புதன்

சிறந்த சத்துணவின் முக்கியத்துவம்

 திசு வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பராமரிக்கவும், உடலின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும் தேவையான ஆற்றலை உணவு நமக்கு அளிக்கிறது. சத்துணவே ஆரோக்கியத்துக்கு மூலைக்கல்லாகும். எனவே, உடலுக்குத் தேவையான சத்துக்களைத், தேவையான அளவுக்கு, உட்கொள்ளும் உணவு வழங்க வேண்டும். சிசு, குழந்தை, தாய் ஆகியோரின் மேம்படுத்தப்பட்ட நலத்தோடும், நோய்களோடு எதிர்த்துப் போராட வலிமையான நோய்த்தடுப்பு அமைப்போடும், பாதுகாப்பான மகப்பேறு மற்றும் குழந்தைப் பிறப்போடும், பரவா நோய்களின் (நீரிழிவு, மாரடைப்பு, இதய- குருதிக் குழாய் நோய்கள் போன்றவை) குறைந்த ஆபத்துக்களோடும், ஆயுட்காலத்தோடும் சத்துணவு தொடர்புடையது. முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலை மட்டுமே கொடுப்பது வருங்காலத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கு முக்கியம் வாய்ந்ததாகும். வயிற்றுப்போக்கு, மூச்சுக்குழல் தொற்றுக்கள், திடீர்க் குழந்தை இறப்பு நோய்கள், ஒவ்வாமைகள் (ஆஸ்துமா போன்றவை), உடல்பருமன், பிற்கால வாழ்க்கையில் 1 & 2 –ம் வகை நீரிழிவுகள் ஆகிய ஆபத்துக்களைக் குறைக்கும் பலவிதமான நன்மைகள் தாய்ப்பாலுக்கு உண்டு. அது அன்னைக்கு பிற்கால வாழ்க்கையில் மார்பு, கருப்பை புற்றுக்கள், இடுப்பு முறிவு ஆகியவற்றில் இருந்து காப்பளிக்கிறது. தற்கால ஆராய்ச்சிகள் நீண்ட நாள் தாய்ப்பாலூட்டலுக்கும், பின்மாதவிடாய் இதய இரத்தக் குழாய் நோய் ஆபத்துகளுக்கும்  இடையில் உள்ள தொடர்பைப் புலப்படுத்துகின்றன.

இளம் வயது சத்துணவுக் குறைவே மூன்றில் ஒரு பங்கு இளங்குழந்தை மரணத்திற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. தப்பிப் பிழைப்பவர்கள் வளர்ச்சிக் குன்றிப்போகின்றனர். வாழ்க்கையில் அவர்களின் நோய்த்தடுப்பு ஆற்றலும், உடல் உழைப்புத் திறனும், கல்வி வளர்ச்சித் திறனும், வளர்ந்தபின் வேலைத்திறனும் பாதிக்கப்படுகின்றன.  பின்னர் சத்தற்ற உணவும், ஊட்டச்சத்தின்மையும் பரவா நோய்களான (NCDs)  இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்று, மாரடைப்பு, இரத்த ஓட்டத் தடை இதயநோய் போன்றவற்றிற்குக் முக்கிய காரணங்கள் ஆகின்றன.

ஆதாரம்: தேசிய சுகாதார இணையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக