வியாழன்

என்ன படிக்கலாம்....? ஒரு வழிகாட்டும் தொடர்..II

ப்ளஷ் டூ (+2) பரீட்சை முடிந்தாகி விட்டது. இனி எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்று, இந்த வயது ஒவ்வொரு மாணவனின்/மாணவியின் வாழ்க்கையிலும் இது ஒரு முக்கிய நிகழ்வு அல்லது ஒரு திருப்பு முனை என்றும் கூட சொல்லலாம். இனி என்ன செய்வது என்று மாணவர்களுக்கும் சரி, அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சரி, ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய காலமாய் இப்பொழுது இருப்பதால் இதனைப் பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. கலை, அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம் என பல்வேறு துறைகள் இருப்பினும், அதிகப்படியான மக்கள் ஆசைப்படும் துறையான பொறியியல் படிப்பு பற்றிப் பார்க்கலாம்.
ஏனெனில், இப்படிப்பின் வழியாக மென்பொருள் கம்பெனிகளின் மூலம் அதிக சம்பளத்தில் கிடைக்கும் வேலை வாய்ப்பும் இப்படிப்பைத் தேர்ந்த்தெடுப்பதற்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம். முதலில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு என்ன என்ன செய்ய வேண்டும், எந்த கல்லூரியை அல்லது எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதிலிருந்து, கடைசி நோக்கமான வேலைவாய்ப்பு வரையிலும் எல்லாவற்றையும் ஆராய்ந்து இனி வரும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் தெளிவாகக் காணலாம். பொறியியல் படிப்பு குறித்து, ஒரு சாதாரண மாணவனுக்கு உரிய சந்தேகங்களையும், தேவைகளையும் வகைப்படுத்தலாம்.
1. எப்பொழுது/எப்படி விண்ணப்பிப்பது?
2. எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது?
3. கல்லூரிக் கட்டணங்கள் எந்த அளவில் இருக்கும்?
4. படிக்கும் பொழுது கவனம் கொள்ள வேண்டியவை(தேர்வுகள், ப்ராஜெக்ட்)? 5. கல்லூரிக் கலாச்சாரம்
6. மாணவர்கள் மன நலம்
7.கேம்ப்பஸ் (campus interview) இண்டெர்வியூக்கு எப்படித் தயாராவது? இப்படியாக பொறியியல் படிப்பில் சேர்வதில் இருந்து, அதை வெற்றிகரமாக முடித்து குறிக்கோளான வேலையுடனும், இந்த சமூகத்திற்குத் தேவையான ஒரு நல்ல மனிதனாகவும் உருவாக்குவது வரை, எல்லாவற்றையும் ஆராய்ந்து இங்கே சமர்ப்பிக்கவிருக்கிறோம். முதல் கேள்வியான எப்படி/எப்பொழுது விண்ணப்பிப்பது என்பது பற்றிக் காணலாம். வழக்கமாக மார்ச் மாதம் தேர்வுகள் நடைபெற்று மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும். கடந்த வருடம் மே 12 ம் தேதி வெளிவந்தது.பின்னர் உங்கள் மதிப்பெண்களைப் பொறுத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகின்றது மனதில். எப்படி மதிப்பெண்களைப் பொறுத்து விண்ணப்பிப்பது என்று?இக்கேள்விக்கு விடையளிக்க வேண்டும் எனில், முதலில் பொறியியல் படிப்பை அளிக்கும் கல்லூரிகளைப் பற்றிய தெளிவான பார்வை வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் உள்ளது. எடுthதுக்காட்டாக, நமது தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டோமானால், தற்போதைக்கு, நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. உங்களின் +2 மதிப்பென்களைப் பொறுத்தே cut off marks கணக்கிட்டு,ரேங்க் லிஸ்ட்(rank list) என்று ஒன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். இந்த இடத்தில் cut off marks பற்றி சொல்லியே ஆக வேண்டும். Cut off marks calculation(out of two hundred):
1.முதலில் உங்கள் கணிதம்,வேதியியல் மற்றும் இயற்பியல் மதிப்பெண்களை நூற்றுக்கு மாற்றிக்கொள்ளுஙகள்.
2.பின்பு உங்கள் வேதியியல் மற்றும் இயற்பியல் மதிப்பெண்களைக் கூட்டி அதை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள்.
3.இதை கணித மதிபெண்ணோடு கூட்டிக்கொள்ளுஙகள்.
இது தான் இப்பொழுது உங்கள் cut off marks.இந்த முறைப்படியே ரேங்க் லிஸ்டும் தயாரிப்பார்கள். இதன் படியே நீங்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவீர்கள். இந்த முறையானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ்வரும் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும், தேசியப் பல்கலைக்கழகங்களுக்கும் இது பொருந்தாது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அவைகளுக்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தித்தான் சீட் வழங்குவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளல் வேண்டும். இதை விட இன்னும் ஒரு தேர்வு முறையும் மிகப் பெரிய கல்லூரிகளையும் பற்றி கிராமப்புற மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று நிட்சயமாக சொல்ல முடியாது. அதாவது, இந்திய தேசிய தொழில் நுட்பக்கழகம்(IIT) இந்திய தேசிய தொழில் நுட்பக்கழகம்(NIT) இவைகளிலும் பொறியியல் பயிலலாம் என்று எத்தனை மாணவர்களுக்குத் தெரியும்? மற்றும் அதற்கு என்ன என்ன தேர்வுகள் எழுத வேண்டும் என்றும் அதற்கு எந்த வழிக்கல்வி பயின்று இருக்க வேண்டும் என்றும் அதற்கெல்லாம் பண வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படியெல்லாம் தயார்படுதுகிறார்கள் என்றும் இனி வரும் கட்டுரைகளில் இன்ஷா அல்லாஹ் காண்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக