ஞாயிறு

முயல் வளர்ப்புத் தொழில்

 முயல் வளர்ப்பு

அங்கோரா முயல் வளர்ப்பு

 

Rabbit

முயல்‌ வளர்ப்புக்கு ஏற்ற நல்ல முயல்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும்‌. அதிக லாபம் பெற தகுந்த இனங்களைத் தேர்வு செய்வது முக்கியம். வெள்ளை ஜெயண்ட்‌, சாம்பல்‌ ஜெயண்ட் மற்றும்‌ அங்கோரா இனங்கள்‌ நல்ல தேர்வாக இருக்கும்‌. இவற்றில்‌ அங்கோரா இன முயல்களை வெப்பம்‌ குறைந்த மலைப் பிரதேசங்களில்‌ மட்டும்‌ வளர்க்க வேண்டும்‌.

இனப்பெருக்கம்‌ செய்ய பயன்படும்‌ ஆண்‌ மற்றும்‌ பெண்‌ முயல்கள்‌ வெவ்வேறு இனமாக, ‌ எந்த குறைபாடும்‌ இல்லாத முயல்களை தேர்வு செய்ய வேண்டும்‌. குறைந்த எண்ணிக்கையில்‌ உள்ள முயல்களுக்கு ஒற்றை அடுக்கு கூண்டு அமைப்பு போதுமானது. அதிகளவில்‌ வளர்க்கும்‌ முயல்‌ பண்ணைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு அடுக்குள்ள கூண்டு அமைப்புடைய கூடாரங்களை நீங்கள்‌ அமைக்க வேண்டும்‌. முயல்‌ வளர்க்கும்‌ குடில்களை ஆஸ்பெட்டாஸ்‌ அல்லது தென்னங்கீற்று மூலம் கூரை அமைக்க வேண்டும்‌. மற்ற இரை தேடும்‌ பறவைகளும்‌ உள்ளே நுழையாதவாறு கூண்டை பாதுகாப்பாக அமைக்க வேண்டும்‌.

வெப்பநிலையைப் பொறுத்தவரையில் 10 முதல் 30 டிகிரி செல்ஸியஸ்‌ அளவும்‌ ஈரப்பதம்‌ 60 முதல் 70 சதவீதம் அளவும் இருக்கும் அளவுக்கு இடங்களைத்‌ தேர்வு செய்ய வேண்டும்‌. முயல்களுக்கு சுத்தமான நீர்‌, மின்சாரம்‌, தீவனம், மருத்துவ உதவி ஆகியவை அருகில்‌ இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்‌. ஓவ்வொரு முயலுக்கும்‌ போதுமான அளவில் இடம்‌ ஒதுக்க வேண்டும்‌. கூண்டை கிருமிகள் இல்லாமல் சுத்தமாகப்‌ பராமரிக்க வேண்டும்‌.

முயலுக்கு தீவனம்‌ மற்றும்‌ தண்ணீர்‌ கொடுப்பதற்கு சிறிய பாத்திரம்‌ கட்டிவிட வேண்டும்‌. கூண்டுகளை தினந்தோறும்‌‌ செய்ய வேண்டும்‌. முயல்கள்‌ அதிகளவில்‌ இனவிருத்தி செய்யும்‌ தன்மையுடையவை. பலதரப்பட்ட தீவனங்களை அதிகளவில்‌ உணவாக எடுத்துக்‌ கொள்வதால்‌ சிறிய தொகையை முதலீடு செய்து முயல்களை வளர்க்கலாம்‌. ஆரம்ப முதலீடு மிகவும்‌ குறைவு தான். மிக விரைவில்‌ லாபம்‌ கிடைக்கும். முயல்‌ வளர்ப்பு ஆரம்பித்த 6 மாதங்களிலேயே உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில்

அட்டைப் பெட்டிகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. கடைகளிலும் வீடு மாறுவதற்கும் இது அதிகமாகத் தேவைப்படுகிறது. சிறிய, பெரிய என அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்வதற்கு ஒரு அட்டை பெட்டி தேவை. அட்டைப்பெட்டிகளுக்கு சீசன் கிடையாது. எனவே நீங்கள் வருடத்தின் அனைத்து நாட்களிலும் இதைத் தயாரிக்கலாம்; விற்பனை செய்யலாம். அதன் தேவை ஒவ்வொரு மாதமும் இருக்கும். இந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆன்லைன் வணிகத்திலும் இது அதிகமாகத் தேவைப்படுகிறது.

பயன்பாடு!

பயன்பாடு!

அட்டைப் பெட்டிகள் சீரான பேக்கிங் மற்றும் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இது புத்தகங்களை சேர்த்து வைப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதன் கனமான தயாரிப்பு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்ல பயன்படுகிறது. இதற்கு, கிராஃப்ட் பேப்பர் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இதன் சந்தை விலை கிலோ 40 ரூபாய். சிறந்த தரமான கிராஃப்ட் பேப்பர் பயன்படுத்தப்படுவதால் தரமான அட்டைப் பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன.


என்ன தேவை?

இந்தத் தொழிலைத் தொடங்க, உங்களிடம் சுமார் 5000 சதுர அடி இடம் இருக்க வேண்டும். இதுதவிர இதற்கான ஆலையும் அமைக்க வேண்டும். பின்னர், பொருட்களை வைக்க ஒரு சேமிப்புக் கிடங்கு தேவைப்படும். அட்டைப்பெட்டி உற்பத்திக்கு உங்களுக்கு இரண்டு வகையான இயந்திரங்கள் தேவை.


முதலீடு எவ்வளவு?

இதை சிறு தொழிலாக நீங்கள் ஆரம்பிக்கலாம். பெரிய அளவில் கூட ஆரம்பிக்கலாம். அது முதலீட்டைப் பொறுத்தது. இந்தத் தொழிலை பெரிய அளவில் தொடங்க வேண்டுமென்றால் குறைந்தது 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதே சமயம் முழுக்க முழுக்க தானியங்கி இயந்திரங்கள் மூலம் தொடங்கினால் ரூ.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.


லட்சங்களில் லாபம்!

இந்தத் தொழிலில் உங்களுக்கான லாபமும் பெரிய அளவில் இருக்கும். உண்மையில், இந்த தொழிலுக்கான தேவை இப்போது அதிகமாக உள்ளது. எனவே இதில் லாபமும் அதிகமாக இருக்கும். இதை சிறந்த முறையில் செய்து நல்ல வாடிக்கையாளர்களை உருவாக்கினால், இந்த தொழிலை தொடங்கி மாதம் ரூ.10 லட்சம் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.

சட்ட விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டால், தங்களின் தொழில்சார் உரிமைகளை இழக்க நேரிடும் !

சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி இணையதளங்களில் ஒளிபரப்பாகும் வெப் சீரிஸ்களில் ஆபாசக் காட்சிகள் மற்றும் வசனங்கள் அதிகமாகி வருகின்றன. இதைத் தடுக்க தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்படுமா? என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி., டாக்டர்.கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.


இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதில்: இணையதள செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் டிஜிட்டல் மீடியாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய விதிகளை உருவாக்கி ‘தகவல் தொழில்நுட்ப விதிகள் -2021’ வெளியிடப்பட்டது. அதை நடைமுறைப்படுத்திய அனுபவத்தின் விளைவாக 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் தேவையான திருத்தங்களும் அதில் செய்யப்பட்டது.

இந்த சட்டவிதிகளுக்கு முரணாக நடந்துகொள்ளும் இணையதள ஊடக நிறுவனங்கள் தங்களின் தொழில்சார் உரிமைகளை இழக்க நேரிடுவதுடன் ஐ.டி., மற்றும் ஐ.பி.சி., சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.


ஆபாசம், அருவெறுப்பு, வன்முறை உள்ளிட்ட ஆட்சேபிக்கத்தகுந்த 11 வகையான செயல்களை, விஷயங்களை சமூக வலைதளங்களிலும் இணைய தளங்களிலும் காட்சிப்படுத்துவதை தகவல் தொழில் நுட்பச் சட்டம் -2021 தடை செய்கிறது.


இந்தத் தளங்களைப் பயன்படுத்தும் பயனாளர்களும் தடைசெய்யப்பட்ட இந்த விஷயங்களை பகிரவோ, பதிவேற்றம் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்ப விதிகள் -2021, பிரிவு 3 (1) ன்படி, ஆபாசக் காட்சிகள், படங்கள், அடுத்தவர்களின் உடல்சார்ந்த அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் பகிர்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.


தவறான தகவல்களைத் தருவது, ஒருவரைப் போல போலியான தோற்றத்தை ஏற்படுத்தி அவதூறுகளைப் பரப்புவது, ஆர்ட்டிபிஷியல் இண்ட்டெலிஜென்ஸ் மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் தொழில்நுட்ப படங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.


இப்படி தடைசெய்யப்பட்ட செயல்களை செய்யும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக பாதிக்கப்படும் நபர்களோ, பொதுமக்களோ புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கவும், உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் நீதிமன்றத்திற்கும், அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட அமைப்புகளுக்கும் அதிகாரம் வழங்கவும் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


நாட்டின் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான நட்புறவை பாதிக்கும் செய்திகள், கற்பழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் செயல்பாடுகள் போன்ற குற்றங்களைச் செய்யத்தூண்டும் வகையிலான காட்சிகளை பதிவேற்றம் செய்யும் நபர்களை, அமைப்புகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சமூக வலைதளம் மற்றும் இணையதள நிறுவனங்கள் விசாரனை அமைப்புகளுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் என்பதையும் தற்போது நடைமுறையில் உள்ள தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

போத்து முறையில் மரங்களை வேகமாக வளர்க்க முடியும்

 மரங்களை விரைவில் வளர்க்க வகை செய்யும் தொழில் நுட்பம் குறித்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உழவர் சந்தை துணை வேளாண் அலுவலர் அய்யப்பன்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே, பாப்பநாயக்கன்பட்டி சொந்த ஊர். திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படித்தேன்.


புதுக்கோட்டை மாவட்டம், பிசானத்துார் கிராமத்தில், ஆனந்த ராவ் என்பவர், ஆலமரக் கிளையை வெட்டி, போத்து முறையில் நடவு செய்து, பண்ணையை சோலைவனமாக மாற்றினார். அந்த பகுதியில் பணியாற்றிய போது, ஆனந்த ராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலம் தான், போத்து முறை நடவு பற்றி தெரிந்தேன்.


போத்து என்றால், எங்கள் பகுதியில், மரத்தின் கிளை என, பொருள். ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை போன்ற மரங்கள், போத்து முறைக்கு ஏற்றவை; உதியன், வாதமடக்கி வேகமாக வளரும் தன்மை கொண்டவை. இந்த முறைக்கு தேர்வு செய்யப்படும் மரங்கள், 10 ஆண்டுகள் வளர்ந்தவையாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், கை மணிக்கட்டு கனத்தில், அதிக வளைவு இல்லாமல், நேராக இருக்க வேண்டும். அது, ௮ - ௧௦ அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் கொப்புகளை வெட்டி அகற்றி விட வேண்டும். மரத்திலிருந்து நடவுக்காக வெட்டும் கிளையை, கரும்பு வெட்டுவது போல, சரிவாக வெட்ட வேண்டும்.


இன்று நடப் போகிறோம் என்றால், முந்தைய நாளில் கிளைகளை வெட்ட வேண்டும். நடவுக்கு தாமதமானால், கிளையின் அடிப்பகுதியில் ஈரத்துணி சுற்றி, நிழலில் வைக்கலாம். முன்னதாக, ௪ அடி ஆழம், ௪ அடி சுற்றளவுக்கு குழி தோண்ட வேண்டும். அந்த குழியை, ஒரு வாரம், அப்படியே விட வேண்டும். நடவிற்கு முந்தைய நாள் மாலை, ஒரு குடம் தண்ணீரை அந்த குழியில் ஊற்ற வேண்டும். மறுநாள் காலையில், ௫ கிலோ மக்கிய தொழு உரத்துடன், மேல் மண்ணை கலந்து, குழிக்குள், ௧.௫ அடி உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அந்த குழிக்குள், மரக்கிளை நட்டு, சுற்றிலும் நன்றாக மண் மிதித்து, மண்ணை குவியல் போல வைக்க வேண்டும்.


இல்லாவிட்டால், காற்றின் சலனம், நீர் சலனத்தால், வேர் பிடித்தல் தாமதாகும். கிளையின் உச்சிப் பகுதியில், பசுஞ்சாணத்தை உருண்டை போல பிடித்து வைக்க வேண்டும். அடுத்த, ௪௫ - ௫௦ நாட்களில் இலைகள் துளிர் விடும். வெப்பம் குறைந்த, ஆடி துவங்கி, மார்கழி வரை, இந்த முறையில் மரங்களை நடவு செய்யலாம். இதனால், மரமாக வளரும் காலம் குறைந்து, விரைவில் பலன் கிடைக்கும். பணி ஓய்வுக்குப் பின், கிராமங்களுக்கு சென்று, போத்து தொழில் நுட்பத்தில் நிறைய மரங்கள் வளர்க்க உள்ளேன்.

உடல் உஷ்ணம் மற்றும் உடல் கட்டிகளுக்கு எளிய மருந்து:

உடல் உஷ்ணம்:


சிறுநீர்த் தொற்று இருந்தால் (சிறுநீர் பரிசோதனையில் E-coli என்று வந்தால்) லவங்கப் பட்டையை பொடியாக்கி வைத்துக் கொண்டு காலையிலும் இரவிலும் ஒரு டீஸ்பூன் தயிரோடு சேர்த்து வந்தால் போதும். அலோபதி மருத்துவத்தின் ஆன்ட்டி-பயாடிக்கை எடுத்துக் கொண்டாலும் இதைத் தொடர்ந்து உட்கொள்ளலாம். 

சிறுநீர் தொற்று இல்லாமல் சிறுநீர் போகும்போது   எரிச்சல் இருந்தால் உடற்சூடுதான் முக்கிய காரணமாக இருக்கும். இளநீரில் பனங்கற்கண்டைச் சேர்த்து குடித்தால் போதும். உடல் சூட்டை தணிக்க இது நல்ல வழி.

கூடவே ஒரு கரண்டி நல்லெண்ணையில் உரிக்காத வெள்ளைப் பூண்டு ஒன்றிரண்டு பற்களுடன் குறுமிளகு 6 சேர்த்து கொதிக்க வைத்து ஆறியவுடன் இரண்டு கால் கட்டைவிரல்களிலும் மேலும் கீழுமாக பூசிக் கொண்டால் உடல் சூடு வெகு விரைவில் தணிந்துவிடும். 
  
சுரப்பிகள் வீக்கம் (அ) கட்டி:

பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு மட்டுமில்லாமல் உடலில் எந்தப் பகுதியில் inflammation என்றாலும் அதன் காரணமாக உண்டாகக் கூடிய கட்டிக்கு கழற்சி காய் (நாட்டு மருந்துக் கடைகளிலேயே கிடைக்கும்) பயன் தரக் கூடியது. கழற்சி காயுடன்  ஐந்து குருமிளகு சேர்த்து காலையில் ஒரு காயும் மாலையில் ஒரு காயும் உண்டு வந்தால் எந்தவிதமான கட்டிக்கும் நல்ல பலனளிக்கும்.

இதே அளவிற்கு பலன் தரக் கூடியது நித்யகல்யாணி பூ. காசரளி என்றும் பெயர் உண்டு. உடலில் கட்டி வந்தவர்கள் (கேன்சர் கட்டி உட்பட) பத்து பூக்களைப் பறித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை டம்ளராக சுண்டியவுடன் தினமும் ஒருவேளை குடித்து வந்தால் வித்தியாசத்தை உணரலாம். கொதிக்கும் போது பூவின் ஊதா நிறமானது வெண்மையாக மாறும். இந்தப் பூவையும் உடலில் எந்தப் பாகத்தில் கட்டி வந்தாலும் முயற்சிக்கலாம். 





வியாழன்

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்

 

மடி வீக்க நோய் (Mastitis)

  • கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் - சோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்), மஞ்சள் பொடி-50 கிராம், சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு)

சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு)

மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.

வயிறு உப்புசம் (Bloat)

  • கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.
  • ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் - வெற்றிலை-10 எண்ணிக்கை, பிரண்டை-10 கொழுந்து, வெங்காயம் -15 பல், இஞ்சி -100 கிராம், பூண்டு -15 பல், மிளகு-10 எண்ணிக்கை, சின்ன சீரகம்-25 கிராம், மஞ்சள்-10 கிராம்.

சிகிச்சை முறை : (வாய் வழியாக)

சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கழிச்சல்

நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் மாடுகளுக்கு காணப்படும். வால், பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச் சத்து, தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகள் மாடுகள் சோர்ந்து காணப்படும்.

இதை சரிப்படுத்த ஒரு மாடுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு சின்ன சீரகம் 10 கிராம், கசகசா 10 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 எண்ணிக்கை, மஞ்சள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து அடுத்து நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரு கலவைகளையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தவண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.

கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease)

  • கோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.
  • ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் - தேங்காய் துருவல் -1 தேங்காய் ( பால் கட்டியது), சீரகம் -50 கிராம், வெந்தயம் -30 கிராம், மஞ்சள் பொடி -10 கிராம், கருப்பட்டி (பனை வெல்லம்) -20 கிராம்.

சிகிச்சை முறை – மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக)

  • சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.

கோமார் கால் புண் (Foot lesions)

  • தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : குப்பைமேனி -100 கிராம், பூண்டு-10 பல், மஞ்சள்-100 கிராம், இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்

சிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)

முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.

விட(ஷ)க்கடி

  • விடத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஆடுகளில் தென்படும்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : உப்பு -15 கிராம், தும்பை இலை -15 எண்ணிக்கை, சிறியா நங்கை (இலை), (நில வேம்பு)-15 எண்ணிக்கை, மிளகு-10 எண்ணிக்கை, சீரகம் -15 கிராம், வெங்காயம்-10 பல், வெற்றிலை -5 எண்ணிக்கை, வாழைப்பட்டை சாறு-50 மி.லி.

சிகிச்சை முறை

சின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்

கேள்வி பதில்கள்

கேள்வி: கறவை மாட்டுக்கு மடிவீக்கம் இருக்கிறது? இதற்கு என்ன மருத்துவம் செய்யலாம்? எப்படி தவிர்ப்பது?

பதில்: மாட்டை ஈரத்தில் கட்ட வேண்டாம். கட்டுத்தரையை சுத்தமாக வைத்திருங்கள். பால் கறக்கும் முன்பும், பின்பும் மடியை சுத்தம் செய்யுங்கள். மடி வீக்கம் இருக்கும் போது மஞ்சள், வேப்பம் கொழுந்து, கல் உப்பு மூன்றையும் அரைத்து தடவி விடுங்கள்.

கேள்வி: மாட்டுக்கு வாயில் அடிக்கடி கொப்புளங்கள் வருகின்றன? இவற்றை எவ்வாறு தடுப்பது?

பதில்: கேரம்போர்ட்டிற்கு போடும் போரிக் பவுடர் மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. அந்த பவுடரை வாங்கி தேங்காய் எண்ணெய்யில் குழப்பி தேய்த்து விடவும். பின்னர், வேப்பம் கொழுந்து, மஞ்சள், கல் உப்பை நன்கு அரைத்து கொப்புளங்கள் உள்ள இடங்களில் தடவி விடுங்கள். இதைப்போல் காலில் இருந்தாலும் தடவி விடுங்கள். விரைவில் குணமாகிவிடும்.

ஆதாரம்: கால்நடை பயிற்சி ஆராய்ச்சி மையம்,

கன்று பராமரிப்பு

 

பிறந்தவுடன் கன்று பராமரிப்பு

  • கன்று பிறந்தவுடனேயே, அவற்றின் மூக்கு மற்றும் வாயில் எதேனும் கோழை மற்றும் சளி இருந்தால் உடனே அகற்ற வேண்டும்.
  • கன்று பிறந்தவுடனேயே, தாய் மாடானது கன்றினை நாக்கினால் நக்கும். இவ்வாறு செய்வதால் கன்று மேல் இருக்கும் ஈரம் போவதுடன், இது கன்றின் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டும். குளிர்காலத்தில் தாய் மாடு கன்றினை நக்கவில்லையெனில் உடனே துணி அல்லது சாக்கினைக் கொண்டு கன்றினை துடைக்கவும். மேலும் செயற்கை சவாசம் அளிக்க, அதன் மார்பில் கையினை வைத்து அமுக்கி அமுக்கி எடுக்கவும்.
  • உடம்பிலிருந்து 2-5 செ.மீ விட்டு தொப்புள் கொடியை நறுக்க வேண்டும். மேலும் இதற்கு அயோடின் அல்லது போரிக் ஆஸிட் அல்லது எதாவது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தடவ இட வேண்டும்.
  • தொழுவத்தில் ஈரமான கூளத்தினை அடிக்கடி அப்புறப்படுத்தி, எப்பொழுதும் தொழுவத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறந்தவுடன் கன்றின் எடையை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
  • மாட்டின் மடி மற்றும் காம்பினை கன்று பால் ஊட்டுவதற்கு முன்பு குளோரின் கரைசல் கொண்டு சுத்தம் செய்து உலரவிட வேண்டும்.
  • கன்று அதன் தாயிடமிருந்து சீம்பாலினை ஊட்ட செய்யவேண்டும்
  • கன்று பிறந்த ஒரு மணி நேரத்தில் எழுந்து மாட்டிடன் சீம்பால் ஊட்ட முயற்சி செய்யும். சில மெலிந்த கன்றுகள் தானாகவே சீம்பால் ஊட்டவில்லை என்றால் அவை சீம்பால் ஊட்ட உதவி செய்யவேண்டும்

கன்றுகளுக்கு தீவனமளித்தல்

பிறந்த கன்றுக்கு முதல் மற்றும் முக்கியமான உணவு சீம்பாலாகும். கன்று பிறந்து 3-7 நாட்கள் வரை இந்த சீம்பாலானது மாட்டில் சுரக்கும், இதுவே கன்றின் முதல்நிலை ஊட்டச்சத்தாகும். சீம்பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தொற்று நோய்கள் மற்றும் ஊட்டசத்து குறைபாடுகள் கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். பிறந்த கன்றுக்கு சீம்பால் 3 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

கன்றின் முதல் 3-4 வார வயதில் சீம்பால் மட்டுமன்றி பாலும் மிக அவசியம். மூன்று – நான்கு வார வயதிற்கு பின்பு கன்று தாவரமாவுச்சத்துக்களை ஜீரணிக்கும் திறன் பெற்று விடும். இதன் பின்னரும் பால் கன்றுக்கு கொடுப்பது நல்லது என்றாலும் அதற்கு பதிலாக அளிக்கப்படும் தானியவகை தீவனங்களை விட பாலுக்கான செலவு அதிகமாகும். கன்றுக்கு அளிக்கப்படும் அனைத்து திரவ வகை உணவுகளும் அதன் உடல் வெப்பநிலையில் இருக்குமாறு அல்லது அறை வெப்பநிலையிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். கன்றுகளுக்கு தீவனம் அளிக்கப் பயன்படும் அனைத்து உபகரணங்களும் தூய்மையானதாக இருக்க வேண்டும். மேலும் தீவனமளிக்க பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைத்திருக்கவேண்டும்.

நீர் அவசியம்

கன்றுக்கு எல்லா நேரங்களிலும் தூய்மையான மற்றும் புதிய நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் கன்று அதிகமான நீரை குடிக்காமல் இருப்பதைத் தடுக்க, தண்ணீரை வெவ்வேறு உபகரணங்களில், வெவ்வேறு இடங்களில் வைக்கவேண்டும்.

கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள்

கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனங்களைப் பொறுத்தது. கீழ்க்காணும் தீவனமளிக்கும் முறைகளை கன்றுகளை வளர்க்க கடைபிடிக்கப்படுகின்றன

  • பால் மட்டும் அளித்து வளர்ப்பது
  • ஆடை நீக்கிய பாலில் வளர்ப்பது
  • பால் தவிர்த்த மற்ற திரவங்களான புதிதாக தயாரித்த மோர், புதிதாக தயாரித்த பாலாடையினை பாலிலிருந்து பிரித்தெடுத்தவுடன் பெறப்படும் திரவம், கஞ்சி ஆகியவற்றில் வளர்ப்பது
  • பாலுக்கு பதிலாக பால் மாற்றுதிரவங்களில் வளர்ப்பது
  • தொடக்க நிலை கன்று தீவனங்களில் வளர்ப்பது
  • செவிலி மாடு கொண்டு வளர்ப்பது.
  • பாலில் மட்டும் வளர்ப்பது

0-3 மாத வயதுடைய சராசரியாக 50 கிலோ உடல் எடையை உடைய கன்றுக்கு தேவையான ஊட்டச்சத்துகளாவன

  • உலர் பொருள்
  • 1.43கிலோ
  • மொத்த ஜீரணமாகக்கூடிய கனிம பொருள்
  • 1.60கிலோ
  • புரதம்
  • 315கிராம்

பாலில் அதிகமான கொழுப்பு சத்து இருப்பதால் அதிலுள்ள மொத்த சீரணமாகும் பொருட்களான TDN ன் அளவு அதிலுள்ள உலர்ந்த பொருட்களின் அளவை விட அதிகம் உள்ளது. கன்று பிறந்து பதினைந்தாவது நாளில் புற்களை மேய தொடங்கும். இது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு அரை கிலோவாக இருந்து பின்னர் மூன்று மாத வயதில் 5 கிலோவாக உயரும்.

பசுந்தாள் தீவனத்தை விட, நல்ல தரமான வைக்கோல் (1-2 கிலோ) இந்த வயதில் கன்றிற்கு நல்ல உணவாகும். பதினைந்து நாட்களில் ஒரு நாளைக்கு 0.5 கிலோவில் ஆரம்பித்து பின்னர் மூன்று மாதங்களில் 1.5 கிலோவாக அதிகரிக்கப்படவேண்டும்

மூன்று வாரங்களுக்கு பிறகு முழு பால் கிடைக்கவில்லை யென்றால், ஆடை நீக்கிய பால் அல்லது மோர் அல்லது வேறு பால் மாற்று பொருளை உணவாக அளிக்கலாம்.

கன்றுகளுக்கான அடர்தீவனக்கலவை

  • பால் மற்றும் இதர திரவ உணவுகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனங்களின் கலவையே அடர்தீவனக்கலவையாகும். இது தானியங்களால் ஆன முக்கியமாக மக்காசோளம் மற்றும் ஓட்ஸ் அதிகம் கொண்ட கலவையாகும்.
  • பார்லி, கோதுமை மற்றும் சோளம் போன்ற தானியங்களையும் இந்த அடர்தீவனக்கலவையில் சேர்த்துக்கொள்ளலாம். மொலாசஸ் எனப்படும் கரும்புச்சர்க்கரையை 10 சதவிகிதம் அளவுக்கு இந்த அடர்தீவனக்கலவையில் சேர்க்கலாம்.
  • ஒரு தரமான கன்று அடர்தீவனத்தில் 80% TDN (மொத்த சீரணிக்கும் பொருட்கள்)- ம் மற்றும் 22% CP (புரதம்) இருக்கும்.

கன்றுக்கான உலர்தீவனம்

  • இலைகள் மற்றும் மெல்லிய தண்டினை உடைய பயறு வகைககள் கன்றுகளுக்கு சிறந்த உலர்தீவனமாகும். கன்றுகளின் இரண்டு வார வயதிலிருந்து இதனை கொடுக்கலாம். பயறு வகைத் தீவனத்துடன் கலந்து புல் வைக்கோலும் அளிப்பது சிறந்தது.
  • சூரிய ஓளியில் உலர்த்திய பசுமையான வைக்கோலில் வைட்டமின் A, D மற்றும் B-complex அதிகமாக இருக்கும்.
  • ஆறு மாத வயதில், ஒரு கன்று ஒரு நாளைக்கு 1.5-2.25 கிலோ வைக்கோல் உண்ணும். கன்றின் வயது அதிகரிக்க அதிகரிக்க வைக்கோல் உண்ணும் அளவும் அதிகமாகும்.
  • ஆறிலிருந்து எட்டாவது வாரத்தில் கூடுதலாக பதப்படுத்திய புல்லை கொஞ்சமாகக் கொடுக்கலாம். ஆனால் 6-8 வார வயதுக்கு முன்னரே கொடுக்க தொடங்கினால் கழிச்சலை உண்டாக்கும்.
  • பதப்படுத்திய புல், 4-6 மாதங்களிலிருந்தே நல்ல உலர்தீவனம் ஆகும்.
  • பொதுவாகப் பயன்படுத்தபடும் பதப்படுத்திய சோளம் மற்றும் மக்காச் சோளத் தட்டுகளில் புரதம், கால்சியம் சத்து, மற்றும் வைட்டமின் குறைவாக இருக்கும்.

செவிலிய மாடு முறையில் கன்றினை வளர்த்தல்

  • குறைந்த கொழுப்புச்சத்துடைய ஆனால் அதிக பால் கறக்கக்கூடிய மாட்டுடன், 2-4 தாயற்ற கன்றினை முதல் வாரத்திலிருந்து பால் குடிக்கச் செய்யலாம்
  • உலர்ந்த தீவனத்தினை வைக்கோலுடன் சேர்த்து எவ்வெளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுக்கவேண்டும். இவ்வாறு தீவனமளிக்கப்பட்ட கன்றுகளை 2-3 மாதத்தில் மாட்டிடமிருந்து பிரித்துவிடலாம்.

கஞ்சியில் கன்றினை வளர்ப்பது

கஞ்சி கன்றுக்கு அளிக்கப்படும் திரவ ஆரம்பகால தீவனமாகும். இது பாலுக்கு பதில் அளிக்கப்படுவதால், 4 வாரங்களில் இருந்து சிறிது சிறிதாக பாலை குறைத்து அதற்கு பதில் கஞ்சியினைக் கொடுக்கவேண்டும். இதற்கு 20 தினங்களுக்கு பிறகு முழுவதுமாக பால் அளிப்பதை நிறுத்திவிடவேண்டும்

கன்றுதீவனத்தில் கன்றினை வளர்ப்பது

இம்முறையில் கன்றுகளுக்கு ஆரம்பத்தில் முழு பாலினை அளித்து பின்னர் உலர் தொடக்க தீவன பொருள் மற்றும் தரமான வைக்கோல் மற்றும் தீவனம் தின்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். பின்பு கன்றின் 7-10வது வார வயதில் பால் மறக்க செய்யப்படும்

பால் மாற்று பொருளில் கன்றினை வளர்ப்பது

கன்றுக்கு தேவைப்படும் சத்துகளை கொடுப்பதில் பாலிற்கு சிறந்த மாற்று பொருள் எதுவும் இல்லை. பால் மற்றும் இதர திரவ உணவு தீவனங்கள் தேவையான அளவு கிடைக்கவில்லையென்றால் பால் மாற்று பொருளை உபயோகிக்கலாம். இது பால் கொடுக்கும் அளவு போன்று கொடுக்கப்பட வேண்டும். அதாவது கன்றின் எடையில் 10-12% பால் மாற்றுப்பொருளை உணவாகக் கொடுக்க வேண்டும்

கன்றினை தாயிடமிருந்து பிரித்தல்

  • கன்றினை தாயிடம் இருந்து பிரிப்பது, தீவிர மேலாண்மை பண்ணைகளில் பின்பற்றப்படும் ஒரு மேலாண்மை முறையாகும். இதனால் எல்லா கன்றுகளுக்கும் தேவையான அளவு பால் கிடைக்கச் செய்ய முடியும். மேலும் பால் வீணாவதையும், கன்றுகளுக்கு அதிக அளவு பால் கொடுப்பதையும் தடுக்கமுடியும்.
  • பண்ணையில் பின்பற்றப்படும் மேலாண்மை முறையினைப் பொருத்து கன்றுகளை தாயிடமிருந்து பிரிப்பதை அவை பிறந்தவுடனேயோ, மூன்று வாரத்திலோ, 8-12 வாரத்திலோ அல்லது 24 வார வயதிலோ செய்யலாம். பொதுவாக பண்ணையாளர்கள் 12 வாரத்தில் கன்றினை தாயிடமிருந்து பிரிப்பார்கள். பண்ணையில் பயன்படுத்த வளர்க்கப்படும் காளைக் கன்றுகள், 6 மாதம் வரை தாயுடன் இருக்கும்.
  • நன்கு நிர்வகிக்கப்படும் பண்ணைகளில் அதிக எண்ணிக்கையிலான கன்றுகளை வளர்க்கும்போது அவை பிறந்தவுடனேயே பால் மறக்கச் செய்வது நல்லது.
  • பிறந்தவுடனேயே கன்றுகளை தாயிடமிருந்து பிரித்து பால் மாற்றுப் பொருள் மற்றும் தீவனத்தில் கன்றினை வளர்ப்பதால், பால் மனித உபயோகத்திற்கு சேமிக்கப்படும்.
  • கன்றினை தாயிடமிருந்து பிரித்ததற்குப் பின் கன்றினைப் பிரித்ததில் இருந்து மூன்று மாதங்களில், சீராக கன்று தொடக்க தீவனத்தை அளிக்க வேண்டும். நாள் முழுவதும் நல்ல தரமான வைக்கோல் கொடுக்க வேண்டும். கன்றின் உடல் அளவில் 3% அளவு, ஈரப்பதம் அதிகம் உடைய பதப்படுத்திய புல் பசுந்தீவனங்களை அளிக்கலாம். ஆனால் பசுந்தீவனங்களை அதிகம் கொடுக்கக்கூடாது ஏனெனில் பசுந்தீவனத்தினை அதிகம் எடுத்துக்கொள்ளும்பொழுது கன்றுகள் எடுத்துக்கொள்ளும் மொத்த ஊட்டச்சத்தின் அளவு குறையும்.

கன்றின் வளர்ச்சி

  • அடிக்கடி கன்றின் எடையை பார்த்து அது குறிப்பிட்ட எடையில் வளர்கிறதா என்று பராமரிக்க வேண்டும்
  • முதல் மூன்று மாதங்கள் கன்றுக்கு உணவு அளிப்பது மிக முக்கியமானதாகும்.
  • இந்த சமயத்தில் சரியாக உணவு அளிக்கவில்லையென்றால், 25-30% கன்றுகள் இறந்து விடும்.
  • சினை மாட்டிற்கு சினைப்பருவத்தின் கடைசி 2-3 மாதங்கள் நல்ல தரமான தீவனம் அளிப்பது அவசியம்.
  • பொதுவாக கன்று பிறந்தவுடன் 20-25 கிலோ எடையிருக்கும்.
  • தகுந்த தீவனமளித்தல் மற்றும் குடற்புழு நீக்கம் தவறாமல் செய்தால் சராசரியாக கன்றின் எடை ஒரு மாதத்திற்கு 10-15 கிலோ எடை கூடும்.

போதுமான வீடமைப்பு முக்கியம்

தாயிடமிருந்து பிரித்த கன்றுகளை தனித்தனி தொழுவத்தில் கட்ட வேண்டும். இதனால் ஒன்றை ஒன்று நக்குவது தவிர்க்கப்பட்டு நோய் தொற்று வராமல் இருக்கும். தொழுவம் சுத்தமாகவும், உலர்வாகவும் நல்ல காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். கன்றுகளின் மீது சுத்தமாக காற்று எப்பொதும் படுமாறு தொழுவத்தினை அமைக்கவேண்டும். கன்றுகளுக்கு வசதியாக இருக்கவும், அவற்றின் உடல் உலர்வாக இருக்கவும் கன்றினை கட்டும் இடத்தில் கூளம் இட வேண்டும். கூளமாக வைக்கோல் அல்லது உமி உபயோகிக்கப்படும். வெளிப்புற தொழுவம் பாதி மூடப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் அதிகமான சூரிய வெப்பம் கன்றுகளின் மீது படுவது தவிர்க்கப்படுவதுடன் மழை மற்றும் குளிர்ந்த காற்றிலிருந்தும் கன்றுகள் பாதுகாக்கப்படும். கிழக்கு பக்கம் திறப்பு இருக்கும் தொழுவம், காலை வெயிலினால் வெப்பமாக்கப்பட்டு உச்சி வெயிலில் நிழலால் மூடப்பட்டிருக்கும். மழை இந்த திசையில் இருந்து விழாது.

கன்றுகளை நலமாக வைத்திருத்தல்

பிறந்த கன்றுக்கு நோய்வராமல் காப்பது மிக அவசியம். இதனால் கன்றுகளின் இறப்பு தவிர்க்கப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட கன்றுக்கு சிகிச்சை அளிப்பதை விட அவற்றினை நலமாக பேணுவதற்கு குறைந்த செலவே ஆகும். முறையாக கன்றுகளை கண்காணித்து சரியான உணவு அளித்து, சுத்தமான சூழ்நிலை உருவாக்குவது மிக அவசியம்.

கேள்வி பதில்

1. கன்றுகளுக்கு சீம்பால் அளிப்பதன் முக்கியத்துவம் என்ன?

கன்று ஈன்றபின் சுரக்கும் முதல் பாலே சீம்பால் ஆகும். சீம்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமிருப்பதால் பிறந்த கன்றுகளை நோய்களின்று பாதுகாக்கின்றது. மேலும், சீம்பால் மலமிளக்கியாதலால், உணவு சீரணிக்க உதவுகின்றது. சீம்பாலை கன்று பிறந்த 1 மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள இம்முனோகிளாபுலின் குடலிலிருந்து உறிஞ்சப்படுவது நேரம் ஆக ஆக குறைகிறது.

2. கன்றுகளுக்கு சீம்பால் எந்த அளவில் அளிக்கப்பட வேண்டும்?

பிறந்த அரை மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரையில், கன்றின் உடல் எடையில் 5-8 சதவீதம் அளவிலும், பிறகு 2 மற்றும் 3ம் நாளிலில் கன்றின் உடல் எடையில் 10 சதவீதம் அளவிற்கும் சீம்பால் அளித்திட வேண்டும்.

3. இளங்கன்றுகளுக்கு அளிக்கப்படும் பாலின் அளவு எவ்வளவு?

இளங்கன்றுகளுக்கு அதன் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு பால் தினமும் கிடைத்திட வேண்டும். அதாவது 20-25 கிலோ உடல் எடை உள்ள கன்றுகளுக்கு தினமும் சுமார் 2-2. 5 கிலோ பசுவின் பால் கிடைத்திட உறுதி செய்தல் வேண்டும்.

4. பிறந்த கன்றுகளுக்கு எப்பொழுது குடற்புழு நீக்கம் செய்யலாம் மற்றும் எந்த குடற்புழு நீக்க மருந்துகளை கொடுக்கலாம்?

எருமைக் கன்றுகளுக்குப் பிறந்த முதல் நாளிலேயே குடற்புழுநீக்க மருந்தினை அளிக்க வேண்டும். பசுங்கன்றுகளுக்கு ஒரு வாரத்தில் குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும். முதல் ஆறுமாத வயது வரை பைப்பரசின் மருந்தினை உபயோகிக்காலம். பின்னர் மூன்று மாதத்திற்கொரு முறை சுழற்சி முறையில் குடற்புழுநீக்க மருந்தினை அளிக்க வேண்டும்.  ஆல்பென்டசோல், ஃபென்பென்டசோல், லீவாபிசோல் போன்றவை கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மருந்தினை அளிப்பது நலம்.

5. கன்றுகளுக்கு கொம்பு நீக்கம் எந்த வயதில் செய்யலாம்?

பொதுவாக கன்றுகளுக்கு கொம்பு நீக்கம் கன்று பிறந்த 15 முதல் 20ம் நாட்களில் செய்திட வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு கால்நடை மற்றும் ஆராய்ச்சி மையம்

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

 பப்பாளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தொடக்கத்திலேயே கண்டறிந்து முறையாக கட்டுப்படுத்தி, உரிய மகசூல் பெறலாம்.

விட்டமின் சத்துகள் நிறைந்தும், மலிவு விலையில் கிடைக்கும் பழம் என்பதாலும் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றதாக பப்பாளி உள்ளது. ஆண்டுக்கு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் அளவில் பப்பாளி மகசூல் கிடைக்கிறது.

நோய் அறிகுறிகள்

பப்பாளியில் மாவுப்பூச்சிகள் இலை மற்றும் காய்களில் தாக்குகிறது. இப்பூச்சிகள் தாக்கப்பட்ட இடங்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும். மஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும்.

அதன் மேல், சிவப்பு மற்றும் கறுப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம், இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் கேப்னோடியம் என்றழைக்கப்படும் கருநிற பூசணம் படர்ந்திருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • மாவுப்பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளைத் தனியாக எடுத்து அழித்து வயல்களைச் சுத்தமாக வைக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும் போதே தேவையான பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
  • ஒரு லிட்டர் தண்ணீரில், 5 மில்லி லிட்டர் வேப்பங்கொட்டைச்சாறு (ஏக்கருக்கு 10 கிலோ) என்ற அளவில் தண்ணீரில் கரைத்து, அந்த கலவையைப் பாதிக்கப்பட்ட இலை மற்றும் காய்ப் பகுதிகளில் தெளிக்க வேண்டும்.
  • அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து, அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல், தயோமீத்தாக்சாம் என்ற மருந்தை 2 கிராம் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • குளவி ஒட்டுண்ணியான அசிரோபேகஸ் பப்பாயினை வயலில் விட்டு (ஏக்கருக்கு 50 எண்கள்) கட்டுப்படுத்த வேண்டும். இந்த வழிமுறைகளைக் கையாண்டால், பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.

பப்பாளி பயிரிடும் முறை

 பப்பாளி

பழ வகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், பப்பாளியைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல மகசூலையும், அதிக லாபத்தையும் ஈட்டலாம்

ரகங்கள்

பப்பாளி பயிரிட கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7 மற்றும் கூர்க்கனிடியூ மற்றும் சூரியா இவற்றுள் கோ.2, கோ.5 மற்றும் கொ.6 பப்பெயின் எடுப்பதற்கும் உண்பதற்கும் உகந்தது. கோ.3, கோ.7 இருபால் ரகங்களாகும்.

மண், தட்பவெப்பநிலை

பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக் கூடியது. எனினும் களிமண் பூமியில் சாகுபடி செய்ய முடியாது. சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் சற்றே வெப்பம் அதிகமாக நிலவும் இடங்களில் நன்கு வளரும். மலைப் பகுதிகளில் சுமார் 1,200 மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வடிகால் வசதி இருப்பதன் மூலம் தண்டுப் பகுதியில் ஏற்படும் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

பருவம்

ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். இருப்பினும் ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் பப்பாளி சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்து கொள்ள வேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. நீளம், 45 செ.மீ. அகலம் மற்றும் 45 செ.மீ. ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும். பின்பு குழிகளில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி நாற்றுக்களை குழியின் மத்தியில் நடவேண்டும்.

விதைப்பு

ஒரு ஹெக்டருக்கு 500 கிராம் விதைகள் போதுமானது.

நாற்றாங்கால்

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலிதீன் பைகளில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலிதீன் பையில் நான்கு விதைகள் விதைக்க வேண்டும். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றுக்கள் 60 நாளில் நடவுக்குத் தயாராகி விடும்.

நீர் நிர்வாகம்

வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஆண், பெண் செடிகளை நீக்கியவுடன் செடி ஒன்றுக்கு 50 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும். மேலும் செடி ஒன்றுக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா அளிக்க வேண்டும். உரம் இட்ட பின் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

நுண்ணோட்டச் சத்து

துத்தநாக சல்பேட் 0.5 சதவீதம் மற்றும் போரிக் அமிலம் 0.1 சதவீதம் என்ற கலவையை நடவு செய்த 4ஆவது மற்றும் 8ஆவது மாதங்களில் தெளிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும்.

பின்செய் நேர்த்தி

செடிகள் பூக்க ஆரம்பிக்கும்போது, 15 முதல் 20 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியை விடவேண்டும். ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு விட்டு இதர ஆண், பெண் செடிகளை நீக்கவேண்டும். கோ.3 மற்றும் கோ.7 போன்ற இருபால் ரகங்களில் இருபால் பூக்கள் கொண்ட மரங்களை மட்டும் வைத்துக் கொண்டு பெண் மரங்களை நீக்கிவிடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு

நாற்றாங்காலில் நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஒரு பாலிதீன் பையில் ஒரு கிராம் கார்போ பியூரான் 3 ஜி குருணை மருந்தை இடவேண்டும்.

வேர் அழுகல் நோய்

செடியின் மேல் பாகத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கி நின்றால் இந்நோய் பரவும். இந்நோய் தாக்கிய செடிகள் வாடி இறந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த 0.1 சதவீத போர்டோக் கலவை அல்லது 0.2 மயில்துத்தநாகம் கரைசலை வேர்கள் நனையுமாறு ஊற்ற வேண்டும். 15 நாள் இடைவெளியில் 2 அல்லது 4 முறை உபயோகிக்க வேண்டும்.

அறுவடை

பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக வரும் போது அறுவடை செய்யவேண்டும்.

வயது

24 முதல் 30 மாதங்கள்.

மகசூல்

கோ.2 ரகமாக இருந்தால் ஹெக்டேருக்கு 250 டன்களும், கோ. 3 ரகத்தில் 120 டன், கோ.5 ரகத்தில் 250 டன், கோ. 8 ரகத்தில் 160 டன், கோ.7 ரகத்தில் 225 டன்களும் மகசூல் கிடைக்கும்

கேள்வி பதில்

1. உண்பதற்கு உகந்த பப்பாளி இரகங்களை கூறவும்

கோ3, கோ-7

2. உண்பதற்கு மற்றும் பப்பையின் என்னும் நெதி பொருள் எடுக்க உகந்த பப்பாளி இரகங்கள் யாவை?

கோ-2, கோ-5, கோ-6

3. பப்பையின் என்றால் என்ன?

முதிர்ச்சியடையாத பப்பாளி காய்களிலிருந்து (75-90 நாட்கள்) எடுக்கப்படும் நெதிப்பொருளையே பப்பையின் என்று அழைக்கின்றோம்.

4. பப்பையின் பயன்கள் யாவை?

டுட்டி-புட்ரூட்டி என்னும் பொருளை அடுமனைப் (பேக்கரி) பொருட்களில் சேர்க்கவும் மாமிசப் பண்டங்களை எளிதில் வேக வைக்கும் சிறப்பு தன்மையினையும் கொண்டதாகும்.

5. ஒரு எக்டரிலிருந்து எவ்வளவு பப்பையின் கிடைக்கும்?

600-800 கிலோ

6. பப்பையின் எடுத்த காய்களை/பழங்களை சந்தைகளில் விற்பனை செய்ய முடியமா?

விற்பனை செய்யலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை

தொழில் முனைவோர் பண்புகள்

 

தொழில்முனைவோர் பண்புகள் என்றால் என்ன?

ஒரு தொழிலை சிறப்பாக செய்து முடிப்பதற்கு தொழில்முனைவோர் அடிப்படையாக பெற்றிருக்கவேண்டிய முக்கியமான குணாதிசியங்களை தொழில்முனைவோரின் சீரிய பண்புகள் என்றழைக்கப்படுகின்றது. புதிதாக தொழில் முனைய விழைவோர் அனைத்து குணநலன்களையும் கொண்டவராக இருக்கமாட்டார். அவரிடம் இல்லாத குணநலன்களை படிப்படியாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தொழில்முனைவோர் பெற்றிருக்கவேண்டிய சீரிய பண்புகள்

  1. தன்னம்பிக்கை
  2. தன் மீதும் தனது திறமை மீதும் பூரண நம்பிக்கை வைத்தல்,

    ஒரு காரியத்தையோ, சவாலையோ வெற்றிகரமாக முடிக்க சந்திக்க தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வைத்தல்,

    எதிர்ப்பு இருந்தாலும் தனது முடிவில் உறுதியாக இருத்தல்,

    மற்றவர்கள் செய்யத் தயங்கும் ரிஸ்க்கான செயலை செய்தல்.

  3. புதிய சிந்தனை, சுய செயல்பாடு
  4. காரியத்தை முடிக்க சாதாரணமாக தேவைப்படுவதை விட கூடுதல் முயற்சி எடுத்தல்,

    பிறராலோ அல்லது சூழ்நிலையாலோ உந்தப்படுவதற்கு முன்பே காரியத்தில் இறங்குதல்,

    தொழிலை புதிய இடங்களில் புதிய பொருள்கள்-புதிய சேவை மூலமாக விரிவாக்க செயல்படுவது.

  5. தகவல் சேகரித்தல்
  6. இலக்கை அடைய தேவையான தகவல்களை சுயமாக சேகரிக்க முற்படுவது.

    சுயமாக சந்தை ஆய்வு செய்தோ, வல்லுநர்களை கலந்தாலோசித்தோ, தெரிந்தவர்கள் மூலமாகவோ தொழிலுக்கு பயனுள்ள தகவல்களை முயன்று சேகரித்தல்.

  7. வாய்ப்புகளை உருவாக்குதல்- பயன்படுத்துதல்
  8. வாய்ப்புகளுக்காக சூழ்நிலையை கவனித்தல், கண்டறிதல் உடனடியாக அதை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்தல்,

    அசாதாரணமான வாய்ப்புகளையும் உருவாக்கி தொழிலுக்குத் தேவையானவற்றை அடைதல்.

  9. முறையான திட்டமிடல்
  10. இலக்கை அடைய சரியான படிப்படியான திட்டமிடல்

    பெரிய செயலை சிறிய சிறிய செயல்களாக மாற்றி எளிதில் முடிக்கும் திறமை.

    தடைகளை முன்னறிந்து திட்டமிடல்,

    சீரான மற்றும் முறையான செயல் ஆற்றல்

  11. விடா முயற்சி
  12. தடைகளை தாண்டி இலக்கை அடைய திரும்பத் திரும்ப செயல்படுதல்,

    பெரிய தடை வரும்போதும் மனம் சோராது செயல்படுதல்,

    புதிய செயல்கள் மூலம் தடைகளை உடைத்தல்.

  13. பிறரை தன்வயப்படுத்துதல்
  14. பிறரை தனது பொருளையோ, சேவையையோ வாங்க வைத்தல்,

    நிதி உதவியோ அல்லது வேறு வகையான உதவியையோ தர சம்மதிக்க வைத்தல்

    தனக்கு – தொழிலுக்கு சாதகமாக நடக்க வைத்தல்.

  15. செல்வாக்கு யுக்திகளை பயன்படுத்துதல்
  16. பலவிதமான யுக்திகளை பயன்படுத்தி பிறரை சாதகமாக நடக்க வைத்தல்,

    புதிய தொழில் வாய்ப்புகளை உண்டாக்குதல், செல்வாக்கு மிக்க நபர்களை பயன்படுத்திக் கொள்ளுதல்

  17. தரத்திற்கான முனைப்பு
  18. தனது தொழிலில் தற்போதுள்ள தரத்தையோ அல்லது அதையும் விட மேம்பட்ட தரத்திலோ பொருளை- சேவையை தர முனைப்புடன் செயல்படுதல்,

    தனது பொருளையும் மற்ற போட்டியாளர்களின் பொருளையும் ஒப்பிட்டு தரத்தை மேம்படுத்த எப்போதும் முயலுதல்.

  19. செயலை முடிக்க முனைப்பு
  20. எடுத்துக் கொண்ட செயலை சொந்த செளகரியங்களையும் தியாகம் செய்து எப்பாடுப்பட்டாவது முடிக்க அரும்பாடு படல்.

    செயலில் இறங்கும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு முழு பொறுப்பு எடுத்துக் கொள்ளல்.

    வேலையாட்களோடு தோளோடு தோள் கொடுத்து நின்று செயலை முடித்தல்.

    வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை கொடுத்தல்.

  21. செயல்திறன்
  22. வேகமாகவோ, குறைந்த செலவிலோ, குறந்த பொருட்களோடோ ஒரு செயலை முடிக்க வழிவகைகள் கண்டறிதல், செயல்படுத்துதல்,

    செலவு குறித்து பூரண விழிப்புணர்வு கொள்ளல்.

  23. பிரச்சனைகளுக்கு தீர்வு காணல்
  24. இலக்குகளை அடைய புதிய அசாதரணமான தீர்வுகளை கண்டறிதல்,

    தடை வரும்போது மாற்று தீர்வை செயல்படுத்துதல்

    புதிய வழிமுறைகளை தொடர்ந்து கண்டறிய முனைதல்.

  25. வலியுறுத்தல்
  26. பிரச்சனைகளையும், கருத்து வேறுபாடுகளையும் மற்றவர்களோடு தைரியமாக நேரடியாக எடுத்து வைத்தல்,

    மற்றவர்கள் செய்ய வேண்டிய பணிகளை எடுத்துரைத்து வேலை வாங்குதல்.

  27. கண்காணித்தல்
  28. இலக்கை அடைய போட்ட திட்டப்படி செயல்கள் நடைபெறுகிறதா என்று அறிய நடைமுறைகளை உருவாக்குதல் – செயல்படுத்துதல்

    தானே திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்பாடுகளையும் கண்காணித்தல்.

  29. ஊழியர் நலனில் அக்கறை
  30. தொழிலாளிகளின் நலத்தை மேம்படுத்த செயல் ஆற்றுதல்

    அவர்களுடைய சொந்த நலனிலும் அக்கறை கொள்ளுதல்.

ஆதாரம் : தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்