வெள்ளி

40+? செக் செய்து கொள்ளுங்கள்

10 ஆண்டுகளுக்குமுன் ஒரு லட்சம் பெண்களில் 10 பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது. இப்போது இதுவே, 23 பெண்கள் என்று உயர்ந்திருக்கிறது
மார்பகப் புற்று நோயின் பாதிப்பு, உலகம் முழுவதும் கடந்த பல ஆண்டுகளாகவே அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (Indian Council of Medical Research-ICMR) சமீபத்தில் சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் மார்பகப் புற்று நோயின் பாதிப்பு எந்த அளவு உள்ளது என்பது பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதில், பெருநகரங்களில் (metros) இதன் பாதிப்பு இரண்டு மடங்காகி இருப்பது தெரிய வந்துள்ளது. பொதுவாக, பெண்களை அதிக அளவில் பாதிப்பது மார்பகப் புற்று நோயும் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயும். எது முதலிடத்தில் இருப்பது என்பதில் இந்த இரண்டிற்கும் பல ஆண்டுகளாகவே பலத்த போட்டி இருக்கிறது. சமீப ஆண்டுகள் வரை முதலிடத்தில் இருந்த கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயை பின்னுக்குத் தள்ளி 2020ல் மார்பகப் புற்று நோய் முதலிடத்திற்கு வந்துவிடும் என்று தேசிய சுகாதார அமைப்பு கணித்துள்ளது.
இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் அப்போலோ சிறப்பு மருத்துவமனை புற்று நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் டி.ராஜா, "எங்களிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதற்கு, புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகி இருப்பதும் முக்கியக் காரணம்" என்கிறார். சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "10 ஆண்டுகளுக்குமுன் ஒரு லட்சம் பெண்களில் 10 பேருக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது. இப்போது இதுவே, 23 பெண்கள் என்று உயர்ந்திருக்கிறது. அதிலும் மற்ற நகரங்களைவிட சென்னையில் 1.33 சதவிகிதம் இது அதிகம்" என்ற கூடுதல் தகவலைத் தருகிறார்.
‘சரி, விழிப்புணர்வு அதிகரித்ததால்தான் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்ற அளவில் இதை எடுத்துக்கொள்ளலாமா’ என்றால் அதற்கு டாக்டர் ராஜா, "இல்லை, அப்படி ஒரே காரணத்தை மட்டுமே எடுத்துக்கொள்வது கூடாது. உண்மையில் இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில், வாழ்க்கை முறை மாற்றம் இதில் மிக முக்கியம். நிறைய கலோரி, கொழுப்பு சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது, போதுமான உடல் உழைப்பு இல்லாதது, உணவுப் பழக்க மாற்றத்தால் பெண்கள் பருவமடையும் வயது முன்னைக் காட்டிலும் குறைந்திருக்கிறது. இதனால், மெனோபாஸ் வயதும் குறைந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் பெண்களுக்கு சரியான வயதில் திருமணம், குழந்தைப் பேறு என்பது இரண்டாம் பட்சமாகிவிட்டது. இதனால் திருமண வயது, முதல் குழந்தை பிறக்கும் வயது இரண்டும் 30ற்கு மேலாகிவிட்டது.  தாய்ப்பால் கொடுப்பது குறைந்துவிட்டது.
இவையெல்லாம் பொதுவான கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய காரணங்கள். இதுதவிர, மரபியல் காரணங்களும் 10 முதல் 15 சதவிகிதம் பரம்பரைக் காரணங்களும் இருக்கின்றன. உங்கள் ரத்த சொந்தத்தில் இரண்டு பேருக்கு மார்பகப் புற்று நோய் இருந்தால், நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டியது முக்கியம்" என்கிறார். மேற்கத்திய நாடுகளில் மார்பகப் புற்று நோயின் பாதிப்பு 55லிருந்து 70 வயது என்றால், நம் நாட்டில் 40 வயதிற்கு மேலேயே இருக்கிறது.
சிகிச்சை பற்றி தெரிவித்த டாக்டர் ராஜா, "40 வயதிற்கு மேல் எல்லா பெண்களும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஆரம்பத்திலேயே டாக்டரிடம் வந்துவிட்டால் சிகிச்சை எளிது. தற்போது சிகிச்சை முறைகள் மிகவும் நவீனமாகி விட்டன. மார்பகப் புற்று நோய் என்றால், ஆபரேஷன் செய்து முழுமையாக அகற்ற வேண்டியதில்லை. பாதித்த பகுதியை மட்டும் ஆபரேஷன் மூலம் நீக்கிவிடலாம். அதேபோல கீமோ தெரபி, கதிரியக்கம் எல்லாமே மிக நவீனமாகிவிட்டன. புற்று நோய் பற்றி எந்த சந்தேகம் என்றாலும் தயங்காமல் உடனடியாக டாக்டரைப் பார்ப்பது முக்கியம்" என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக