கால்நடை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கால்நடை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு

முயல் வளர்ப்புத் தொழில்

 முயல் வளர்ப்பு

அங்கோரா முயல் வளர்ப்பு

 

Rabbit

முயல்‌ வளர்ப்புக்கு ஏற்ற நல்ல முயல்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும்‌. அதிக லாபம் பெற தகுந்த இனங்களைத் தேர்வு செய்வது முக்கியம். வெள்ளை ஜெயண்ட்‌, சாம்பல்‌ ஜெயண்ட் மற்றும்‌ அங்கோரா இனங்கள்‌ நல்ல தேர்வாக இருக்கும்‌. இவற்றில்‌ அங்கோரா இன முயல்களை வெப்பம்‌ குறைந்த மலைப் பிரதேசங்களில்‌ மட்டும்‌ வளர்க்க வேண்டும்‌.

இனப்பெருக்கம்‌ செய்ய பயன்படும்‌ ஆண்‌ மற்றும்‌ பெண்‌ முயல்கள்‌ வெவ்வேறு இனமாக, ‌ எந்த குறைபாடும்‌ இல்லாத முயல்களை தேர்வு செய்ய வேண்டும்‌. குறைந்த எண்ணிக்கையில்‌ உள்ள முயல்களுக்கு ஒற்றை அடுக்கு கூண்டு அமைப்பு போதுமானது. அதிகளவில்‌ வளர்க்கும்‌ முயல்‌ பண்ணைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு அடுக்குள்ள கூண்டு அமைப்புடைய கூடாரங்களை நீங்கள்‌ அமைக்க வேண்டும்‌. முயல்‌ வளர்க்கும்‌ குடில்களை ஆஸ்பெட்டாஸ்‌ அல்லது தென்னங்கீற்று மூலம் கூரை அமைக்க வேண்டும்‌. மற்ற இரை தேடும்‌ பறவைகளும்‌ உள்ளே நுழையாதவாறு கூண்டை பாதுகாப்பாக அமைக்க வேண்டும்‌.

வெப்பநிலையைப் பொறுத்தவரையில் 10 முதல் 30 டிகிரி செல்ஸியஸ்‌ அளவும்‌ ஈரப்பதம்‌ 60 முதல் 70 சதவீதம் அளவும் இருக்கும் அளவுக்கு இடங்களைத்‌ தேர்வு செய்ய வேண்டும்‌. முயல்களுக்கு சுத்தமான நீர்‌, மின்சாரம்‌, தீவனம், மருத்துவ உதவி ஆகியவை அருகில்‌ இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்‌. ஓவ்வொரு முயலுக்கும்‌ போதுமான அளவில் இடம்‌ ஒதுக்க வேண்டும்‌. கூண்டை கிருமிகள் இல்லாமல் சுத்தமாகப்‌ பராமரிக்க வேண்டும்‌.

முயலுக்கு தீவனம்‌ மற்றும்‌ தண்ணீர்‌ கொடுப்பதற்கு சிறிய பாத்திரம்‌ கட்டிவிட வேண்டும்‌. கூண்டுகளை தினந்தோறும்‌‌ செய்ய வேண்டும்‌. முயல்கள்‌ அதிகளவில்‌ இனவிருத்தி செய்யும்‌ தன்மையுடையவை. பலதரப்பட்ட தீவனங்களை அதிகளவில்‌ உணவாக எடுத்துக்‌ கொள்வதால்‌ சிறிய தொகையை முதலீடு செய்து முயல்களை வளர்க்கலாம்‌. ஆரம்ப முதலீடு மிகவும்‌ குறைவு தான். மிக விரைவில்‌ லாபம்‌ கிடைக்கும். முயல்‌ வளர்ப்பு ஆரம்பித்த 6 மாதங்களிலேயே உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

வியாழன்

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்

 

மடி வீக்க நோய் (Mastitis)

  • கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் - சோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்), மஞ்சள் பொடி-50 கிராம், சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு)

சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு)

மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.

வயிறு உப்புசம் (Bloat)

  • கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.
  • ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் - வெற்றிலை-10 எண்ணிக்கை, பிரண்டை-10 கொழுந்து, வெங்காயம் -15 பல், இஞ்சி -100 கிராம், பூண்டு -15 பல், மிளகு-10 எண்ணிக்கை, சின்ன சீரகம்-25 கிராம், மஞ்சள்-10 கிராம்.

சிகிச்சை முறை : (வாய் வழியாக)

சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கழிச்சல்

நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் மாடுகளுக்கு காணப்படும். வால், பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச் சத்து, தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகள் மாடுகள் சோர்ந்து காணப்படும்.

இதை சரிப்படுத்த ஒரு மாடுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு சின்ன சீரகம் 10 கிராம், கசகசா 10 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 எண்ணிக்கை, மஞ்சள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து அடுத்து நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரு கலவைகளையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தவண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.

கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease)

  • கோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.
  • ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் - தேங்காய் துருவல் -1 தேங்காய் ( பால் கட்டியது), சீரகம் -50 கிராம், வெந்தயம் -30 கிராம், மஞ்சள் பொடி -10 கிராம், கருப்பட்டி (பனை வெல்லம்) -20 கிராம்.

சிகிச்சை முறை – மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக)

  • சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.

கோமார் கால் புண் (Foot lesions)

  • தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : குப்பைமேனி -100 கிராம், பூண்டு-10 பல், மஞ்சள்-100 கிராம், இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்

சிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)

முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.

விட(ஷ)க்கடி

  • விடத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஆடுகளில் தென்படும்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : உப்பு -15 கிராம், தும்பை இலை -15 எண்ணிக்கை, சிறியா நங்கை (இலை), (நில வேம்பு)-15 எண்ணிக்கை, மிளகு-10 எண்ணிக்கை, சீரகம் -15 கிராம், வெங்காயம்-10 பல், வெற்றிலை -5 எண்ணிக்கை, வாழைப்பட்டை சாறு-50 மி.லி.

சிகிச்சை முறை

சின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்

கேள்வி பதில்கள்

கேள்வி: கறவை மாட்டுக்கு மடிவீக்கம் இருக்கிறது? இதற்கு என்ன மருத்துவம் செய்யலாம்? எப்படி தவிர்ப்பது?

பதில்: மாட்டை ஈரத்தில் கட்ட வேண்டாம். கட்டுத்தரையை சுத்தமாக வைத்திருங்கள். பால் கறக்கும் முன்பும், பின்பும் மடியை சுத்தம் செய்யுங்கள். மடி வீக்கம் இருக்கும் போது மஞ்சள், வேப்பம் கொழுந்து, கல் உப்பு மூன்றையும் அரைத்து தடவி விடுங்கள்.

கேள்வி: மாட்டுக்கு வாயில் அடிக்கடி கொப்புளங்கள் வருகின்றன? இவற்றை எவ்வாறு தடுப்பது?

பதில்: கேரம்போர்ட்டிற்கு போடும் போரிக் பவுடர் மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. அந்த பவுடரை வாங்கி தேங்காய் எண்ணெய்யில் குழப்பி தேய்த்து விடவும். பின்னர், வேப்பம் கொழுந்து, மஞ்சள், கல் உப்பை நன்கு அரைத்து கொப்புளங்கள் உள்ள இடங்களில் தடவி விடுங்கள். இதைப்போல் காலில் இருந்தாலும் தடவி விடுங்கள். விரைவில் குணமாகிவிடும்.

ஆதாரம்: கால்நடை பயிற்சி ஆராய்ச்சி மையம்,

கன்று பராமரிப்பு

 

பிறந்தவுடன் கன்று பராமரிப்பு

  • கன்று பிறந்தவுடனேயே, அவற்றின் மூக்கு மற்றும் வாயில் எதேனும் கோழை மற்றும் சளி இருந்தால் உடனே அகற்ற வேண்டும்.
  • கன்று பிறந்தவுடனேயே, தாய் மாடானது கன்றினை நாக்கினால் நக்கும். இவ்வாறு செய்வதால் கன்று மேல் இருக்கும் ஈரம் போவதுடன், இது கன்றின் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டும். குளிர்காலத்தில் தாய் மாடு கன்றினை நக்கவில்லையெனில் உடனே துணி அல்லது சாக்கினைக் கொண்டு கன்றினை துடைக்கவும். மேலும் செயற்கை சவாசம் அளிக்க, அதன் மார்பில் கையினை வைத்து அமுக்கி அமுக்கி எடுக்கவும்.
  • உடம்பிலிருந்து 2-5 செ.மீ விட்டு தொப்புள் கொடியை நறுக்க வேண்டும். மேலும் இதற்கு அயோடின் அல்லது போரிக் ஆஸிட் அல்லது எதாவது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தடவ இட வேண்டும்.
  • தொழுவத்தில் ஈரமான கூளத்தினை அடிக்கடி அப்புறப்படுத்தி, எப்பொழுதும் தொழுவத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறந்தவுடன் கன்றின் எடையை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
  • மாட்டின் மடி மற்றும் காம்பினை கன்று பால் ஊட்டுவதற்கு முன்பு குளோரின் கரைசல் கொண்டு சுத்தம் செய்து உலரவிட வேண்டும்.
  • கன்று அதன் தாயிடமிருந்து சீம்பாலினை ஊட்ட செய்யவேண்டும்
  • கன்று பிறந்த ஒரு மணி நேரத்தில் எழுந்து மாட்டிடன் சீம்பால் ஊட்ட முயற்சி செய்யும். சில மெலிந்த கன்றுகள் தானாகவே சீம்பால் ஊட்டவில்லை என்றால் அவை சீம்பால் ஊட்ட உதவி செய்யவேண்டும்

கன்றுகளுக்கு தீவனமளித்தல்

பிறந்த கன்றுக்கு முதல் மற்றும் முக்கியமான உணவு சீம்பாலாகும். கன்று பிறந்து 3-7 நாட்கள் வரை இந்த சீம்பாலானது மாட்டில் சுரக்கும், இதுவே கன்றின் முதல்நிலை ஊட்டச்சத்தாகும். சீம்பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தொற்று நோய்கள் மற்றும் ஊட்டசத்து குறைபாடுகள் கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். பிறந்த கன்றுக்கு சீம்பால் 3 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

கன்றின் முதல் 3-4 வார வயதில் சீம்பால் மட்டுமன்றி பாலும் மிக அவசியம். மூன்று – நான்கு வார வயதிற்கு பின்பு கன்று தாவரமாவுச்சத்துக்களை ஜீரணிக்கும் திறன் பெற்று விடும். இதன் பின்னரும் பால் கன்றுக்கு கொடுப்பது நல்லது என்றாலும் அதற்கு பதிலாக அளிக்கப்படும் தானியவகை தீவனங்களை விட பாலுக்கான செலவு அதிகமாகும். கன்றுக்கு அளிக்கப்படும் அனைத்து திரவ வகை உணவுகளும் அதன் உடல் வெப்பநிலையில் இருக்குமாறு அல்லது அறை வெப்பநிலையிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். கன்றுகளுக்கு தீவனம் அளிக்கப் பயன்படும் அனைத்து உபகரணங்களும் தூய்மையானதாக இருக்க வேண்டும். மேலும் தீவனமளிக்க பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைத்திருக்கவேண்டும்.

நீர் அவசியம்

கன்றுக்கு எல்லா நேரங்களிலும் தூய்மையான மற்றும் புதிய நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் கன்று அதிகமான நீரை குடிக்காமல் இருப்பதைத் தடுக்க, தண்ணீரை வெவ்வேறு உபகரணங்களில், வெவ்வேறு இடங்களில் வைக்கவேண்டும்.

கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள்

கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனங்களைப் பொறுத்தது. கீழ்க்காணும் தீவனமளிக்கும் முறைகளை கன்றுகளை வளர்க்க கடைபிடிக்கப்படுகின்றன

  • பால் மட்டும் அளித்து வளர்ப்பது
  • ஆடை நீக்கிய பாலில் வளர்ப்பது
  • பால் தவிர்த்த மற்ற திரவங்களான புதிதாக தயாரித்த மோர், புதிதாக தயாரித்த பாலாடையினை பாலிலிருந்து பிரித்தெடுத்தவுடன் பெறப்படும் திரவம், கஞ்சி ஆகியவற்றில் வளர்ப்பது
  • பாலுக்கு பதிலாக பால் மாற்றுதிரவங்களில் வளர்ப்பது
  • தொடக்க நிலை கன்று தீவனங்களில் வளர்ப்பது
  • செவிலி மாடு கொண்டு வளர்ப்பது.
  • பாலில் மட்டும் வளர்ப்பது

0-3 மாத வயதுடைய சராசரியாக 50 கிலோ உடல் எடையை உடைய கன்றுக்கு தேவையான ஊட்டச்சத்துகளாவன

  • உலர் பொருள்
  • 1.43கிலோ
  • மொத்த ஜீரணமாகக்கூடிய கனிம பொருள்
  • 1.60கிலோ
  • புரதம்
  • 315கிராம்

பாலில் அதிகமான கொழுப்பு சத்து இருப்பதால் அதிலுள்ள மொத்த சீரணமாகும் பொருட்களான TDN ன் அளவு அதிலுள்ள உலர்ந்த பொருட்களின் அளவை விட அதிகம் உள்ளது. கன்று பிறந்து பதினைந்தாவது நாளில் புற்களை மேய தொடங்கும். இது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு அரை கிலோவாக இருந்து பின்னர் மூன்று மாத வயதில் 5 கிலோவாக உயரும்.

பசுந்தாள் தீவனத்தை விட, நல்ல தரமான வைக்கோல் (1-2 கிலோ) இந்த வயதில் கன்றிற்கு நல்ல உணவாகும். பதினைந்து நாட்களில் ஒரு நாளைக்கு 0.5 கிலோவில் ஆரம்பித்து பின்னர் மூன்று மாதங்களில் 1.5 கிலோவாக அதிகரிக்கப்படவேண்டும்

மூன்று வாரங்களுக்கு பிறகு முழு பால் கிடைக்கவில்லை யென்றால், ஆடை நீக்கிய பால் அல்லது மோர் அல்லது வேறு பால் மாற்று பொருளை உணவாக அளிக்கலாம்.

கன்றுகளுக்கான அடர்தீவனக்கலவை

  • பால் மற்றும் இதர திரவ உணவுகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனங்களின் கலவையே அடர்தீவனக்கலவையாகும். இது தானியங்களால் ஆன முக்கியமாக மக்காசோளம் மற்றும் ஓட்ஸ் அதிகம் கொண்ட கலவையாகும்.
  • பார்லி, கோதுமை மற்றும் சோளம் போன்ற தானியங்களையும் இந்த அடர்தீவனக்கலவையில் சேர்த்துக்கொள்ளலாம். மொலாசஸ் எனப்படும் கரும்புச்சர்க்கரையை 10 சதவிகிதம் அளவுக்கு இந்த அடர்தீவனக்கலவையில் சேர்க்கலாம்.
  • ஒரு தரமான கன்று அடர்தீவனத்தில் 80% TDN (மொத்த சீரணிக்கும் பொருட்கள்)- ம் மற்றும் 22% CP (புரதம்) இருக்கும்.

கன்றுக்கான உலர்தீவனம்

  • இலைகள் மற்றும் மெல்லிய தண்டினை உடைய பயறு வகைககள் கன்றுகளுக்கு சிறந்த உலர்தீவனமாகும். கன்றுகளின் இரண்டு வார வயதிலிருந்து இதனை கொடுக்கலாம். பயறு வகைத் தீவனத்துடன் கலந்து புல் வைக்கோலும் அளிப்பது சிறந்தது.
  • சூரிய ஓளியில் உலர்த்திய பசுமையான வைக்கோலில் வைட்டமின் A, D மற்றும் B-complex அதிகமாக இருக்கும்.
  • ஆறு மாத வயதில், ஒரு கன்று ஒரு நாளைக்கு 1.5-2.25 கிலோ வைக்கோல் உண்ணும். கன்றின் வயது அதிகரிக்க அதிகரிக்க வைக்கோல் உண்ணும் அளவும் அதிகமாகும்.
  • ஆறிலிருந்து எட்டாவது வாரத்தில் கூடுதலாக பதப்படுத்திய புல்லை கொஞ்சமாகக் கொடுக்கலாம். ஆனால் 6-8 வார வயதுக்கு முன்னரே கொடுக்க தொடங்கினால் கழிச்சலை உண்டாக்கும்.
  • பதப்படுத்திய புல், 4-6 மாதங்களிலிருந்தே நல்ல உலர்தீவனம் ஆகும்.
  • பொதுவாகப் பயன்படுத்தபடும் பதப்படுத்திய சோளம் மற்றும் மக்காச் சோளத் தட்டுகளில் புரதம், கால்சியம் சத்து, மற்றும் வைட்டமின் குறைவாக இருக்கும்.

செவிலிய மாடு முறையில் கன்றினை வளர்த்தல்

  • குறைந்த கொழுப்புச்சத்துடைய ஆனால் அதிக பால் கறக்கக்கூடிய மாட்டுடன், 2-4 தாயற்ற கன்றினை முதல் வாரத்திலிருந்து பால் குடிக்கச் செய்யலாம்
  • உலர்ந்த தீவனத்தினை வைக்கோலுடன் சேர்த்து எவ்வெளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுக்கவேண்டும். இவ்வாறு தீவனமளிக்கப்பட்ட கன்றுகளை 2-3 மாதத்தில் மாட்டிடமிருந்து பிரித்துவிடலாம்.

கஞ்சியில் கன்றினை வளர்ப்பது

கஞ்சி கன்றுக்கு அளிக்கப்படும் திரவ ஆரம்பகால தீவனமாகும். இது பாலுக்கு பதில் அளிக்கப்படுவதால், 4 வாரங்களில் இருந்து சிறிது சிறிதாக பாலை குறைத்து அதற்கு பதில் கஞ்சியினைக் கொடுக்கவேண்டும். இதற்கு 20 தினங்களுக்கு பிறகு முழுவதுமாக பால் அளிப்பதை நிறுத்திவிடவேண்டும்

கன்றுதீவனத்தில் கன்றினை வளர்ப்பது

இம்முறையில் கன்றுகளுக்கு ஆரம்பத்தில் முழு பாலினை அளித்து பின்னர் உலர் தொடக்க தீவன பொருள் மற்றும் தரமான வைக்கோல் மற்றும் தீவனம் தின்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். பின்பு கன்றின் 7-10வது வார வயதில் பால் மறக்க செய்யப்படும்

பால் மாற்று பொருளில் கன்றினை வளர்ப்பது

கன்றுக்கு தேவைப்படும் சத்துகளை கொடுப்பதில் பாலிற்கு சிறந்த மாற்று பொருள் எதுவும் இல்லை. பால் மற்றும் இதர திரவ உணவு தீவனங்கள் தேவையான அளவு கிடைக்கவில்லையென்றால் பால் மாற்று பொருளை உபயோகிக்கலாம். இது பால் கொடுக்கும் அளவு போன்று கொடுக்கப்பட வேண்டும். அதாவது கன்றின் எடையில் 10-12% பால் மாற்றுப்பொருளை உணவாகக் கொடுக்க வேண்டும்

கன்றினை தாயிடமிருந்து பிரித்தல்

  • கன்றினை தாயிடம் இருந்து பிரிப்பது, தீவிர மேலாண்மை பண்ணைகளில் பின்பற்றப்படும் ஒரு மேலாண்மை முறையாகும். இதனால் எல்லா கன்றுகளுக்கும் தேவையான அளவு பால் கிடைக்கச் செய்ய முடியும். மேலும் பால் வீணாவதையும், கன்றுகளுக்கு அதிக அளவு பால் கொடுப்பதையும் தடுக்கமுடியும்.
  • பண்ணையில் பின்பற்றப்படும் மேலாண்மை முறையினைப் பொருத்து கன்றுகளை தாயிடமிருந்து பிரிப்பதை அவை பிறந்தவுடனேயோ, மூன்று வாரத்திலோ, 8-12 வாரத்திலோ அல்லது 24 வார வயதிலோ செய்யலாம். பொதுவாக பண்ணையாளர்கள் 12 வாரத்தில் கன்றினை தாயிடமிருந்து பிரிப்பார்கள். பண்ணையில் பயன்படுத்த வளர்க்கப்படும் காளைக் கன்றுகள், 6 மாதம் வரை தாயுடன் இருக்கும்.
  • நன்கு நிர்வகிக்கப்படும் பண்ணைகளில் அதிக எண்ணிக்கையிலான கன்றுகளை வளர்க்கும்போது அவை பிறந்தவுடனேயே பால் மறக்கச் செய்வது நல்லது.
  • பிறந்தவுடனேயே கன்றுகளை தாயிடமிருந்து பிரித்து பால் மாற்றுப் பொருள் மற்றும் தீவனத்தில் கன்றினை வளர்ப்பதால், பால் மனித உபயோகத்திற்கு சேமிக்கப்படும்.
  • கன்றினை தாயிடமிருந்து பிரித்ததற்குப் பின் கன்றினைப் பிரித்ததில் இருந்து மூன்று மாதங்களில், சீராக கன்று தொடக்க தீவனத்தை அளிக்க வேண்டும். நாள் முழுவதும் நல்ல தரமான வைக்கோல் கொடுக்க வேண்டும். கன்றின் உடல் அளவில் 3% அளவு, ஈரப்பதம் அதிகம் உடைய பதப்படுத்திய புல் பசுந்தீவனங்களை அளிக்கலாம். ஆனால் பசுந்தீவனங்களை அதிகம் கொடுக்கக்கூடாது ஏனெனில் பசுந்தீவனத்தினை அதிகம் எடுத்துக்கொள்ளும்பொழுது கன்றுகள் எடுத்துக்கொள்ளும் மொத்த ஊட்டச்சத்தின் அளவு குறையும்.

கன்றின் வளர்ச்சி

  • அடிக்கடி கன்றின் எடையை பார்த்து அது குறிப்பிட்ட எடையில் வளர்கிறதா என்று பராமரிக்க வேண்டும்
  • முதல் மூன்று மாதங்கள் கன்றுக்கு உணவு அளிப்பது மிக முக்கியமானதாகும்.
  • இந்த சமயத்தில் சரியாக உணவு அளிக்கவில்லையென்றால், 25-30% கன்றுகள் இறந்து விடும்.
  • சினை மாட்டிற்கு சினைப்பருவத்தின் கடைசி 2-3 மாதங்கள் நல்ல தரமான தீவனம் அளிப்பது அவசியம்.
  • பொதுவாக கன்று பிறந்தவுடன் 20-25 கிலோ எடையிருக்கும்.
  • தகுந்த தீவனமளித்தல் மற்றும் குடற்புழு நீக்கம் தவறாமல் செய்தால் சராசரியாக கன்றின் எடை ஒரு மாதத்திற்கு 10-15 கிலோ எடை கூடும்.

போதுமான வீடமைப்பு முக்கியம்

தாயிடமிருந்து பிரித்த கன்றுகளை தனித்தனி தொழுவத்தில் கட்ட வேண்டும். இதனால் ஒன்றை ஒன்று நக்குவது தவிர்க்கப்பட்டு நோய் தொற்று வராமல் இருக்கும். தொழுவம் சுத்தமாகவும், உலர்வாகவும் நல்ல காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். கன்றுகளின் மீது சுத்தமாக காற்று எப்பொதும் படுமாறு தொழுவத்தினை அமைக்கவேண்டும். கன்றுகளுக்கு வசதியாக இருக்கவும், அவற்றின் உடல் உலர்வாக இருக்கவும் கன்றினை கட்டும் இடத்தில் கூளம் இட வேண்டும். கூளமாக வைக்கோல் அல்லது உமி உபயோகிக்கப்படும். வெளிப்புற தொழுவம் பாதி மூடப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் அதிகமான சூரிய வெப்பம் கன்றுகளின் மீது படுவது தவிர்க்கப்படுவதுடன் மழை மற்றும் குளிர்ந்த காற்றிலிருந்தும் கன்றுகள் பாதுகாக்கப்படும். கிழக்கு பக்கம் திறப்பு இருக்கும் தொழுவம், காலை வெயிலினால் வெப்பமாக்கப்பட்டு உச்சி வெயிலில் நிழலால் மூடப்பட்டிருக்கும். மழை இந்த திசையில் இருந்து விழாது.

கன்றுகளை நலமாக வைத்திருத்தல்

பிறந்த கன்றுக்கு நோய்வராமல் காப்பது மிக அவசியம். இதனால் கன்றுகளின் இறப்பு தவிர்க்கப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட கன்றுக்கு சிகிச்சை அளிப்பதை விட அவற்றினை நலமாக பேணுவதற்கு குறைந்த செலவே ஆகும். முறையாக கன்றுகளை கண்காணித்து சரியான உணவு அளித்து, சுத்தமான சூழ்நிலை உருவாக்குவது மிக அவசியம்.

கேள்வி பதில்

1. கன்றுகளுக்கு சீம்பால் அளிப்பதன் முக்கியத்துவம் என்ன?

கன்று ஈன்றபின் சுரக்கும் முதல் பாலே சீம்பால் ஆகும். சீம்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமிருப்பதால் பிறந்த கன்றுகளை நோய்களின்று பாதுகாக்கின்றது. மேலும், சீம்பால் மலமிளக்கியாதலால், உணவு சீரணிக்க உதவுகின்றது. சீம்பாலை கன்று பிறந்த 1 மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள இம்முனோகிளாபுலின் குடலிலிருந்து உறிஞ்சப்படுவது நேரம் ஆக ஆக குறைகிறது.

2. கன்றுகளுக்கு சீம்பால் எந்த அளவில் அளிக்கப்பட வேண்டும்?

பிறந்த அரை மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரையில், கன்றின் உடல் எடையில் 5-8 சதவீதம் அளவிலும், பிறகு 2 மற்றும் 3ம் நாளிலில் கன்றின் உடல் எடையில் 10 சதவீதம் அளவிற்கும் சீம்பால் அளித்திட வேண்டும்.

3. இளங்கன்றுகளுக்கு அளிக்கப்படும் பாலின் அளவு எவ்வளவு?

இளங்கன்றுகளுக்கு அதன் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு பால் தினமும் கிடைத்திட வேண்டும். அதாவது 20-25 கிலோ உடல் எடை உள்ள கன்றுகளுக்கு தினமும் சுமார் 2-2. 5 கிலோ பசுவின் பால் கிடைத்திட உறுதி செய்தல் வேண்டும்.

4. பிறந்த கன்றுகளுக்கு எப்பொழுது குடற்புழு நீக்கம் செய்யலாம் மற்றும் எந்த குடற்புழு நீக்க மருந்துகளை கொடுக்கலாம்?

எருமைக் கன்றுகளுக்குப் பிறந்த முதல் நாளிலேயே குடற்புழுநீக்க மருந்தினை அளிக்க வேண்டும். பசுங்கன்றுகளுக்கு ஒரு வாரத்தில் குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும். முதல் ஆறுமாத வயது வரை பைப்பரசின் மருந்தினை உபயோகிக்காலம். பின்னர் மூன்று மாதத்திற்கொரு முறை சுழற்சி முறையில் குடற்புழுநீக்க மருந்தினை அளிக்க வேண்டும்.  ஆல்பென்டசோல், ஃபென்பென்டசோல், லீவாபிசோல் போன்றவை கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மருந்தினை அளிப்பது நலம்.

5. கன்றுகளுக்கு கொம்பு நீக்கம் எந்த வயதில் செய்யலாம்?

பொதுவாக கன்றுகளுக்கு கொம்பு நீக்கம் கன்று பிறந்த 15 முதல் 20ம் நாட்களில் செய்திட வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு கால்நடை மற்றும் ஆராய்ச்சி மையம்

புதன்

பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள்🥗

 கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்து அளிப்பதன் மூலம் சீரான உற்பத்தியினை பெறலாம். பசுந்தீவனத்தில் ஊட்டச் சத்துக்கள் இயற்கையான தன்மையிலேயே உள்ளதால் அவற்றின் செரிமானத் தன்மை அதிகம். மழைக்காலங்களில் தேவைக்கு மேல் கிடைக்கும் பசுந்தீவனத்தை பதப்படுத்தி கோடையில் கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் பசுந்தீவனப் பற்றாக்குறையையும் கால்நடைகளின் உற்பத்தி இழப்பையும் தவிர்க்கலாம்.

பசுந்தீவனத்தை இரண்டு முறைகளில் பதப்படுத்தி சேமித்துக் கொள்ளலாம்.

(i) காய்ந்த புல் அல்லது உலர் புல்

(ii) சைலேஜ் அல்லது ஊறுகாய்ப்புல்

உலர் புல் தயாரிப்பு

பசுந்தீவனப் பயிரை அதன் பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து சூரிய ஒளியில் உலர வைத்து அதன் ஈரப்பதத்தை 15 சதவிகிதத்திற்கு குறைவாக குறைத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். காலையில் பனி விலகியவுடன் தீவனப் பயிரை அறுவடை செய்து அந்த நிலத்திலேயே சூரிய ஒளியில் உலர வைக்க  வேண்டும். சூரிய ஒளியின் தன்மையைப் பொறுத்து 3 முதல் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை தீவனப் பயிரை தலைகீழ்  திருப்பி வைக்க வேண்டும். மாலையில்  அதன் ஈரப்பதம் சுமார் 30  முதல் 40 சதவிகிதமாக இருக்கும். அவற்றை சிறு கட்டுகளாக கட்டி அடுத்த நாள் காலையில் மீண்டும் பிரித்து உலர வைக்க வேண்டும். நல்ல சூரிய ஒளியிருந்தால் மாலையில் அதன் ஈரப்பதம் 20 சதவிகிதமாக குறைந்திருக்கும். மூன்றாவது நாள் காலையில் கூம்பு வடிவத்திலோ அல்லது குதிர் போட்டு சேமித்து வைக்க வேண்டும். தரமான உலர்புல் வெளிறிய பச்சை நிறத்தில் பூஞ்சை காளான் இல்லாமல் இருக்கும்.

சைலேஜ் தயாரிப்பு

பசுந்தீவனங்களை அவற்றின் பசுமை மாறாமல் மிகவும் குறைந்த ஊட்டச்சத்து இழப்புடன் சைலோ எனப்படும் காற்றுப் புகா குழியில் பதப்படுத்தி சேமிக்கும் முறைக்கு சைலேஜ் அல்லது ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறை என்பது பெயர்.

சைலேஜ் தயாரிக்க அறுவடை செய்ய வேண்டிய தருணம்:

வீரிய புல் வகைகள் – பூக்கும் தருணம்

பயறுவகைத் தீவனங்கள் – 25 முதல் 30 சதவிகிதம் பூக்கும் தருணம்.

சோளம் கம்பு தானியங்கள் – பால் பிடிக்கும் தருணம்

மக்காச்சோளம் தானியங்கள் – பால் பிடித்த பிறகு

சைலோ

சைலேஜ் தயாரிக்க பசுந்தீவனங்களை காற்று புகாத இடத்தில் மூடி வைத்து சேமிக்க வேண்டும். இதற்கு பயன்படும் அமைப்புகள் சைலோ எனப்படுகின்றன. குழி சைலோ, கோபுர சைலோ, சரிவு சைலோ அல்லது காண்கிரீட் வளையங்கள், குதிர் மற்றும் பாலிதீன் பைகள் ஆகியவற்றையும் இதற்காகப் பயன்படுத்தலாம். குழி சைலோவை நீர் புகாத மேட்டுப் பகுதியில் பக்க வட்டில் மண் சரிவு ஏற்படாமல் அமைக்க வேண்டும். குழியின் சூலம் விட்டத்தைப் போல் இரு மடங்கு இருக்க வேண்டும்.

சைலேஜ் தயாரிக்கும் முறை

பசுந்தீவனத்தை சுமார் 2 முதல் 3 மணி நேரம் சூரிய ஒளியில் உலர்த்தி ஈரப்பத அளவை 75 முதல் 80 சதவிகிதத்திலிருந்து 60 முதல் 65 சதவிகிதம் குறைத்து அவற்றை 2 – 3 அங்குலம் கொண்ட சிறு சிறு துண்டுகளாக வெட்டி சைலோவில் இட்டு அடுக்கடுக்காக அடுக்கி வர வேண்டும்.

சுமார் 20 முதல் 30 செ மீ அடுக்கிய தீவனத்தை நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெளியேற்றி பிறகு அதன் மீது 2 சதவிகிதம் சர்க்கரை பாகு கரைசலையும் 1 சதவிகிதம் சாதாரண உப்புக் கரைசலையும் தெளிக்க வேண்டும். பிறகு மீண்டும் பசுந்தீவனத்தை அடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அடுக்கி சைலோவின்  மேல் மட்டத்தை விட 1 முதல் 1 .5 மீ உயரம் வரை நிரப்ப வேண்டும். அதன் மேல் பகுதியில் வைக்கோல் அல்லது உபரியாகக் கிடைக்க கூடிய புல் போன்றவற்றைக் கொண்டு மூடி அதன் மேல் ஈர மண்ணை பூசி காற்று மற்றும் நீர் புகாமல் செய்ய வேண்டும். பாலிதீன் பைகளையும் பயன்படுத்தலாம். இதன் பிறகு 20 நாட்களில் தரம் மிக்க சைலேஜ் உருவாகி விடும். சைலோவை திறக்கும் முன்பாக மேற்பகுதியில் உள்ள பயன்படாத பதம் குறைந்த தீவனத்தை அகற்றி விட வேண்டும்.

தரமான சைலேஜ் பழ வாசனையுடன் கூடிய நறுமணம் உடையதாகவும் பசுமை நிறத்துடனும் சாறு கலந்தும் இருக்கும். அமில தன்மை 3.5 முதல் 4.2 வரை இருக்கும்.

பூஞ்சை பாதித்த சைலேஜை கால்நடைகளுக்கு அளிக்க கூடாது. அதிக புளிப்புச் சுவையுடனுள்ள சைலேஜை ஆடுகளுக்கு கொடுக்கக் கூடாது. நாள் ஒன்றிற்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் சைலேஜின் அளவு கறவை மாடு – 15 – 20 கிலோ, கிடேரி- 5 – 8 கிலோ, வளர்ந்த ஆடு – 200 – 300 கிராம். பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்படும் கோடை காலத்தில் இவ்வாறு பதப்படுத்திய தீவனத்தை அளிக்கலாம்.

கட்டுரையாளர்கள்: ஜெ.சுபாஷினி மற்றும் வை.ஹரிஹரசுதன், உதவி பயிற்றுநர்கள், வேளாண்மைக் கல்வி நிறுவனம், குமுளூர்,  திருச்சி. மின்னஞ்சல்: tnauhari@gmail.com

செவ்வாய்

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்

 சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்.

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்க ன்னு நிஜமா நமக்கு தெரியுமா? பண்றதெல்லாம் தப்பு நாம தான், இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருது. இன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான். இருந்தாலும் புதுசா கறவை மாடு வாங்குறதுக்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு மாட்டை இந்த சிகிச்சையை செஞ்சு அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செஞ்சுரலாம்.

 

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை முள்ளங்கி.
2.. கற்றாளை துண்டு
3. முருங்கை இலை
4. பிரண்டை (தண்டு)
5. கறிவேப்பிலை
6. மஞ்சள் கிழங்கு

சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:

சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.

1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும்.
(நாள் 1 -5)

2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)

3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)

4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)

5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்று, சிறியது எனில் இரண்டு, கடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).

மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.

பேராசிரியர் திரு.புண்ணியமூர்த்தி

ஞாயிறு

காடை வளர்ப்பு

 

காடை வளர்ப்பு

காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்ிச, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.

இறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்

மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.

ஜப்பானியக் காடை இறைச்சி

சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.

ஜப்பானியக் காடை விற்பனை

ஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

காடை இனங்கள்

  1. நியூசிலாந்து காடை
  2. பாப் வெள்ளைக் காடை
  3. சைனாக் காடை
  4. மடகாஸ்கர் காடை
  5. கலிபோர்னியா காடை
  6. நியூகினியா காடை
  7. ஜப்பானிய காடை
Quail 002 Quail 004

ஜப்பானிய காடை

ஜப்பானியக் காடை வளர்ப்பு முறை

காடை இனங்களில் ஜப்பானியக் காடை மட்டுமே நம் நாட்டில் இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கலாம். காடைகளைத் தரையில் அதாவது ஆழ்கூள முறை அல்லது கூண்டு முறையில் வளர்க்கலாம்.

ஆழ்கூள முறை

ஒரு சதுர அடியில் ஐந்து காடைக்ள வரை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேற்பட்டு, காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச் செலவு ஏற்படுத்தும். எனவே காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.

கூண்டு முறை வளர்ப்பு

இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும் பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம் இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் வளர்க்கவேண்டும். கூண்டு ஒன்றுக்கு 100 காடைக் குஞ்சுகள் வரை வளர்த்துப் பின் அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம் இரண்டரை அடி அகலம் 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில், கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.
குஞ்சுப்பருவக் கூண்டுகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் இருத்தல் வேண்டும். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5க்கு 1.5 செ.மீ உள்ளதாக இருக்கவேண்டும். கம்பிவலைக்கடியில் தகடுகள் பொருத்தவேண்டும். அப்போது தான் மேல் அடுக்கில் உள்ள காடைகளின் கழிவு கீழ் அடுக்கில் உள்ள காடைகளின் மீது விழாது. இந்தத் தகடுகளில் விழும் கழிவுகளை தினந்தோறும் அகற்றும் படியான வடிவமைப்பு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கூண்டும் 4 அல்லது 5  அடுக்குகள் கொண்டவையாக அமைத்துக் கொள்ளலாம்.

Care and management

கூண்டு முறை வளர்ப்பு


குஞ்சு பருவக் கூண்டுகளை 90 செ.மீக்கு 60 செ.மீ (3க்கு 2 அடி) என்ற அளவில் உள்ள பிரிவுகளாக அமைக்கலாம். இந்தக் கூண்டில் 100 காடைகளை இரண்டு வாரம் வரை வளர்க்கலாம். இரண்டு வாரத்திற்கு பிறகு விற்பனை ஆகும் வரை (ஆறு வாரம் வரையில்) 125-150 ச.செ.மீ இடவசதி ஒவ்வொரு காடைக்கும் அளிக்கப்படவேண்டும். 14க்கு இரண்டரை அடி அளவுள்ள கூண்டில் 50 காடைகள் வரை வளர்க்கலாம்.

காடைத்தீவனம்

காடைகளுக்கும் கோழித் தீனியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. காடைக்குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26-28 சதவிகிதம் புரதமும், 2700 கி கலோரி / கிலோ எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும். இவ்வகைத் தீவனத்தை 0-6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீவனங்களை மாற்றி பயன்படுத்த திட்டமிடும் பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதம் புரதமும் 2800 கிலோ கிலோரி / கிலோ எரிசக்தி உள்ள தீவனத்தையும் உபயோகிக்லாம். காடைகளுக்கென சில நிறுவுனங்கள் தீவனம் தயாரித்து விற்கின்றன. காடைத்தீவனம் கடையில் வாங்க இயலாத போது காடை வளர்ப்போர் இறைச்சிக் கோழிக்கான ஆரம்பகால தீவனத்தை (Broiler Starter Mash) வாங்கி 75 கிலோ தீவனத்துடன் 5 கிலோ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். இத்தீவனத்தில் தானியங்கள் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவைக் குறைத்து உபயோகிக்கலாம்.

Quail feeding

காடைத்தீவனம்

100 கிலோ காடைத் தீவனம் தயாரிக்க தேவைப்படும் தீவனப்பொருட்கள்

தீவனப்பொருட்கள்

குஞ்சுப்பருவம்

வளரும் காடைத் தீவனம் (கிலோ)

மக்காச்சோளம்

27

31

வெள்ளைச் சோளம் (அ) கம்பு

15

14

எண்ணெய் நீக்கிய  அரிசி தவிடு

8

8

கடலைப் பிண்ணாக்கு

17

17

சூரிய காந்தி பிண்ணாக்கு

12.5

12.5

சோயா மொச்சை தூள்

8

-

மீன்தூள் (உப்பு  இல்லாதது)

10

10

தாது உப்புக்கள்

2.5

2.5

கிளிஞ்சல் தூள்

-

5.0

 

100

100

வைட்டமின்

தேவையான அளவு கலக்கப்படவேண்டும.

ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் வரை தீவனத்தை உட்கொள்ளும் சராசரியாக ஆண்காடை 180-190 கிராமும் பெண் காடை 190-210 கிராம் உடல் எடையும் அடைந்திருக்கும். இதுவே விற்பனைக்கு தயாரான நிலை. பெண்காடை ஆண்காடையை விட எடை அதிகமாக இருக்கும். கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற இறகுகளில் கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். ஆண்காடைகளின் கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப்பகுதி இறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இனப்பெருக்கம்

காடைகள் 7 வார வயதில்  முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

Quail Egg

காடை முட்டைகள்


கோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.

குஞ்சு பராமரிப்பு

காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான்  இருக்கும். இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப்  புரூடர் வெப்பம் அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்ிகன் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நோய்கள்

காடைக்குஞ்சுகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் அதிகம் இருக்கக்கூடும். குஞ்சு பொரிப்பகங்களில் முட்டையிடும் காடைகளுக்குப் போதுமான அளவில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அளிக்கப்படாததால் இவ்வாறு நேரலாம்.

நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள்

  • தொப்புள் அழற்சி
  • ஈகோலி நோய்
  • காடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள்
  • நுரையீரல் அழற்சி
  • பூசண நச்சு.

மேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம். இருப்பினும் கோழிகளை விடக் காடைகள் இந்நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டவையாக இருப்பதனால், இவ்வகை நோய்களுக்கு எதிராகத்தடுப்பு முறைகள் ஏதும் எடுக்கவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

எனவே குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர் காற்று வீசாமல் இளம் பருவத்தில் பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம் எப்பொழுதும் தூய்மையான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றைக வகையாகக்  கையாண்டால் காடைகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைத்து நோயின்றி அவைகளைப் பாதுகாக்கலாம்.

 

(Thanks தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்) 

முயல்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும்

 முயல்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும்

வ.எண்

நோயின் பெயர்

காரணிகள்

அறிகுறிகள்

சிகிச்சை / மருந்துகள்

குறிப்புகள்

1.

முயல் நச்சுயிரி நோய்

வைரஸ் (தெள்ளுப் பூச்சிக்கொசு போன்ற உயிரிகளால் பரவுகிறது

கண்களில் எரிச்சல்,நீர் கோர்ப்பு, காதுகள், ஆசனவாய், பிறப்பு உறுப்புகளில் நீர் கோர்ப்பு, கண் இமையும், சவ்வும் வீங்குதல், தோலில் இரத்த ஒழுக்கு

சரியான பலன் தரும் சிகிச்சைகள் கிடையாது.

இந்நோய் தாக்கினால் 100 சதவிகிதம் இறப்பு நேரும். சில நாடுகளில் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.

2.

பாஸ்சுரேல்லா நுண்ம நோய்

பாக்டீரியா (பாஸ்சுரெல்லா மல்டோசிடா)

மூச்சு விட முடியாமை, குறிப்பிட்ட இடத்தில் குடல் அழற்சி, காது குருத்தெலும்பு சீழ்கட்டி, மேலும் இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகும்.

சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபடிமிடின்

-

3.

இரத்தக் கழிச்சல் நோய்

புரோட்டோசோவா எய்மெரியா மேக்னா எய்மெரிய பர்ஃபோ ரென்ஸ் எய்மெரியா ஸ்டெய்டே

பசியின்மை, உடல் மெலிதல், வயிறு வீங்குதல்

சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபமிடின் நைட்ரோ பியூரசோன்

-

4.

கோழை குடல் அழற்சி

எதன் மூலம் பரவுகிறது என்பது தெளிவாக அறியப்படவில்லை

வயிற்றில் கோழை, கட்டி, வயிற்றுப் போக்கு ஏற்படும். வயிறு உலர்ந்து போய்விடும்.

சிறந்த தடுப்பு முறைகள் ஏதுமில்லை.

-

5.

மடிவீக்க நோய்

ஸ்டிரெப்டோ காக்கஸ், ஸ்டெஃபைலோ காக்கஸ்

சிவந்த, ஊதா நிற நாளங்கள்

எதிர் உயிர்ப்பொருள்

-

6.

காது சொறி

சோரோஃபீட்ஸ் குனிகுளி

தலையை ஆட்டுதல், காதுகளால் காதை பிராண்டுதல், காதிலிருந்து கெட்டியான திரவம் வழியும்

பென்ஸைல் பென்ஸோயேட் (அஸ்காபியல்). காதை சுத்தப்படுத்திய பிறகு மருந்தளிக்க வேண்டும்.

-

7

உருளை நாடா

பூஞ்சான் (டிரைக்கோபைட்டான் மைக்ரோஸ்போரான்)

முடிகள் உடலின் சில பகுதிகளிலிருந்து உதிர்ந்து விடுவதால் அங்கங்கே சொட்டையாகக் காணப்படும்

கிரிசியோஃபல்வான்

-

8.

உடல் சொறி / சொறி நோய்

நோட்டிரஸ் கேட்டி

காது மற்றும் மூக்கிலிருக்கும் முடி விழுந்துவிடும். முன்னங்கால்களால் காது மற்றும் முகங்களை பிராண்டிக் கொள்ளும்.

பாதிக்கப்பட்ட இடங்களில் பென்சைல் பென் சோயேட் மருந்தை தடவலாம். 2.5 கிலோ எடல் எடையுள்ள முயலுக்கு 0.1 மிலி ஐவர்மெக்டின் மருந்தை ஊசி மூலம் செலுத்தலாம்.

-

9.

பின்னங்கால் புண் (அல்சரேட்டிவ் போடோடெர்மாடிட்டிஸ்)

முயல்கள் கூண்டுகளின் கம்பித் தரையில் நிற்கும் போது உடல் எடை தாளாமல் கால்களில் புண் ஏற்படும். இப்புண்பட்ட இடங்களில் திசுக்கள் அழிந்து விடுவதால் வலி ஏற்படும்.

கணுக்கால் பகுதியில் புண்கள் ஏற்பட்டு, அழற்சி போன்று உடலில் தோன்றுகிறது. எடைகுறைதல், பின்பகுதியில் வீக்கம் ஏற்படுதல், காலை சாய்த்து நடக்கும்.

ஜிங்க் அயோடின் களிம்பு மற்றும் 0.2 சதவிகிதம் அலுமினியம் கரைசல் மேலும் பரவாமல் தடுக்க, நுண்ணுயிர்க்கொல்லியைப் பயன்படுத்தலாம்.

-

(தகவல் : www.vuatkerala.org)