சனி

இந்த வாரம் - சிப்ஸ்

இந்த வாரம் - சிப்ஸ்
சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளேவர்களில் பல பேக்கிங்களில் வந்தாலும், வாழையடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை என்பதே இதன் பெரிய பிளஸ் பாயின்ட்.
சந்தை வாய்ப்பு!
எந்த இடத்திலும் இந்த தொழிலைத் தொடங்கலாம் என்பது இதற்கிருக்கும் தனிச் சிறப்பு. நல்ல வருமானம் தரக்கூடிய, பரவலான வியாபாரத்தைக் கொண்ட தொழில் என்பதால் உள்ளூர் அளவிலான தயாரிப்பாளர்கள் இதில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். சில்லறை வியாபாரம் மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி கேன்டீன்கள், ஓட்டல்கள், மதுபான விடுதிகள், ரயில்வே மற்றும் விமான கேட்டரிங் ஒப்பந்தம் என பல இடங்களிலும் மொத்த விற்பனைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பெரிய பிராண்டட் நிறுவனங் கள் இருந்தாலும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கிற நிலை இருக்கிறது.
தயாரிக்கும் முறை!
உருளைக்கிழங்கு மற்றும் நேந்திரன், மொந்தன் வாழைக்காய்களில் செய்யப் படும் சிப்ஸ்களே அதிக அளவில் விற்பனை யாவதால், இந்த காய்களில் நல்ல தரமான காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். சிப்ஸ் செய்வதற்கு முன் காய்களை நன்கு கழுவி தோலை நீக்கி, இதற்கென பிரத்யேகமாக இருக்கும் இயந்திரத்தைக் கொண்டு தகுந்த அளவுகளில் நறுக்கி, மீண்டும் ஒருமுறை நன்கு கழுவி காய வைக்கவேண்டும். தரமான எண்ணெய்யில் பக்குவமாக பொறித்தால் சிப்ஸ் ரெடி. தேவையான அளவு உப்பு மற்றும் காரம் சேர்த்து, சூடு ஆறியதும் பேக்கிங் செய்யவேண்டும்.
தரக்கட்டுப்பாடு!
எல்லாத் தொழிலுக்கும் தரம் முக்கியம் என்றாலும், சிப்ஸ் தயாரிப்பு என்பது உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் கூடுதல் அக்கறையோடு தரமாகவும், சுகாதாரமாகவும் செய்ய வேண்டும். இத் தொழிலைத் தொடங்கும்முன் உணவு பதப்படுத்தல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழைப் பெறுவதுபோல, உங்கள் தயாரிப்புக்கு பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்) தரச் சான்றிதழ் வாங்குவது அவசியம். அதன் மூலம் உங்கள் தயாரிப்பு மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரிக்கும்.
நிலம் மற்றும் கட்டடம்!
இத்தொழிலைத் தொடங்க சுமார் 250 சதுர அடி இடம் வேண்டும். இதில் 125 சதுர அடிக்கு கட்டடம் கட்டவும், 75-80 சதுர அடியில் குடோன் மற்றும் பேக்கிங் அறைக்கு என ஒதுக்கிக் கொள்ளலாம். நிலத்தின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாயாகவும், கட்டடம் கட்ட மதிப்பு 3.15 லட்சம் ரூபாயாகவும் திட்டமிடலாம். இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்தது.
இயந்திரம்!
300 வேலை நாட்களில் இரண்டு ஷிப்ட்களாக வேலை பார்த்தால் ஆண்டுக்கு 50 டன் சிப்ஸ் தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்கள் கவுஹாத்தி, கொல்கத்தா, கோயம்புத்தூர், சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது.
அத்தியாவசிய தேவைகள்!
தினசரி 10 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
மூலப்பொருட்கள்!
உருளைக்கிழங்கு தமிழ்நாட்டில் ஊட்டியில் கொள்முதல் செய்யலாம். நேந்திரன் வாழை கன்னியாகுமரி, திருச்சி, கேரளாவில் கிடைக்கிறது. மற்ற பொருட்களான உப்பு, காரம், எண்ணெய் அனைத்தும் சுலபமாக கிடைப்பதுதான். நமது ஆண்டு உற்பத்தி 50 டன் எனில் உருளைக்கிழங்கு 44 டன், நேந்திரன் 25 டன் தேவைப்படும். உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரிக்கும்போது 30 சதவிகிதமும், நேந்திரன் சிப்ஸில் 20 சதவிகிதமும் கழிவு ஏற்படலாம்.
வேலையாட்கள்!
சிப்ஸ் தயாரிக்கத் தெரிந்தவர்கள்- 2
பேக்கிங் வேலையாட்கள்- 2
உதவியாளர்கள் - 2
விற்பனையாளர் - 1
செயல்பாட்டு மூலதனம்!
முதல் வருடத்தில் 60 சதவிகித உற்பத்தித் திறனுக்கு செயல்பாட்டு மூலதனம் 1.40 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
சிறிய அளவிலும், கொஞ்சம் பெரிய அளவிலும் இத்தொழிலைச் செய்ய நினைப்பவர்கள் தாராளமாக இறங்கலாம். தரம், சுவை, வாடிக்கையாளர் சேவை என ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் சிப்ஸ் தயாரிப்புத் தொழில் உங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : இரா. கலைச்செல்வன்
முகமது நிஷாத்,
கேரளா ஹாட் சிப்ஸ், சென்னை
''எல்லோரும் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது. சுவையில் விட்டுக் கொடுக்காமல் இருந்தால்தான் மார்க்கெட்டில் நிலைக்க முடியும். முழுக்க முழுக்க கைகளாலும் இத்தொழிலை செய்யலாம்; இயந்திரங் களின் உதவியோடும் செய்யலாம். குறைந்த அளவிலான உற்பத்தி எனில் இயந்திரங்கள் தேவை யில்லை. கொஞ்சம் பெரிய அளவில் இத்தொழிலை செய்ய நினைக்கிறவர்கள் இயந்திரங்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது.
குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் இருந்தால்கூட இத்தொழிலில் இறங்கி விடலாம். நல்ல தரமான எண்ணெய்யைப் பயன்படுத்தும் போதுதான் சிப்ஸ் சுவையாக இருக்கும். பாம் ஆயிலில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும். ரீஃபைன்ட் ஆயிலில் செய்தால், ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். எண்ணெய் கறுத்துவிட்டால் மேற்கொண்டு அந்த எண்ணெய்யைப் பயன்படுத்தக்கூடாது. புதிய எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.
எல்லா காலங்களிலும் உருளைக்கிழங்கு தாராளமாகக் கிடைக்கும். இதேபோல் நேந்திரம், மொந்தன், ரோபஸ்டா போன்ற வாழைக்காய்களும் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவது நேந்திரம்தான். சரியான பதத்தில் பொரித்தெடுத்து, தேவையான அளவு மசாலாக்களை சேர்த்து பேக்கிங் செய்தால் வியாபாரிகளே நம்மைத் தேடி வருவர். பத்து, இருபது ரூபாய் அளவில் பேக்கிங் இருந்தால் நிறைய விற்பனையாகும்; நல்ல லாபமும் கிடைக்கும்.''

நன்றி: நாணயம் விகடன்

வாரம் ஒரு தொழில்! இந்த வாரம் : ரெடிமேட் ஆடைகள்

முன்பெல்லாம் இரண்டு வேஷ்டி, இரண்டு சட்டை இருந்தாலே போதும், ஒரு வருட காலத்தை தாராளமாக ஓட்டி விடுவார்கள். ஆனால், இன்று? பீரோ நிறைந்தாலும்கூட மனது நிறைவதில்லை! பண்டிகை காலத்தில் மட்டுமே துணி எடுப்பது என்பதும் பழங்கதையாகி விட்டது. குடும்பத்தோடு வீட்டை விட்டு கீழே இறங்கினால் திரும்பும்போது இரண்டு டிரஸ்ஸாவது எடுத்துவிட்டுதான் வருவது என்ற நிலை இன்றைக்கு. மொத்தத்தில் இன்றைக்கு ரெடிமேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக ஜவுளித் தொழிலில் கொடிகட்டி பறக்கிறோம் நாம். நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுக்கவும் நமது ஆயத்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை நமது ஆயத்த ஆடைகளை வாங்காத நாடுகளே உலகில் இல்லை. ஆனால், அதிக வாய்ப்புகள் இருக்கும் அதேநேரத்தில் இந்தத் துறையில் அதிகளவில் ரிஸ்க்கும் இருக்கின்றன. அந்த ரிஸ்க்குகளைத் தாண்டி, சமாளித்து நின்றுவிட்டால் போதும், நீங்களும் ஒரு தொழிலதிபராகி விடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் பல நகரங்களில் ஜவுளித் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும், சென்னை, ஈரோடு, சேலம், கோவை பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஆயத்த ஆடைகளை நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம். அல்லது மொத்த வியாபாரிகளிடமிருந்து ஜாப் ஆர்டர் வாங்கி, அதை தயார் செய்தும் கொடுக்கலாம். இத்தொழிலுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், இங்கு தயாராகும் ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூரைச் சுற்றியுள்ள ஊர்களில்தான் இந்த தொழிலை தொடங்க முடியும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. ஆனால், உண்மை என்னவெனில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொழிலைத் தொடங்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

மூலப் பொருட்கள்!

டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணி வகை மற்றும் தைப்பதற்கு நூல் ஆகியவை இத்தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களாகும். டெக்ஸ்டைல்ஸ் துறையில் கொங்கு மண்டலம் சிறந்த மாவட்டம் என்பதால் அங்கிருந்து மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், தற்போது திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சாயப்பட்டறை பிரச்னை காரணமாக மூலப் பொருட்களை பவானி மற்றும் அகமதாபாத் போன்ற பகுதிகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

இயந்திரங்கள்!

இத்தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை (தையல் மெஷின்கள் மற்றும் கட்டிங் மெஷின்கள்) ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கான டீலர்கள் கோவை, சென்னை நகரங்களில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனித் தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களே அசெம்பிள் செய்து கொடுத்து விடுகிறார்கள்.

முதலீடு!

இத் தொழிலைச் செய்வதற் கான நிலம் மற்றும் கட்டடத்தை சொந்தமாகவோ அல்லது குத்த கைக்கோ எடுத்துக் கொள்ளலாம். இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படும்.

ஃபைனான்ஸ்!

இத்தொழிலைத் தொடங்க நினைக்கிறவர் தனது முதலீடாக 5%, அதாவது 30,000 ரூபாய் வரை போட வேண்டும். மீதியை கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மானியம்!

இந்த தொழிலானது பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும்.

வேலையாட்கள்!

நல்ல திறமையான வேலையாட் கள் 20 பேரும், நடுத்தரமாக வேலை செய்யக்கூடிய பெண்கள் நான்கு பேரும், நிர்வாகம் மற்றும் விற்பனையை கவனித்துக் கொள்ள ஒரு நபரும், சூப்பர்வைசர் மற்றும் மெக்கானிக் ஒரு நபரும் தேவைப்படுவார்கள். எனவே மொத்தம் 26 நபர்கள் வரை தேவைப்படுவார்கள்.

தயாரிக்கும் முன்...

டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணிகளை வாங்கிச் சேகரித்துக் கொள்ள வேண்டும். துணிகளின் தரம் சரியாக இருக்கிறதா? கலர் மங்கியிருக்கிறதா? அல்லது வேறு வகையில் சேதம் ஏதும் ஏற்பட்டிருக் கிறதா என்பதைப் பார்த்து ஆய்வு செய்த பின்பே தைப்பதற்கு அனுமதிக்க வேண்டும். காரணம், நமது தயாரிப்பில் டேமேஜ் இருக்கும் பட்சத்தில் அது மீண்டும் நம்மிடமே வந்து சேரும். இந்த இழப்பு வராமல் இருக்க வேண்டுமெனில், தரத்தில் கவனமாக இருப்பது அவசியத்திலும் அவசியம்!

பிளஸ்!

ஏற்றுமதிக்கு அதிகம் வாய்ப்புள்ள தொழில். பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து செய்வதற்கு ஏதுவானத் தொழில் என்பதால், ஒளிமயமான எதிர்காலம் இத்தொழிலால் உண்டு.

மைனஸ்!

திருப்பூர் சாயப்பட்டறை தொழில் சார்ந்த பிரச்னைகளும், தேவையான ஆட்கள் கிடைக் காமல் இருப்பதும், பருத்தி நூல் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு களும் இத்தொழிலில் இருக்கும் மிகப் பெரிய சவால்கள்.

ஆனால், இந்தப் பிரச்னைகளை மட்டும் சமாளித்து விட்டால் நிச்சயம் வெற்றி காணலாம்.

நன்றி -பானுமதி அருணாசலம்

வெங்கடேஷ், குளூம் ஓவர்சீஸ், கோவை.

நான் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர். இத்தொழிலை ஆரம்பித்தபோது அதில் எனக்கு நிறைய அனுபவமில்லை. பிற்பாடு அனுபவத்தில்தான் தெரிந்து கொண்டேன். அதனால், இப்போது இருக்கக்கூடிய போட்டியிலும் சூழ்நிலையிலும் இத்தொழிலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதற்குபிறகு களத்தில் இறங்குவது நல்லது.

இத்தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் 2,500 சதுரடி இடம் தேவைப்படும். தொடக்க முதலீடாக ஐந்து லட்சம் ரூபாய் தேவை. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் போட்டு பெரிய மற்றும் நடுத்தர கம்பெனிகளில் இருந்து ஜாப் ஆர்டர் வாங்கிச் செய்வதில் ஆரம்பித்து, பின்பு மெள்ள விரிவுபடுத்திக் கொள்ளலாம். எடுத்த எடுப்பிலேயே ஏற்றுமதி ஆர்டர் என்று இறங்கத் தேவையில்லை. காரணம் ஏற்றுமதி செய்வதில் ரிஸ்க் அதிகம்.

லோக்கல் மார்க்கெட்டில் ஆண்கள் ஆடைகளில் மட்டுமே பிராண்டுகளின் ஆதிக்கம் இருக்கிறது. தவிர, பெண்கள் அணியும் ஆடைகளிலும், ஆண்களின் இரவு நேர மற்றும் குழந்தைகள் ஆடைகளிலும் இதுவரை பிராண்டுகளின் ஆதிக்கம் பெரிதாக இல்லை. முடிந்தால் நீங்களேகூட ஒரு பிராண்டை புரமோட் செய்யலாம். இதுபோன்ற அறியப்படாத வாய்ப்புகள் இதில் மிக அதிகம்.

இந்த தொழிலில் நமக்கு இப்போது மிகப் பெரிய போட்டியாக இருப்பது சீனாதான். ஆனால், சில விஷயங்களில் நாம் கொடுக்கும் தரத்தை அவர்களால் தர முடிவதில்லை. எனவே, அந்த போட்டியை நினைத்து நாம் பயப்படாமல் தரத்தை இன்னும் உயர்த்தி, விலையைக் குறைத்து கொடுத்தால் நமக்கு எப்போதும் நல்ல எதிர்காலம்தான்!.

திங்கள்

பேப்பர் கப் தயாரிக்கலாம் வாங்க!!

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.
சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை.
சந்தை வாய்ப்பு!
டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும் பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.
தயாரிப்பு முறை!
மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி!
முதலீடு!
இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.
மூலப்பொருள்!
இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும்.
கட்டடம்!
இந்த பிஸினஸுக்கு அதிகளவில் இடம் தேவைப்படாது. குறைந்தபட்சம் 350 சதுரடி இடம் போதுமானது. கப்களைத் தயார் செய்யும் இடமும் சொந்தமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு இடம் கிடைத்தால்கூட போதுமானது. வழியில்லை எனில் வீட்டிலேயேகூட இயந்திரத்தை நிறுவி தயாரித்துக் கொள்ளலாம்.
இயந்திரம்!
பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டி லேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
மானியம்!
பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. .
உற்பத்தித் திறன்!
ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.
வேலையாட்கள்!
திறமையான வேலையாட்கள் - 2, சாதாரண வேலையாட்கள் - 8, மேலாளர் - 1 , விற்பனையாளர் - 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும்.
மின்சாரம்!
ஒரு நாளைக்கு 69 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.. ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால், 90% உற்பத்தித் திறனுக்கு 18,662 யூனிட் வரை செலவாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இயந்திர பயன்பாடு இருக்கும்.
பிளஸ்!
* ஆண்டு முழுவதும் தேவை இருக்கும்.
* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. .
ரிஸ்க்!
* பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம்.
* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும்.
* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.
அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி குழுக்கள் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம்.
''படிப்பே தேவையில்லாத பிஸினஸ்!''
பிரசன்னா ஏ.வி.பி. பேப்பர்ஸ், திருச்சி
''இன்றைய தேதியில் பேப்பர் கப் தயாரிப்பு, போட்டியே இல்லாத தொழில் எனலாம். உள்ளூர் தேவையில் 5%கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. பெரிய டெக்னிக்கல் அறிவு தேவையில்லாத தொழில். படிப்பறிவு இல்லாத பெண்கள்கூட இதில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். புதிதாக இந்தத் தொழிலில் இறங்குபவர்கள்கூட நல்ல லாபம் பார்க்க முடியும்.
சந்தை வாய்ப்பு என்று பார்த்தால் சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 கப்கள் தேவைப்படும். வெறும் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாதம் 60,000 வரை லாபம் பார்க்கலாம். மெஷின் ஆபரேட்டருக்கு 15 நாட்கள் பயிற்சி போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு மெஷினில் அறுபதாயிரம் கப்கள் வரை தயாரிக்கலாம். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் என வைத்துக் கொண்டாலும் தினசரி லாபமாக 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஒரே மெஷினில் எல்லா அளவு கப்களும் செய்யலாம்.
உள்ளூர் என எடுத்துக் கொண்டால் 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள கப்புகளே போதும். ஏற்றுமதி செய்யும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த தரம் மாறுபடும். உதாரணத்துக்கு, அமெரிக்காவுக்கு 330 ஜி.எஸ்.எம். கப்கள்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.''
- க.ராஜீவ்காந்தி
Thanks - பானுமதி அருணாசலம்.