

வேலையாட்கள்!

முன்னனுபவம் உள்ள நபர் - 1

உதவியாளர்கள் - 2

விற்பனையாளர் - 1

வேன் அல்லது சிறிய ஆட்டோ ஓட்டத் தெரிந்த விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஐந்து நபர்கள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்.

உற்பத்திக்கு முந்தைய செலவுகள்!

நிர்வாகச் செலவுகள், சட்டப்பூர்வமான கட்டணங்கள், தொழில் தொடங்குவதற்கு முந்தைய முதலீட்டுக்கான வட்டி என 50,000 ரூபாய் செலவாகும்.

மானியம்

இத்தொழில் சிறுதொழிலுக்கு கீழ் வருவதால் மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைக்கும்.

சுறுசுறுப்பாக செயல்பட நினைக்கும் இளைஞர்களுக்கு ஏற்ற தொழில் இது என்பதால் இதில் தாராளமாக இறங்கி, முன்னேற்றம் காணலாம்!

-பானுமதி அருணாசலம்

சணல் பைகள் தயாரிப்பு

 பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை, சணல் பைகளுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. துணிப்பைகள் அளவுக்கு விலை அதிகமாக இல்லாமலும் அதே அளவுக்கு உழைக்கும் தன்மையோடும் இருப்பது சணல் பைகளின் ப்ளஸ் பாயின்ட்! இத்தனை வரவேற்பு இருக்கும்போது அந்தத் தொழிலில் இறங்கிவிடுவது நல்ல முடிவாகத்தானே இருக்கமுடியும்.

இதற்கு முதலீடு என்று பார்த்தால் பெரிய அளவில் ஏதுமில்லை. ஐந்தாயிரம் ரூபாய்க்கு தையல் இயந்திரமும், பத்துக்கு பத்து இடமும் இருந்தால் போதும். மற்றபடி பைகள் தயாரிப்பதற்கான நூல், கைப்பிடி போன்றவை பெரிதாக செலவு வைக்கக்கூடிய விஷயங்கள் இல்லை.

இந்த சணல் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான சணல் ஷீட்கள் பல சைஸ்களில் கிடைக்கின்றன. இந்த ஷீட்கள் தயாராவது மேற்கு வங்காளத்தில்தான் என்றாலும் இதன் டீலர்கள் தமிழ்நாடு அளவில் பரவலாக இருக்கிறார்கள். ஒரு மீட்டர் ஷீட் 50 ரூபாய் முதல் 120 ரூபாய்வரை தரத்துக்கு ஏற்ப கிடைக்கிறது. 200 மீட்டர் அளவுள்ள ரோலாக மொத்தமாக வாங்கும்போது விலை கொஞ்சம் குறைவாகவே கிடைக்கிறது. பல நிறங்களிலும் கிடைக்கும் இந்த சணல் ஷீட்களை டீலர்களிடம் பேசி வாங்கிக்கொண்டால் பை தயாரிக்கத் தொடங்கிவிடலாம்.

சாதாரண பைகள் என்பதைத் தாண்டி இப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் சணல் பைகள் உபயோகிப்பது ஃபேஷனாகவே இருக்கிறது. அவர்களது ரசனைக்கு ஏற்றபடி பல மாடல்களில் பைகளைத் தயாரிப்பது லாபத்துக்கு வழி வகுக்கும். செல்போன் கவரில் இருந்து விசிட்டிங் கார்ட் வரை சணல் தயாரிப்புகளில் சாத்தியமாக இருக்கிறது. இதனால் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.

ஒரு பை தைப்பதற்கு நூல், கைப்பிடி, சணல் ஷீட் போன்றவற்றின் விலை மற்றும் தைப்பவரின் சம்பளம் என்று எல்லாவற்றையும் கணக்கிட்டால் அதிகபட்சம் பதினைந்து ரூபாய் ஆகும். இந்த பை சாதாரணமாக 50 முதல்75 ரூபாய்க்கு விலைபோகிறது. இதிலேயே ஏதாவது டிஸைன்கள், மாடல்கள் போன்றவற்றை உருவாக்கினால் அதற்கேற்ப விலையை ஏற்றிக் கொள்ளலாம்.

ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 பைகளைத் தயாரிக்கலாம். டிஸைன் கொண்டவை என்றால் ஒரு நாளைக்கு 20 முதல் 30 பைகள் வரை தயாரிக்கமுடியும். இந்தப் பைகளில் ஸ்கிரீன் பிரின்ட் செய்துகொடுத்து இன்னும் அதிக வருமானம் பார்க்கமுடியும். மாதத்துக்கு பத்தாயிரம் ரூபாய் வருமானம் என்பது சர்வ நிச்சயமான ஒன்றாக இருக்கும் தொழில் இது!

இப்போது விற்பனையாகும் மாடல்கள் என்றால் ஷாப்பிங் பைகள், வாட்டர் பாட்டில் வைக்கும் பைகள், ஃபேன்ஸி பைகள், தோல் பை மாடல்கள், செல்போன் வைக்கும் பைகள்,  விசிட்டிங் கார்ட்கள், கோட் போன்றவை. 20 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை சணல் பொருட்கள் விற்பனையாகின்றன.

தயாரிப்பெல்லாம் சரிதான். இதை மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்று தோன்றலாம்.

இப்போது எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் துணிக் கடைகளிலுமே சணல் பைகளுக்குத் தனியான தேவை இருக்கிறது. அவர்களுடைய பொருட்களை வைத்துக் கொடுப்பதற்கு பிளாஸ்டிக் பைகளைப் போலவே சணல் பைகளையும் விரும்பி வாங்குகிறார்கள். உங்கள் ஏரியாவில் உள்ள துணிக்கடைகளிலும், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் பேசி ஆர்டர் பிடிக்கலாம்.

அதேபோல், திருமணம் போன்ற விழாக்களில் தாம்பூலப் பைகள் கொடுப்பதற்கு இப்போது சணல் பைகளையே அதிகம் நாடுகிறார்கள். அதுபோன்ற திருமணம் நடத்தித் தரும் கான்ட்ராக்டர்களைப் பிடித்தால் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். அதோடு, ஃபேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும், கைவினைப்பொருட்கள் விற்பனைக் கூடங்களிலும் போய் பேசி, அங்கு உங்கள் பைகளை டிஸ்ப்ளே செய்ய வைத்து பிஸினஸைப் பெருக்கலாம்.

லீவு முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும்போது, பள்ளிகளுக்குச் சென்று மொத்தமாக ஸ்கூல் பைகளுக்கு ஆர்டர் பிடிக்கலாம். மேலும், கம்பெனிகளை அணுகி அவர்களது விழாக்களுக்கு ஃபைல்கள், பைகள் போன்றவற்றைத் தயாரித்து தரலாம். விழாக்கள் நடக்கும் போது அங்கு ஸ்டால் போட்டும் விற்பனையைப் பெருக்கலாம். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வியாபார வாய்ப்புகள் நிறைந்து கிடக்கும் தொழில் இது.

சணல் களத்தில் இறங்குங்க... சல்லுனு காசை அள்ளுங்க!

ஜிம்மில் வருமானம்! - தொழில்

 தேக ஆரோக்கியத்தை விளையாட்டா எடுத்துப்பாங்களா, யாராவது..? அதனால், இந்த நேரத்தில் உடற்பயிற்சி நிலையம் தொடங்குவது நல்ல லாபம் தரக்கூடிய தொழில்!

ஒரு பெரிய அறை... கொஞ்சம் கருவிகள் இருந்தால் போதும் எளிதாக உடற்பயிறசி நிலையம் தொடங்கிவிடலாம்.

ஊரின் தன்மையைப் பொறுத்து எந்த விதமான முறையில் அமைக்கலாம் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளவேண்டும். சிறிய கிராமம் எனும்போது பளு தூக்கும் பயிற்சிகளை அளிக்கும் சாதாரண கருவிகளோடு, ஸ்கிப்பிங் கயிறு, தம்புள்ஸ் போன்ற எளிமையான உபகரணங்கள் இருந்தால் போதும். இதற்கு அதிகபட்ச முதலீடு 30 ஆயிரம் ரூபாய் போதும். சிறிய ஊர்களில் மாதம் ஐம்பது ரூபாய்க்குள் கட்டணம் வைத்தால் தான் பலரும் விரும்பித் தேடி வருவார்கள். ஆரம்பத்திலேயே பெரிய அளவில் முதலீடு செய்துவிட்டு, ஆட்கள் வரவில்லை என்றால் நஷ்டப்பட வேண்டியிருக்கும்.

கொஞ்சம் பெரிய நகரங்கள் என்றால் மாதம் 250 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்க முடியும். ஆனால், அதற்கு ஏற்ப சுமார் இரண்டு லட்ச ரூபாய்வரை முதலீடு செய்யவேண்டும். அதற்கு உடற்பயிற்சிக் கூடத்தைக் கலர்ஃபுல்லாக அமைக்க வேண்டும். நடைப் பயிற்சி, தொடைப் பயிற்சி என்று ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தனித்தனியான பயிற்சிக் கருவிகள் செட்டப்போடு ஜிம்மை அமைக்கலாம். எதுவாக இருந்தாலும் குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் இருக்கும்வகையில் ஆட்களைப் பிடிக்கவேண்டும்.

இந்தத் தொழிலைப் பொறுத்த அளவில் இடத்தைத் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம். பாலைவனத்தில் கடைபோட்டுவிட்டு வியாபாரமே ஆகவில்லை என்று கவலைப்படுவதைப் போல, பொருந்தாத இடத்தில் பயிற்சிக்கூடத்தை அமைத்துவிட்டு பிறகு அவதிப்படக் கூடாது. இளைஞர்கள் அதிக அளவில் நடமாடும் கல்லூரிகள் இருக்கும் இடத்தில் அமைப்பது நல்லது. அதேபோல, குடியிருப்புப் பகுதிகளிலும் அமைக்கலாம். எதுவாக இருந்தாலும் நல்ல காற்றோட்டம் உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிக் கூடத்துக்கு அடிப்படை யான தேவை, நல்ல பயிற்சியாளர்கள். அவர்களின் ஈடுபாட்டை வைத்துதான் அந்த உடற்பயிற்சிக் கூடத்துக்கே மரியாதை. அதனால், தெளிவான, திறமையான ஆட்களைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

பளுதூக்குதல், ஆணழகன் போட்டி போன்றவற்றுக்குச் செல்பவர்களை பகல் நேரங்களில் பயிற்சி கொடுக்க வைக்கலாம். சம்பளத்துக்குத்தான் வைக்கவேண்டும் எனபதில்லை. இலவசமாக இவர்கள் பயிற்சி செய்துகொள்ள அனுமதித்து, பகுதி நேரமாக உடற்பயிற்சி கற்றுக் கொடுப்பவர்களாகவும் பணியாற்ற வைக்க முடியும்.

உடற்பயிற்சிக்கான நேரங்களை டைம் டேபிள் போட்டு பிரித்துக் கொள்ளவேண்டும். அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் போன்றோருக்கு காலை 4.30 முதல் 9.30 மணிவரை மணிக்கு ஒரு செட் என்ற கணக்கில் அனுமதிக்கலாம். ஒரு செட்டுக்கு சராசரியாக 20 பேர்வரை பயிற்சி கொடுக்கலாம். அதேபோல மாலை 5.30 முதல் 9.30 வரை 4 செட்களுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும். மதிய வேளையில் பெண்களுக்கு நேரம் ஒதுக்கலாம். இதற்காக, ஒரு பெண் பயிற்சியாளரை பணியமர்த்தலாம்.

பயிற்சி மூலமாகக் கிடைக்கும் பணம் தவிர வருபவர்களுக்குப் பயன்தரும் வகையில் சத்து மாவுகள், சிறிய உடற்பயிற்சி கருவிகள் போன்றவற்றை விற்பனை செய்து மாதம் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இதனைக்கொண்டே பெண் பயிற்சியாளருக்கு சம்பளம் கொடுத்து விடமுடியும்.

ஒருவருக்கு சராசரியாக கட்டணம், 100 ரூபாய் என வைத்துக் கொண்டாலும் மாதம் 25,000 ரூபாய் வரைகூட வருமானம் பார்க்கலாம். இடத்துக்கான வாடகை (இடத்தைப் பொறுத்து மாறுபடும்) பயிற்சியாளர் சம்பளம் மற்ற செலவுகள் எல்லாம் போக, சராசரியாக 10,000 ரூபாய்க்கும் குறையாமல் லாபம் பெறலாம்.

ஒரு பகுதியில் நல்லவிதமாக சேவை செய்து பேர் வாங்கி விட்டால் போதும், மற்ற இடங்களிலும் கிளைகளைத் தொடங்கி லாபத்தை பல மடங்காக்கிக் கொள்ளலாம்.


திராட்சை பழம் - நன்மைகள்

 திராட்சையில் குறிப்பாக வைட்டமின் டி, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. திராட்சைகளில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பனீர் திராட்சை, காஷ்மீரி திராட்சை, அங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை ஆகியவை அடங்கும். இந்த பதிவில் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை படித்து தெரிந்து கொள்வோம்.

உடல் வலிமை பெற:

திராட்சையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.இந்த சத்துக்கள் தவிர கால்சியம், ரிபோஃப்ளேவின் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன. இந்த சத்துக்கள் உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது. மேலும் திராட்சை சாப்பிடுவது இரத்தப்போக்கு ஏற்பட்டால் இரத்த இழப்பைக் குறைக்க உதவுகிறது.

செரிமான பிரச்சனை

தினமும் ஒரு கைப்பிடி பச்சை திராட்சையை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கலை குணப்படுத்த:

மலச்சிக்கல் சிலருக்கு பொதுவான பிரச்சனை. திராட்சையில் நார்ச்சத்து அதிகம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அதை நீக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. ஏனெனில் திராட்சையில் நீர்ச்சத்து அதிகம். மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் கொஞ்சம் திராட்சை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்

கொலஸ்ட்ராலை எவ்வாறு குறைப்பது:

நாம் உண்ணும் சில உணவுகள் மற்றும் எண்ணெய் உணவுகளில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. தினமும் திராட்சையை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் தடுத்து, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

வைட்டமின் ஏ மற்றும் சி

திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் உடலில் கிருமிகளுக்கு எதிராக போராட உதவுகிறது. வைட்டமின் சி ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் தசைகளுக்கும் அவசியம்.

சாதாரண இரத்த அழுத்தம்:

திராட்சைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உடலில் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இது இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.

ஆஸ்துமா 

பச்சை திராட்சை ஆஸ்துமா பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. திராட்சை நுரையீரலில் உள்ள சளியின் அளவை அதிகரித்து வறட்டு இருமலை தடுக்கிறது. பொதுவாக, சுவாசக் கோளாறு உள்ளவர்கள் தினமும் சிறிதளவு பச்சை திராட்சையை உட்கொள்ள வேண்டும்.

நோயணுகாமல் இருக்க கடைபிடிக்கும் விதிகள்

1) உணவு உண்ணும் பொழுது கொதிக்க வைத்து சுருக்கிய, ஆறிய நீரைப் பருக வேண்டும்.
2) இரவில் பசுவின் பாலை அருந்த வேண்டும்.
3) முழுவதுமாக உறைந்த தயிரை மட்டுமே உண்ண வேண்டும். உறையாத தயிரை உண்ணக்கூடாது.
4) தயிருடன் நீர் சேர்த்து கடைந்து வெண்ணெய் நீக்கிய மோரை பயன்படுத்தவும்.
5) நெய்யை எப்பொழுதும் உருக்கி திரவ வடிவில் உணவுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
6) கலவியல் உறவை மாதத்தில் ஒரு முறை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
7) மூத்த மாதரை புணரக்கூடாது. அப்படியென்றால் பெண்களும் தன் வயதில் குறைந்த ஆணிடம் புணரக்கூடாது.
8) பகற்பொழுதில் புணர்ச்சியும், துயிலும் கூடாது.
9) எண்ணெயிட்டுத் தலை முழுகும் போதெல்லாம் வெந்நீரில் குளிக்க வேண்டும்.
10) மலசலங்களை அடக்ககூடாது. உடன் கழித்தல் வேண்டும். ஆறுமுறை சிறுநீர் கழித்தல், மும்முறை மலம் கழித்தலும், வியர்வை வெளியேறுமாறு, உடல் உழைப்பும் வேண்டும்.
11) இளம் வெயிலில் காயகூடாது. மாலை வெயிலே சிறந்தது.
12) மூலநோய்களுக்கு காரணமான, மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை உண்ணக்கூடாது.
13) பழைய உணவுகளை அமுதுக்கு ஒப்பெனினும் உண்ணக்கூடாது.
14) பசித்தாலொழிய உண்ணக்கூடாது. நாள் ஒன்றுக்கு இருமுறை உணவு மிக நன்று.
15) உண்ட பின்பு சிறிது தூரம் குறுநடை கொள்ள வேண்டும்.
16) தினந்தோறும் குளித்தல், சுத்தமான ஆடைகளை உடுத்தல், மந்திரங்கள் ஓதுதல், தினம் 30 நிமிட நேரம் தென்றல் காற்று உடம்பில் படுமாறு ஓய்வெடுத்தல் என்பது மிக அவசியமானது.
17) அதிக தூசிகள், குப்பைகள், பழைய பொருட்கள் உள்ள இடங்களில் இருக்காமல் பார்த்துக் கொள்ளுதல் நன்று.
18) நீண்ட நகம், முடிகள் உடலில் இல்லாதிருத்தல் நலம். அதை கத்தரிக்கும் பொழுது உடலில் படக்கூடாது.
19) உறக்கம், உணவு, மலநீர்க்கழிவு, புணர்ச்சி, அழுக்காடை, மயிரை சீவுதல் ஆகியவைகளை மாலைக்காலத்தில் விலக்க வேண்டும்.
20) பகல் தூக்கத்தை தவிர்த்து, சிறிது நேரம் 20 நிமிடம் சவாசன நிலையில் படுக்கலாம்.
21) உறங்கும் பொழுது, இடது பக்கமாக உறங்குதல் நலம்.
22) நடு இரவில் வாசனை பொருள்களையும், பூக்களையும் முகரக்கூடாது.
23) மருத்துவத் துன்பத்தை பொறுத்து, மருந்துகளை வணங்கி எடுக்க வேண்டும்.
24) மருந்து எடுத்து கொண்ட பிறகு தாம்பூலத்துடன் தேன், உலர் திராட்சை பழம், கிராம்பு, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தூள் சேர்த்து மென்று சாப்பிடுவது மிக சிறந்த முறையாகும். தாம்பூலம் என்பது வெற்றிலை, களிப்பாக்கு, சங்கு சுண்ணாம்பு. சங்கு சுண்ணாம்பை பயன்படுத்துவதால் வாய் சிவக்காது. மேலும் இயற்கையான கால்சியம் சத்தை அளிக்கக்கூடியது (கிடைக்கும் இடம்: பல்ஸ் ஹெல்த் கிளினிக்). 25) மற்றவர்களிடம் அன்பு, மரியாதை, உதவும் தன்மையும், மற்ற உயிர்களிடம் பரிவும் தேவை.
26) சித்த மருத்துவ முறையில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாந்தி மருந்தும், நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்தும், மூன்று நாளைக்கு ஒரு முறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்தலும், தினமும் கண்களுக்கு மையிடுதலும் போன்ற ஒழுக்கங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் மிகவும் அவசியமானவைகள்.

ஆதார நூல்: சித்த மருத்துவாங்கச் சுருக்கம்

சனி

சுயதொழில் தொடங்குவது முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

 தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின் பணத்தினைத் தேடுவதில்லை பலர்.

தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பொறுவது எப்படி? வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.

தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை’ என்பதாகவே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.

தேவை தெளிவான பார்வை

‘வேலை செய்யப் பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்’ என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான். தொழில்கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான். தொழில் முனைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.

‘நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?’ என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்றமடையும் பலர், ‘சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸுக்கான ஐடியாவும் இருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே ‘கடன் கிடைக்காது’ என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.

பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும்?

நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.

இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள்.   Debt Service Coverage Ratio  என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிஸினஸில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் தெம்பாகப் பேசலாம்.

கடன் வகைகள்

அடமானமில்லாத கடன் ( unsecured loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் ( Credit Guarantee Scheme CGS ) கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.

சொந்தப் பணம் ?

பிஸினஸ் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்தத் தொகையில் குறைந்தபட்சம் 1: 4.5 என்ற விகிதத்தில் ( Debt Equity Ratio  ) நம்மிடம் சொந்தப் பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் 4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் பிஸினஸ் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் முடிவு செய்யும். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் தொழிலில் உங்கள் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.

வங்கிகளை எப்படி அணுகுவது?

ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை ( SME Branch ) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

தேவையான ஆவணங்கள்

  • அடையாளச் சான்றிதழ்,
  • முகவரிச் சான்றிதழ்,
  • பிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ்,
  • திட்ட அறிக்கை,
  • வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்),
  • உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்),
  • பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
  • இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே  இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!

அரசு சில தொழில்களுக்கு மானியமும் வழங்குகிறது.

மானியம் வழங்கப்படும் தொழில்கள்

  • மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
  • தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
  • வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
  • மருந்துப் பொருட்கள் உற்பத்தி
  • சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
  • ஏற்றுமதி ஆபரணங்கள்
  • மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
  • விளையாட்டுப் பொருட்கள்
  • சிக்கன கட்டுமானப் பொருட்கள்
  • ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

அரசு வழங்கும் சலுகைகள்

  • 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.
  • சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
  • உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
  • உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது. அந்தப்பணத்தினை பணமதிப்பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு  ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா? அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே! ஆகவே நீங்கள் குற்ற உணர்வுடன் அரசு வங்கிளிடமோ அரசு நிறுவனங்களிடமோ கடனைப் பெறுவதினை நோக்க வேண்டாம். அது உங்கள் பணம் என்று உரிமையுடன் நினைக்க வேண்டும்.

சுயதொழில் எப்படி தொடங்குவது

ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில் (என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!

ஒருங்கிணைப்பு

முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்

தொழில் நுணுக்கங்கள்

தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும்.

உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான  அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும.

100 வகை சுயதொழில் பயிற்சிகள்

ரூட்செட் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சிகளை வெவ்வேறு இடங்களில் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு பயிற்சிக்கும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஆறு வார கால அளவு ஆகும். இந்த பயிற்சி சுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டெய்லரிங் தொடங்கி உணவு பதப்படுத்துதல் வரை நூற்றுக்கணக்கான சுயதொழில் பயிற்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் முற்றிலும் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்கும் வசதியும் உள்ளது.

இந்நிறுவனத்தில் கற்பிக்கப்படாத பயிற்சிகளே இல்லை எனலாம். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முதல் ஆடை வடிவமைப்பு, மோட்டர் ரீவைண்டிங், தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள் வரை 100 வகைப் பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகிறது

ஆதாரம் : தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு, சென்னை

உறுதியாக லாபம் தரக்கூடிய தொழில் எது?

இந்தக் கேள்வியை சற்று மாற்றி யோசித்துப் பாருங்கள். உறுதியாக லாபமே தராத தொழில் என்று ஏதேனும் இருக்கிறதா… என்ன?

ஒருவேளை, அப்படி ஒன்று இருந்தால் அதனை யாராவது தொடங்குவார்களா? 

ரோட்டோர இட்லிக் கடை தொடங்கி, விமானத்தில் பறக்க டிக்கெட் விற்பது வரை எல்லாத் தொழில்களிலுமே லாபம் ஈட்டியோர் ஏராளம். அதுபோல் அனைத்துத் தொழில்களிலும் நட்டம் அடைந்தோரும்  ஏராளம். 

லாபம் தரும் தொழில், நட்டம் தரும் தொழில் என்ற வேறுபாடு தொழிலில் கிடையாது. சில நேரங்களில் பழைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் போது அல்லது பழைய பாணியில் தொழிலை நடத்தும் போது உறுதியாக நட்டம் ஏற்பட வாய்ப்புண்டு. சான்றுக்கு கேசட் பிளேயர், பேஜர் போன்ற காலாவதியான தொழில்நுட்பம் கொண்ட பொருட்களை தற்போது விற்பது என்பது மூடத்தனம். இதை நம்மில் யாரும் மேற்கொள்ளப் போவதும் இல்லை. 

இதே கேள்வியை நாம் இப்படி மாற்றி யோசித்துப் பார்க்கலாம்… வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொழில்கள்; வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொழில்கள் என்று பார்த்தால் அதற்கென ஒரு பட்டியலே உண்டு. 

வருமானம்  மிகக் குறைவாக இருக்கக்கூடிய விமானப் பயணச் சீட்டு புக்கிங், பங்கு வர்த்தக புரோக்கிங் மற்றும் வினியோகத் துறை போன்றவற்றில் தற்போது போட்டி காரணமாக லாபம் குறைந்து வருகிறது. 

இந்தத் தொழில்களில் நாம் 10 வாடிக்கையாளர்களுக்கு சேவை  புரிந்தாலோ அல்லது பொருட்களை விற்றாலோ அதில் ஒரே ஒரு வாடிக்கையாளர் நமக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டால் மீதமுள்ள ஒன்பது பேரிடமும் சம்பாதித்த வருமானத்தை இழக்கக்கூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். 

எனவே, இது போன்ற துறைகளில் காலடி வைக்கும்போது, சற்று கூடுதல் கவனம் தேவை.  மாறாக, ரியல் எஸ்டேட்,  தங்கநகை விற்பனை போன்ற துறைகளில், தொடர்ந்து பொருட்களின் விலை ஏறுமுகமாகவே இருப்பதால் இவற்றில் ஈடுபடுவதற்கு வெற்றி வாய்ப்புகள்  அதிகம். 

இன்னும் சில வெற்றி வாய்ப்புகள் உள்ள தொழில் மாதிரிகள் இதோ… 

விற்பனைக்கு உத்தரவாதம் தரக்கூடிய தொழில்களைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்கிக்கொள்ள எந்த நிறுவனமேனும் உத்தரவாதம் தரும்மேயானால் அந்தத் தொழிலில் நம்பி இறங்கலாம். 

மாறாக வேறு சில நிறுவனங்கள் தம்மால் தயாரிக்க முடியாத பொருட்களைத் தயாரிப்பதற்கு வெளியில் அவுட் சோர்ஸ் செய்யக்கூடும். அது போன்ற தொழில்களிலும் வெற்றி வாய்ப்புகள் அதிகம். 

சான்றிற்கு இந்தியாவின் முன்னணி செருப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தம்முடைய தொழிற்சாலைகளை மூடி விட்டு, செருப்புகள் உற்பத்தி செய்யும் பணியை வேறு சில நிறுவனங்களிடம் அவுட் சோர்ஸ் செய்யத்  தொடங்கி விட்டது. 

இது போன்ற பணிகளை மேற்கொள்கின்றபோது பொருளை சந்தைப்படுத்தும் சிரமம் தொழில்முனைவோருக்கு  கிடையாது. 

தமிழகத்தில் மிகப்பெரிய கிரைண்டர் விற்பனை நிறுவனம், முன்னணி பிஸ்கட் நிறுவனம் போன்றவை கூட தமது தொழிற்சாலைகளை மூடிவிட்டு உற்பத்திப் பொறுப்பை வெளியில்தான் கொடுக்கின்றன. இது போன்ற தொழில்களில் லாப விகிதம் மிகவும் குறைவு என்பதையும் தொழில் முனைவோர் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, ரவை, எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்தால் அவற்றிற்கு வெற்றி வாய்ப்புக்கான விகிதம் அதிகம். ஏனெனில் இந்தப் பொருட்களுக்கான வாடிக்கையாளர்களைத் தேடி நாம் வெகு தூரம் அலைய வேண்டியதில்லை. 

மேலும் இவை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்பதால் உடனடியாக விற்காவிட்டாலும் இழப்புக்கான வாய்ப்புக்கள் குறைவே! 

இதுபோன்ற வெற்றி வாய்ப்புகள் மிகுந்த தொழில்களில் போட்டிகளும் அதிகம்; லாபமும் குறைவாகத்தான் இருக்கும். 

செய்து கொண்டிருக்கும் தொழிலில் 50 முதல் 60 விழுக்காடுப் பணத்தை கச்சாப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கே சிலர் செலவழிக்கக் கூடும். எனவே, அந்தக் கச்சாப் பொருளையே நீங்கள் தயாரிக்கத் தொடங்கினால், உறுதியாக 50 முதல் 60 விழுக்காட்டு பணம், வருமானமாகக்  கிடைக்கும். 

சான்றிற்கு, உணவகம் வைத்திருக்கிற விவசாயி காய்கறிகளையும், கீரைகளையும் தாமே விளைவித்தால் உறுதியாக அவருக்கு அது லாபம் தரக்கூடியதாக இருக்கும். வாடிக்கையாளருக்கும் சுவையான, சத்தான உணவு கிடைக்கும். 

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களுக்காக தனியாக உணவகம்,  சிகை அலங்கார நிலையம் போன்றவற்றை சொந்தமாக நடத்தி வருகிறது. நாளிதழ் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் தினத்தந்தி நாளிதழ், தாமே சொந்தமாக சன் பேப்பர் மில் என்கிற காகித ஆலையை நடத்தி வருகிறது. 

இதுபோல நீங்களும் எந்தக் கச்சாப் பொருளைக் கொள்முதல் செய்ய அதிகம் செலவழிக்கிறீர்களோ அந்தக் கச்சாப் பொருளையே உற்பத்தி செய்ய முடியுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்கலாம்.  

இது இன்னொரு கோணத்திலும் பயன்தரும்.  ஒருவர் புதிதாக பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். அந்தப் பத்திரிகையை அச்சடிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க, அவரே புதிய அச்சகம் ஒன்றையும் தொடங்கினார். நாட்கள் செல்லச் செல்ல பத்திரிக்கை  விற்பனையின்றி நலிவடைந்தது. ஆனால் அச்சகத்திற்கு ஏராளமான ஆர்டர்கள் வரத்தொடங்கின. 

கோவை மாநகரில் ஒரு தொழில்முனைவர் பேக்கரி கடையைத் தொடங்கினார். கடையில் இன்னும் கொஞ்சம் இடம் காலியாக இருந்ததால் தேநீர் கடையையும் உடன்தொடங்கினார். பேக்கரி விற்பனை அவ்வப்போது மந்தமாக இருந்தாலும் கூட தேநீர் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி சொந்த கட்டிடத்தைக் கட்டி அதன் ஒரு பகுதியில் சாஃப்ட்வேர் வடிவமைப்பு பணியைத் தொடங்கியது. மற்றொரு பகுதியை வாடகைக்கு விட்டது. சில ஆண்டுகள்  கழிந்த நிலையில் சாஃப்ட்வேர் கம்பெனி நலிவடைந்தது. ஆனால் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகரித்தமையால்  கட்டடத்தின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தது. வாடகை வருமானமும் அதிகரித்தது. 

தொடர்ந்து உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட்டின் மதிப்பை மனதில் கொண்டு தான் இன்ஃபோசிஸ், விப்ரோ,  சின்டெல், காக்னிசன்ட், டி.சி.எஸ், விரிச்சுசுவா, உள்ளிட்ட பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிலத்தை விலைக்கு வாங்கி கட்டிடம் கட்டி சொந்த இடத்தில் தங்களுடைய தொழிலை மேற்கொள்கின்றனர். 

தொழிலின் மூலம் லாபம் கிடைப்பது ஒருபுறம் இருக்க ரியல் எஸ்டேட் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருவதால் நிறுவனத்திற்கு இரட்டை லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

இதுபோன்று, முதலீட்டை இரண்டு கூறுகளாகப் பிரித்து முதலீடு செய்தால் சில நேரங்களில் ஒன்று தோல்வியைத் தழுவினாலும், மற்றொன்று கை தூக்கி விடக்கூடும். சில நேரங்களில், இரண்டின் மூலமும் லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. 

                                     Thanks  இராம்குமார்  

ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தாலே போதும். சூப்பரான பிசினஸ் டிப்ஸ்...

 உங்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை, கனவு, லட்சியம் இருக்கிறதா? அப்படியென்றால் கவலையை விடுங்கள். உங்களை கோடீஸ்வரராக்கும் புதுமையான தொழில் குறித்துதான் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.

முகப் பொலிவு க்ரீம்களுக்கு இன்று மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இந்த க்ரீம்களை உற்பத்தி செய்யும் தொழிலில் லாபம் கொட்டுகிறது. இந்த தொழிலை தொடங்க எவ்வுளவு செலவாகும், லாபம் எவ்வுளவு கிடைக்கும் போன்ற விவரங்களை விரிவாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

சந்தை வாய்ப்புகள்

இன்றைய காலத்தில் பலரும் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பாக, சருமப் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வயது வித்தியாசம் இன்றி, ஏழை, பணக்காரன் என எல்லாருமே தங்கள் சருமப் பாதுகாப்பிற்கு க்ரீம்களை பயன்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. இதன் தேவைகள் அதிகமாக இருப்பதால், மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் சிறு, குறு நிறுவனங்கள் வரை பலரும் இந்த சருமப் பாதுகாப்பு தொழிலில் கோலோச்சுகின்றனர்.

நமது சருமத்தை அழகுபடுத்தும் இதுபோன்ற க்ரீம்களுக்கு நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் அதிக வரவேற்பு உள்ளது. மேலும், இப்போது பெண்களும் அதிகமாக வேலைக்குச் செல்வதால் இந்த அழகு சாதன க்ரீம்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, எங்கு பார்த்தாலும் ப்யூட்டி பார்லர்களும் அதிகமாக காணப்படுவதால், இதற்கான சந்தை மிகப்பெரியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். குறைவான முதலீட்டில் அதிக லாபத்தை கொட்டித் தருகிறது இந்த க்ரீம் உற்பத்தி ஆலை.

எளிமையான இயந்திரங்கள்: 

சருமத்திற்கு உபயோகப்படுத்தும் க்ரீமை தயாரிப்பதற்கு, பயன்படுத்துவதற்கு சிரமமான, சிக்கலான இயந்திரங்கள் தேவைப்படும் என பயந்துவிடாதீர்கள். அப்படியெல்லாம் எதுவும் தேவைப்படாது. இதற்கான மூலதனப் பொருட்கள் நாடு முழுவதும் மிக எளிதாக கிடைக்கின்றன. அதை ஒவ்வொன்றாக வாங்கி, இயந்திரங்களை முறையாக அமைத்து, இன்றே தொழிலை ஆரம்பியுங்கள்.

திட்ட மதிப்பீடு:

இந்த க்ரீம் உற்பத்தி ஆலை தொடங்குவதற்கான முழுமையான வரைவு திட்டத்தை வடிவமைத்துள்ளது காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (KVIC). தொழில் தொடங்குவதற்கு ஆரம்ப முதலீடாக ரூ.14.95 லட்சம் தேவைப்படும். இந்த தொகையில், நீங்கள் உங்கள் கையிலிருந்து ரூ.1.52 லட்சம் மட்டும் செலவு செய்தால் போதும். மீதமுள்ள தொகையை, டெர்ம் லோனாக ரூ.4.4 லட்சமும் நடப்பு மூலதன கடனாக ரூ.9 லட்சமும் நமக்கு கிடைக்கும்.

எவ்வுளவு செலவாகும்?:

இந்த தொழில் தொடங்க நிறைய இடம் தேவைப்படாது. 400மீ சதுர அடி இருந்தால் போதும். அது சொந்த நிலமாகவோ அல்லது வாடகை இடம் என எதுவாகவும் இருக்கலாம். இயந்திரங்களுக்கும் உபகரணங்களுக்கும் ரூ.3.43 லட்சம் தேவைப்படும். மரச்சாமான்கள் போன்வற்றுக்கு ரூ.1 லட்சம் தேவைப்படும். இதர செலவுகளுக்கு என ஐம்பதாயிரம் ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள். நடப்பு மூலதனத்திற்கு எப்படியும் ரூ.10.25 லட்சத்தை தயாராக வைத்திருக்க வேண்டும். அவ்வுளவுதான்

எவ்வுளவு லாபம் கிடைக்கும்?

முழு திறனோடு செயல்பட்டால், தொழில் தொடங்கிய ஒரு வருடத்திலேயே எல்லா செலவுகளும் போக, ரூ.6 லட்சம் வரை லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், உங்கள் தொழில் விரிவாக ஆரம்பித்ததும், இதில் கிடைக்கும் வருமானங்களும் தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பிக்கும். குறைந்தபட்சம் தொழில் தொடங்கிய ஐந்தாவது வருடத்திலேயே ரூ.9 லட்சம் அளவிற்கு லாபம் ஈட்டலாம்.

Thanks news18

நீங்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவரா? (Work from home?)

 நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியான நிறைவான மனம், சிறந்த உடல் எதிர்ப்பு சக்தி போன்றவைகள் எல்லாம் வாழ்வின் வரங்கள். இந்த வரங்கள் ஒருவருக்கு சிறப்பாக அமைந்து விட்டால் வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் முழுமையாக அனுபவிக்கவும், வாழ்வின் கஷ்டங்களை தைரியமாக எதிர்கொள்ளவும் பேருதவியாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும். இன்று பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.


அவசயமின்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே முழுநேரமும் இருப்பதால் அதிகளவில் உட்கார்ந்து இருப்பதும், நொருக்கு தீனிகளை கொறித்து உடல் எடை அதிகரித்து விடுவதும், மனதில் எரிச்சல், சோர்வு, விரக்தி, ஆர்வமின்மை போன்றவை ஏற்படுவதும் சகஜமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம். உடல், மன நலத்தை சீராக்கவும் பலமாக்கவும் என்ன செய்வதென்று இக்கட்டுரையில் பார்க்கலாம்.


உடல் நலத்திற்கு

உணவு: உடல் உழைப்பு குறைவாக இருக்க கூடியவர்கள் மாவு சத்து உணவுகளை ஓரளவிற்கு தவிர்த்து புரதம் மற்றும் காய்கறி கீரைவகைகளை பெரிதும் உணவில் சேர்த்து கொள்ளலாம். எண்ணெயில் பொறித்த உணவுகளுக்கு பதிலாக நிறைய பழங்களை வெட்டி, தேனோ, உப்பு காரப்பொடி சேர்த்தோ சாப்பிடலாம். நன்கு பசித்த பின் சாப்பிடுவதும் சாப்பாட்டை நன்கு நிதானமாக மென்று சாப்பிடுவதும் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருக்க உதவும்.

உடற் பயிற்சி:- ஏரோபிக்ஸ், யோகாசனம், மொட்டை மாடியில் எட்டு போல் வரைந்த அதில் நடப்பது, தாய்சீ நடனம், ஜீம்பா. நடனம் போன்ற மனதிற்கு பிடித்த உடற்பயிற்சியை தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது செய்வது நல்லது. வீட்டில் சின்ன சின்ன வேலைகளை செய்வதும் குழந்தைகளுடன் விளையாடுவதும் கூட மனதிற்கு உற்சாகத்தை கொடுத்து உடல் நலத்தை கூட்டுவதாக அமையும். உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் ‘என்டார் ஃபின்ஸ்’ என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இது நம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஹார்மோன் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்விட்டு சிரித்தால்: தினமும் ஒரு அரைமணி நேரமாவது கார்ட்டூன் பார்ப்பது, நகைச்சுவை காட்சிகளை பார்ப்பது என்பதை வழக்கமாக கொள்ளவேண்டும். அல்லது நண்பர்களுடன் மனம் விட்டு பேசி சிரிப்பதும் நல்லது. வாய் விட்டு சிரிக்கும் போது நம் உடலில் என்டார்ஃபின்ஸ் மற்றும் டோபமின்’ ஹார்மோன்கள் சுரக்கின்றன இவை நம் மனதை மகிச்சியாகவும் உற்சாகமாகவும் வைக்க உதவும்.

ஒத்து உதவி வாழ்தல்: வீட்டில் இருக்கும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தன்னால் முடிந்த சிறு உதவிகளை செய்வதும் அவர்களுக்குக்குத் தேவையான தகவல்களை சேகரித்து தருவதும் மற்றவர்களின் சிறு தவறுகளை மன்னித்து அனுசரித்தும் போகும் போது நம் உடலில் செரடோனின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கிறது. இது நம் மனதிற்கு புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்து மனச்சோர்வை போக்குகிறது.

தியானம் செய்தல்: தியானம் செய்யும் போது நம் மனதின் அலைச்சுழல் குறைகிறது. மனம் அமைதியாக இருக்க பழகுகிறது. இதனால் நிறைய வேலைகளை திறமையாக செய்யமுடிகிறது. சிறிய இடத்திலோ, ஒரே இடத்திலோ இருப்பதால் ஏற்படும் விரக்தி மனப்பான்மையை போக்கி, பல புதிய விஷயங்களில் மனத்தை ஈடுபடுத்த இது உதவுகிறது. தியானம் செய்யும் போது சுரக்கும் ‘மெலட்டோனின்’ ஹார்மோன் நம் மனதை அமைதிபடுத்தி இந்த பலன்களை நமக்கு அளிக்கிறது.

எனவே பெரியவர்கள் மட்டுமின்றி வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் மேற்கூறியவற்றை கடைபிடிக்க வைத்தால் குடும்பமே மகிழ்சிச்சியாகவும் குதூகலமாவும் மாறிவிடுவதை உணரமுடியும்.